இனப்பிரச்சினை என்பது ஒரு தேசிய இனம்
அழிக்கப்படுவதனால் ஏற்படுகின்ற பிரச்சினையே. இதற்கான தீர்வு
தமிழ்மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பதாக இருத்தல்வேண்டும்.
இது தவிர, வேறு எத்தீர்வும் உண்மையான தீர்வாக அமையமாட்டாது என
அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் குறிப்பிட்டார். தேசிய
நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கம் அரசியல் தீர்வு பற்றி கொழும்பில்
செவ்வாய் அன்று நடத்திய கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஒருவரை பீடித்த நோய் என்ன என்பதனை அறிந்தால்தான் அந்த
நோய்க்குரிய மருத்துவத்தை சிறப்பாக மேற்கொள்ளமுடியும். அதேபோல
இனப்பிரச்சினை என்றால் என்ன என்பதனை நாம் தெளிவாக
விளங்கிக்கொண்டால்தான் அதற்கான அரசியல் தீர்வையும் வலுவாக எம்மால்
முன்வைக்கமுடியும். மாக்சிய மூலவர்கள் நிலம், மொழி,
கூட்டுவாழ்க்கையை பேணக்கூடிய பொருளாதாரம், கலாசாரம் என்பவற்றைக்
கொண்ட மக்கள் கூட்டத்தை ஒரு தேசிய இனம் என வரையறுத்துள்ளனர்.
அத்தேசிய இனத்திற்கு தங்கள் தலைவிதியை தாங்களே
தீர்மானிக்கக்கூடிய சுயநிர்ணய உரிமை உண்டு எனவும் கூறியுள்ளனர்.
நாம் ஒரு தேசிய இனமாக இருக்கின்றோம் என்ற கூட்டு உணர்வு அல்லது கூட்டுப்
பிரக்ஞைதான் தேசியம் என அழைக்கப்படுகிறது.
தமிழ்மக்கள் ஒரு தேசிய இனமாக இருக்கின்றனர். இதனை சிலர்
தேசம் என்றும் வரையறுப்பதுண்டு. இதனடிப்படையில்
தமிழ்மக்களுக்கு தங்கள் தலைவிதியை தாங்களே நிர்ணயிக்கக்கூடிய
சுயநிர்ணய உரிமையும் உண்டு. தமிழ்மக்கள் தமிழ்த்தேசியம் என்ற தேசிய
உணர்வால் பிணைக்கப்பட்டுள்ளனர். அதனை பல தடவைகள் தெளிவாக
வெளிப்படுத்தியும் உள்ளனர். அவர்களது வாக்களிப்பு முறையும் அதனை
வலுவாக வெளிப்படுத்தியிருந்தது.
தமிழ்த்தேசிய இனத்தின் தாங்கு தூண்களாக இருப்பவை
நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம். அவை திட்டமிட்டு
சிதைக்கப்படுவதுதான் இனப்பிரச்சினையாகும்.
மக்கள்கூட்டத்தையும், தேசிய இனத்தைத் தாங்கும் தூண்களில்
ஐந்தாவதாக கூறிக்கொள்ளலாம். தமிழ்மக்களின் இதுவரைகால போராட்டம்
என்பது தமிழ்த்தேசிய இனத்தின் தாங்கு தூண்களை சிதைப்பவர்களுக்கும்,
அதனை பாதுகாக்க முற்படுபவர்களுக்குமிடையிலான போராட்டமே.
வளர்ச்சிநிலையில் இப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக
எழுச்சியடைந்தது. வல்லரசுகளின் உதவியுடன் இலங்கை அரசு
ஆயுதப்போராட்டத்தை கொடூரமாக நசுக்கியது என்பது வரலாறு. இலங்கையை
மையப்படுத்திய புவிசார் அரசியல் காரணமாக உலகவல்லரசுகளும்,
பிராந்தியவல்லரசும் போராட்டத்தை சிதைப்பதற்கு துணைபோயிருந்தன.
இலங்கை அரசினால் ஆயுதப்போராட்டத்தை
அழிக்கமுடிந்ததே தவிர, தமிழ்த்தேசிய அரசியலை அழிக்க அதனால்
முடியவில்லை. அதனை அழிக்கவேண்டுமானால், தமிழ்த்தேசிய இனத்தைத்
தாங்கிப் பிடிக்கின்ற தூண்களை முழுமையாகச் சிதைக்கவேண்டும்.
