29 November 2015

அப்பாவிகளைக் கொல்லும் பயங்கரவாதம்


இராசா ஒருவர் தமது ஊரில் தான் பார்த்திராத பழத்தை கொண்டு வந்து காண்பித்தால் இளவரசியை திருமணம் செய்துவைக்கவிருப்பதாகவும், ஆனால் அந்தப்பழம் பற்றி நான் அறிந்திருந்தால் அதையே கொண்டு வந்தவனின் வாயில் திணித்து அனுப்புவதாகவும் அறிவித்தார். பலர் திராட்சை, வாழை என பலதரப்பட்ட பழங்களைக் கொண்டுவந்து காண்பித்தபோது, அவைகளை தான் அறிந்திருந்திருப்பதாக சொன்ன இராசா அவர்களது வாய்களில் அவற்றைத் திணித்து அனுப்பினார் .

அவர்கள் சிரித்தபடியே சென்றார்கள். ஒருவன் அன்னாசிப்பழத்தை கொண்டுவந்தான் அப்பொழுதும் இராசா இதை நான் பார்த்திருக்கிறேன் எனச்சொல்லி அவனது வாயில் திணித்தார். அவன் வாய்கிழிந்த போதும் அவன் அழவில்லை அப்பொழுது இராசா கேட்டாராம்

வலிக்கவில்லையா ? ஏன் அழுகிறாய்? ’

இல்லை எனக்குப் பின்பாக ஒருவன் பலாப்பழத்துடன் நிற்பதை நினைத்து சிரிப்பு வந்தது.” என்றானாம்.
அதுபோல் ஏமாந்துகொண்டிருக்கும் இலங்கைத் தமிழரைவிட விட மிகுந்த அனுதாபத்திற்குரியவர்கள் பல சிங்கள இடதுசாரிகள்.தமிழ் இயக்கங்களின் ஈழவிடுதலைப்போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் இதன் மூலம் தமிழர்களுக்கு உரிமை கிடைப்பது மட்டுமல்ல சிங்களப் பாட்டாளி மக்களுக்கும் விமோசனம் கிடைக்கும் என நம்பிய பல சிங்கள இடதுசாரிகள் இருந்தார்கள் . அவர்களில் சிலர் புளட் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என அறிந்தேன். ஆனால் அவர்களை எனக்கு நேரடியாகத்தெரியாது. ஆனால், .பி . ஆர். எல். எஃப் இயக்கத்துடன் தோளோடு நின்ற விகல்பகண்டாயம் என்ற தயான் ஜயத்திலக குழுவினரை இந்தியாவில் சந்தித்தேன். அதில் நான்கு பேர்என்னிடம் மிகவும் வாரப்பாடாக பழகுவார்கள். இவர்கள் ஜோ செனவிரத்ன , சிதன் டீசில்வா(கமல்) , பியால் மற்றும் சிறிலகும். இவர்களால் இலங்கையில் இருக்கமுடியாது என்பதால் சென்னைக்கு அகதிகளாக வந்தவர்கள்.
ஈழத்தமிழ் விடுதலை இயக்கங்களை நம்பிய இலங்கை தமிழ் மக்கள் மிகவும் பாவப்பட்டவர்கள் என்பது எனது கருத்து. அவர்களின் பின்னால் சென்று உயிரையும் உடல் உறுப்புகளையும் இழந்தவர்கள் எப்பொழுதும் எனது நெஞ்சில் இருப்பவர்கள். சில காரணங்களால் அப்படி அவர்களைப்போன்று ஒருவனாக நான் வராமல் இருந்தது எனது அதிஷ்டம். அரசாங்கத்தில் அவமானப்பட்டு அநீதி இழைக்கப்படும்பொழுது ஆத்திரம் கொள்வது மனித இயல்பு. அந்த நிலையில் சில வருடகாலம் நானும் இருந்திருக்கிறேன். எனது மனதில் ஆத்திரம் கொழுந்துவிட்ட காலம் கல்லூரிப்பருவமாகும். பல்கலைக்கழகத்தில் நீறுபூத்து பின்னர் 1983 கலவரத்தில் தணலாக மீண்டது. ஆனால் தமிழினப் போராட்டத்தின் ஒரு தருணத்தைப் பார்த்தபோது அணைந்தது.

நான் கற்ற யாழ். இந்துக்கல்லூரியில் இருந்து வருடாந்தம் குறைந்தது ஐம்பது மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்வார்கள். இந்த எண்ணிக்கை தரப்படுத்தலின் விளைவாக குறைந்து கொண்டு வந்து, நான் பல்கலைக்கழக புகுமுக பரீட்சை எடுத்த 74 இல் மாவட்டரீதியான தேர்வும் சேர்ந்து வந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பென ஐந்து பேராகியது. நான் மட்டும்தான் உயிரியல் பகுதியில். இரண்டு மாணவர்கள் பொறியியல்துறைக்கும் இருவர் கலைப்பீடத்திற்கும் தெரிவானார்கள். கல்லூரிக்கு வரவேண்டாம் என அடித்துத் துரத்திய அதிபர் சபாலிங்கம் எனக்கு எதிரே கதிரைபோட்டு என்னிடம் பேசினார். இந்தக்காலத்தில் நான் பரீட்சையில் எடுத்த புள்ளிகள் குறைக்கப்பட்;டது தெரிந்தது. அதாவது மருத்துவபீடத்துக்கு தமிழ் மாணவர்கள் 250 புள்ளிகள் நான்கு பாடங்களில் எடுக்கவேண்டிய நேரத்தில 229 புள்ளிகள் மாத்திரம் சிங்கள மாணவருக்கு போதும் என்ற நிலை. இதேபோன்று, பொறியியலுக்கு 250 தமிழ் மாணவருக்கும் 227 சிங்கள மாணவருக்கும் என்றாகியது.

