28 October 2015

நாட்டில் சிங்களவர்களுக்கு தமிழர்களுக்கென்று சட்டம் இருக்கக் கூடாது சமமாக கருதப்பட வேண்டும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் சர்வகட்சி மாநாட்டுக்கு தேசிய நல்லிணக்கத்துக்காக பல வருடங்கள் குரல் கொடுத்த கட்சிகளுக் அழைப்பு விடுக்காமல் தேசிய நல்லிணக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை ஆபத்தான விடயமாகும் என்று நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்பினால் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். 

நல்லிணக்கத்தை விரும்பாத கட்சிகளின் செயற்பாடுகளினால் மீண்டும் சிறுபான்மையினருக்கு அநீதியே ஏற்படும் என்றார். தேசிய நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்படடும் கட்சிகளால் நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது அவ்வாறான கட்சிகளால் இனவாதமே வளர்க்கப்படும். மீண்டும் ஆயுதப்போராட்டம் ஒன்று உருவாவதற்கு காரணமாக அமைந்துவிடும் என்றார். 

சர்வகட்சி மாநாடு என்று அழைக்கும் போது அனைத்து கட்சிகளும் அம் மாநாட்டில் பங்குபற்றும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஜெனீவா மனித உரிமை பேரவையின் பிரேரணைக்கு எதிராக சில கட்சிகள் குரல் கொடுத்தன். ஆர்ப்பாட்டங்கள் செய்தன. பிரேரணைக்கு ஆதரவாக ஆர்பாட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் சர்வகட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்ததையடுத்து அதனை ரத்து செய்தோம். இவ்வாறு நாட்டின் தேசிய நல்லிணக்கத்துக்காக செயற்பட்ட கட்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது. 

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யப்போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமையை நாம் வரவேற்கின்றோம். ஆனால் அக் கைதிகள் எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைப்பற்றி ஏற்கனவே கடந்த நல்லாட்சியில் தேசிய நிறைவேற்றுச் சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சபையில் மக்கள் விடுதலை முன்னணி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளும் அங்கம் வகித்திருந்தன. 

நாட்டில் 1971ம் 1989ம் ஆண்டுகளில் இடம்பெற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டது. இவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாகும். 


ஆனால் தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தமிழர்களாகும். ஆனால் அவர்களை விடுதலை செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. நாட்டில் சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் தமிழர்களுக்கு ஒரு சட்டம் என்று இருக்கக்கூடாது. அனைவரும் சட்டத்தின் முன்பு சமமாக கருதப்பட வேண்டும் என்றார் விக்கிரமபாகு கருணாரட்ன.

No comments:

Post a Comment