ஆயுதப்போர் முடிந்தபின்னர் மஹிந்த அரசாங்கம், இச்சிதைப்பிற்கான
வேலைத்திட்டத்தையே நகர்த்தியிருந்தது. போர் வெற்றியை தமிழ்த்
தேசிய இனத்தை சிதைப்பதற்கு வழங்கப்பட்ட லைசன்ஸ் என மஹிந்த
அரசாங்கம் கருதியது. மன்னராட்சியில் போரில் ஒரு நாட்டை வெற்றி
கொண்ட மன்னர் அந்த நாட்டைப் பச்சையாக சூறையாடுவது போல, ஒரு
பச்சைச்சூறையாடல் தமிழர் தாயகத்தில் இடம்பெற்றது. நிலங்கள்
பறிக்கப்பட்டு, சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கிவிடப்பட்டன.
ஆவணங்களுடன் இருந்த சொந்த நிலங்கள் கூட இதற்கு விதிவிலக்காக
இருக்கவில்லை. நாமல் ராஜ
பக்ஷ வவுனியாவில் நாமல்புர என்றபெயரில்
சிங்களக்குடியேற்றத்தையே உருவாக்கினார். ஆட்சி மாற்றம்
வந்தபின்னரும், இந்த சிதைப்பு வேலைத்திட்டங்கள் நிறுத்தப்படவில்லை.
தமிழ்த் தேசிய இனத்தின் தாங்கு தூண்கள்
சிதைக்கப்படுவது தடுக்கப்படவேண்டுமானால், முன்னர் கூறியதுபோல
தமிழ்மக்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படல் வேண்டும். இந்த
அங்கீகாரம் கிடைத்துவிட்டால் ஏனைய விடயங்கள் எல்லாம்
இலகுவாகிவிடும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கான கோட்பாட்டு
அடிப்படை இதுதான். தமிழ்த்தலைவர்கள் 1985 ஆம் ஆண்டு திம்பு மாநாட்டில்
அரசியல் தீர்வுக்கான கோட்பாட்டு அடிப்படையை முன்வைத்திருந்தனர்.
தமிழ்மக்கள் ஒரு தேசிய இனம், வடகிழக்கு தமிழ் மக்களினுடைய
பாரம்பரியப் பிரதேசம், தமிழ்மக்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு.
எனகின்ற கோட்பாட்டு அடிப்படைகள் மாநாட்டில்
முன்வைக்கப்பட்டிருந்தன.
இவை தவிர, இலங்கை அரச அதிகாரக்கட்டமைப்பும்,
பன்மைத்தன்மையானதாக மாற்றப்படல் வேண்டும். தமிழ்த் தேசிய இனம்,
சிங்களத் தேசிய இனம், மலையகத் தேசிய இனம், முஸ்லிம்
தேசிய இனம் ஆகியவை சமத்துவமாக இணைக்கப்பட்ட அரச
அதிகாரக்கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். இன்று
இலங்கைத் தேசியம் என ஒன்றில்லை. சிங்களத்தேசியம், தமிழ்த்
தேசியம், மலையகத்தேசியம், முஸ்லிம் தேசியம் என்பவையே நடைமுறையில்
உள்ளன. பன்மைத்தன்மையான அரச அதிகாரக்கட்டமைப்பை
உருவாக்குகின்ற போதே இலங்கைத் தேசியத்தையும்
கட்டியெழுப்பமுடியும். தற்போதுள்ள அரசு என்பது அனைத்து
இனங்களையும் பிரதிபலிக்கும் அரசு அல்ல. மாறாக சிங்களத் தேசிய
இனத்தை மட்டும் பிரதிபலிக்கின்ற அரசேயாகும். தேசிய இனங்கள் தனியான
நலன்களை தனியாகவும், கூட்டான நலன்களை கூட்டாகவும் பேணக்கூடிய ஒரு
கட்டமைப்பை உருவாக்குவது இலங்கைத்தேசியத்திற்கு
அவசியமானதாகும்.
பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிட்டது போல
தமிழ்மக்கள் தமிழனாகவும், இலங்கையனாகவும்
வாழவிரும்புகின்றனர். இங்கு இலங்கையனாக இருப்பதற்கு முதல்
நிபந்தனை தமிழனாக இருப்பதை அங்கீகரிப்பதே. இவை அரசியல்
தீர்விற்கான கோட்பாட்டு அடிப்படைகள்.
