தமிழர்கள்
தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு அதிகாரப் பகிர்வை கோரியுள்ள
நிலையில், மஹிந்த ராஜபக்ஷ மட்டும் நாடு பிரியும் ஆபத்து உள்ளதாகவும்
பிரிவினை அச்சுறுத்தல் காணப்படுகின்றதாக இனவாதத்தை
பரப்பிவருகின்றார் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான
ராஜித சேனாரட்ன செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஒற்றையாட்சிக்குள்
அதிகாரப்பகிர்வு என்ற நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் மாறமாட்டோம்.
தற்போது ஒற்றையாட்சி என்பது ஒரு பிரச்சினையல்ல.
ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தைப் பகிர முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மஹிந்தராஜபக்ஷ
அரசியல் மேடைகளில் இனவாதம் பேசிக்கொண்டிக்கின்றார். நாடு
பிரிந்துவிடும் அபாயம் இடம் பெற்றுள்ளதாகவும் அவர்
கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் இலங்கையிலும், சர்வதேசத்திலும்,
தற்போது எந்தவொரு தரப்பும் தனிநாட்டைக் கோரவில்லை.
முன்னாள் புலிப்
போராளிகள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட தனிநாட்டுக்
கோரிக்கையை கைவிட்டுவிட்டு அதிகாரப்பகிர்வைக் கோரியுள்ளனர். தமிழ்
தேசியக்கூட்டமைப்பும் தனிநாட்டுக்கோரிக்கையை கைவிட்டு
அதிகாரப்பகிர்வையே கோரியுள்ளது. புலம் பெயர் அமைப்புக்களும் இன்று
தனிநாட்டைக்கோரவில்லை. மாறாக அதிகாரப்பகிர்வைக் கோரியுள்ளன.
அந்த வகையில் இன்று
முழுநாடும் அதிகாரப்பகிர்வு குறித்து பேசுகின்றதே தவிர தனிநாடு
குறித்து கோருவதில்லை. மாறாக மஹிந்த ராஜபக்ஷ அரசியல் மேடைகளில்
இனவாதத்தை பேசிக்கொண்டிருக்கின்றார். நாடு பிரியும் ஆபத்து
உள்ளதாகவும், பிரிவினை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்
கூறிக்கொண்டிருக்கின்றார். எனினும் அவ்வாறான எந்தவொரு
அச்சுறுத்தலும் தற்போது இல்லை. உண்மையைக் கூறப்போனால் தனிநாட்டுக்
கோரிக்கைக்கான அச்சுறுத்தல் தற்போது இல்லாமல் போயுள்ளது.
இனவாதத்தை
கக்குவதனால் தான் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார மேடைக்கு
ஏறப்போவதில்லை என்று மஹிந்த சமரசிங்க மிகவும் தைரியமாக
கூறியிருந்தார்.
இன்று மக்கள் அரசியல்
ரீதியில் சிந்திப்பதற்கு முன்வந்துள்ளனர்.
சோற்றுப்பார்சல்களுக்கு வாக்குப்போடும் காலம் மலையேறிவிட்டது.
கணவான் அரசியலை மக்கள் விரும்புவதுடன் அது குறித்து மிகவும் கவனமாக
சிந்தித்து முடிவெடுக்கின்றனர்.
தமிழ்
தேசியக்கூட்டமைப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்டி முறைக்குள்
அதிகாரப்பகிர்வை கோரியுள்ளமை தொடர்பாக பதிலளிக்கையில் எமது
நிலைப்பாட்டை நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக
அறிவித்திருக்கின்றோம். அதாவது ஒற்றையாட்சிக்குள்
அதிகாரப்பகிர்வு என்பதே எமது நிலைப்பாடாகும். அந்த
நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் மாறமாட்டோம்.
தற்போது
ஒற்றையாட்சி என்பது ஒரு பிரச்சினையல்ல. ஒற்றையாட்சிக்குள்
அதிகாரத்தைப் பகிர முடியும். இந்தியாவில் ஒற்றையாட்சியும்
சமஷ்டியும் கலந்த கலப்பு முறைமையே காணப்படுகின்றது.
அது மட்டுமன்றி
இலங்கையில் 1980களில் அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்பட்டது. அப்போது
அது ஒரு ஆபத்தான விடயமாகவும் காட்டப்பட்டது. ஆனால் அது தற்போது
ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தைப் பகிர அனைவரும் முன்வந்துள்ளனர்.
எனவே ஒற்றையாட்சி முறையில் அதிகாரத்தைப் பகிர அரசாங்கம்
முன்வந்துள்ளது. அதாவது அனைவரும் ஒரு இடத்திற்கு வந்துள்ளனர். அந்த
இடத்தில் இருந்து தீர்வு காண்பதே யதார்த்தமானதாகும்.
அரசியல் தீர்வு
சம்பந்தமான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் எனது தனிப்பட்ட நிலைப்பாடு
மிகவும் வித்தியாசமானது. மிகவும் ஆழமானது. ஆனால் தற்போது ஒற்றையாட்சியில்
தீர்வு காண்போம் என அனைத்து தரப்பினரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு
வந்துள்ளமையின் காரணமாக இதனை ஏற்றுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்தார் ராஜித
சேனாரட்ன.
No comments:
Post a Comment