அரசியல் தீர்வின் நடைமுறைவடிவம் நான்கு விடயங்களை
பிரதானமாக உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். அதிகாரஅலகு,
சுயநிர்ணயஉரிமையைப் பிரயோகிக்கக்கூடிய அதிகாரங்கள், ஏனைய
இனங்களுடன் கூட்டுவாழ்க்கையை பிரயோகிக்கக்கூடிய வகையில்
மத்தியஅரசில்பங்கு, வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கான பாதுகாப்பு
என்பவையே இந்நான்குமாகும்.
தமிழ்மக்களுக்கான அதிகார அலகு வடக்கு - கிழக்கு இணைந்த
அலகாக இருத்தல் வேண்டும். தமிழ்மக்கள் தங்களது கூட்டிருப்பையும்,
கூட்டுரிமையையும் பேணுவதற்கு இவ்விணைந்த அதிகார அலகு மிகவும்
அவசியமானதாகும். இதில் முஸ்லிம் மக்களினுடைய நிலை எவ்வாறு
இருக்கவேண்டும் என்பது தொடர்பாக அவர்களுடன் பேசித்தீர்க்கலாம்.
முஸ்லிம் மக்கள் உடன்படாவிட்டால் கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்ற
பிரதேசங்களை வடக்குடன் இணைத்தாவது இவ்வதிகாரஅலகு
உருவாக்கப்படல்வேண்டும். இதில் எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும்
இடமிருக்ககூடாது.
சுயநிர்ணயமுடைய அதிகாரங்களைப் பொறுத்தவரை
தமிழ்மக்கள் தங்களினுடைய தலைவிதியை தாங்களே நிர்ணயிக்கக்கூடிய
வகையிலான அதிகாரங்களாக அவை இருத்தல்வேண்டும்.
அதிகாரங்களுக்கான பிரதான அழுத்தி தமிழ்மக்களிடமே
இருக்கவேண்டும். முப்பது வருட ஆயுதப்போர் காரணமாக தமிழ்மக்கள்
ஐம்பது வருடங்களுக்கு மேல் பின்தங்கியுள்ளனர். தென்னிலங்கையில்
உள்ளவர்களுக்கு சமமாக தமிழ்மக்களை கொண்டுவருவதற்கு
அதிகளவிலான அதிகாரங்கள் அவர்களுக்கு தேவையானதாக உள்ளது.
பன்மைத்தன்மையான அதிகாரக்கட்டமைப்பு என்பது
கூட்டுப்பகிர்வு என்ற தத்துவத்தை உள்ளடக்கியது.
இதனடிப்படையில் மத்தியஅரசாங்கத்தில் தமிழ்மக்கள் ஒரு தேசிய
இனமாகப் பங்குபற்றுவதற்குரிய வாய்ப்பு வழங்கப்படல்வேண்டும்.
குறிப்பாக தமிழ்மக்கள் தொடர்பான விவகாரங்களைப் பொறுத்தவரை அவர்களிடம்
வீட்டோ அதிகாரம் இருத்தல்வேண்டும். பல நாடுகள் இதற்காக இரட்டைவாக்கெடுப்பு
முறையை சிபார்சு செய்துள்ளன.
தமிழ்மக்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டால் மட்டும்
போதாது. வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கான பாதுகாப்பும் இருத்தல்வேண்டும்.
அதிகாரங்களைப் பொறுத்தவரை ஒரு கையால் கொடுத்து, மறுகையால் பறிக்கும்
வரலாற்று அனுபவமே தமிழ்மக்களிடம் உள்ளது. சோல்பரி யாப்பின் 29வது பிரிவு
தொடக்கம், 13வது திருத்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாணசபை
முறைவரை இவை பற்றி நிறையவே அனுபவங்கள் உண்டு. நீதித்துறை தமிழ்மக்களைப்
பாதுகாக்கும் என நம்புவதற்கில்லை. இலங்கை அரசின் அனைத்து அரச
இயந்திரங்களுமே பேரினவாத மயமாக்கப்பட்ட நிலையில் நீதித்துறையும் அதற்கு
விதிவிலக்காக இருக்கவில்லை. முன்னரே கூறியதுபோல பிரதான அழுத்தி
தமிழ்மக்களின் கைகளில் இருக்கும்போதே இவற்றை சாத்தியமாக்கமுடியும்.
அரசியல் தீர்விற்காக அக்கறையுடன் உழைக்கும் சக்திகள்
இனப்பிரச்சினைத் தீர்விற்கான மேற்கூறிய கோட்பாட்டு அடிப்படைகளையும் நடைமுறை
வடிவங்களையும் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமானதாகும்.
அரசியல் ஆய்வாளர் - சி.அ.யோதிலிங்கம்
நன்றி- வீரகேசரி
No comments:
Post a Comment