இந்த அதிரடி மாற்றம் தமிழ் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் ஆத்திரத்தை வரவழைத்தது. அப்பொழுது தமிழ் அரசியல்கட்சிகள் இலங்கையில் தமிழர் போராட்டத்திற்காக முன்வைத்த காரணங்கள்பலஇருந்தன.

இப்பொழுது   பார்த்தால் அவை  பெரிதாகத்  தெரியவில்லை. குறைந்த பட்சம் உயிரைக் கொடுத்து போராடவேண்டியவைகளாஎன்றகேள்வியும்எழும்.

1)
ஆரம்பப் பிரச்சினையாகிய மலையக மக்களின் வாக்குரிமை பறிப்புஉண்மையில் நல்லதல்ல.
ஆனால், இந்திய அரசே அவர்களை இந்தியர்களாக ஏற்றுக் கொள்ளும்போது நாம் என்ன செய்வது? தொடர்ந்து வந்த இலங்கைஇந்திய ஒப்பந்தமும் அதைத்தானே உறுதி செய்கிறது?

2)கிழக்கு மாகாணத்தின் அரச காணிகளில் சிங்களக் குடியேற்றத்திலும் கூட கிழக்கு மாகாணத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, ஆறுமாதத்தின் பின்பாகத்தான் மற்றைய மாவட்டத்தவர்களுக்கு வழங்கப்பட்டது. இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் காணியற்றவர்கள் மிகவும் குறைவு. மூன்றாவதாக எமது தமிழ்த்தலைவர்கள் தூக்கிப்பிடித்தது சிங்கள ஸ்ரீ விவகாரம். ஆங்கில இலக்கத்திற்குப் பதிலாக சிங்களம். கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும் அதற்காக உயிரை விடத்தேவையில்லை. அரசாங்க பஸ்களில் ஸ்ரீ விவகாரத்தைப் பற்றி டி.பி.ஸ் ஜெயராஜ் சொன்ன தகவலின்படி, அன்று புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட பஸ்களில் சிங்கள ஸ்ரீயும்; பழைய பஸ்களில் ஆங்கில எழுத்தும் இருந்தது. பழைய பஸ்களை யாழ்ப்பாணம் அனுப்பினால் அரசாங்கம் பழைய பஸ்களைத் தருகிறது என்ற கூக்குரல் வரும் என்பதாலேயே புதியபஸ்களை அனுப்பியதாக போக்குவரத்துத் துறை அதிகாரி சொன்னாராம். மேலும் சிங்கள ஸ்ரீக்கு தார்பூசுவதற்கு ஆரம்பத்தில் சில தமிழ் இளைஞர்கள் தார்வாளியுடன் சென்றபோது சில தமிழ் எம்.பி. க்கள் அந்தவேலையை தாங்கள் செய்வதாக முன்வந்தார்கள். இந்த இளைஞர்கள் சிலர் தற்பொழுது அமெரிக்காவில் இருப்பதால் அந்தத்தகவலை உறுதிப்படுத்த முடிந்தது என்கிறார் டி.பி.ஸ் ஜெயராஜ். இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்தும் தங்கள் தலைகளை தமிழ்த்தலைவர்கள் இன்னமும் மிளகாய் அரைப்பதற்கு கொடுத்தபடியே இருக்கிறார்கள்.

3) சிங்கள மொழியை அரசகரும மொழியாக்கிய பண்டாரநாயக்காவின் சட்டம் தமிழர்களைப் பாதிக்கும். ஆனால் மீண்டும் இரண்டு மொழிகளது பாவனைத் திருத்தம் தமிழ் இயக்கங்கள் ஆயுதம் ஏந்த முதல் சட்டமூலமாக வந்து விட்டது. ஆனால் அதனை அமுல் படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தன என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இவற்றையெல்லாம் பேசித்தீர்த்து உயிர்க்கொலைகளைத் தவிர்த்திருக்கமுடியும்.

இந்த மொழிவாரியான தரப்படுத்தல் மட்டுமே தமிழ் இளைஞர்களை பாதித்தது. பல்கலைகழகம் செல்ல எண்ணியவர்களை மட்டுமல்ல படிக்க விருப்பமில்லாதவர்களும்கூடஎன்ன படித்தாலும் சிங்களவன் பல்கலைக்கழகத்திற்கு போக விடமாட்டான்என்றவாதத்தை முன்வைத்தனர். பிரபாகரன்கூட இப்படி நினைத்திருக்கக்கூடும். யார் கண்டதுதமிழ் வாத்தியாரின் மகன் மிருக வைத்தியம் படித்ததுபோல் காணி அதிகாரி வேலுப்பிள்ளையின் மகன் வைத்தியராகவோ பொறியியலாளராகவோ வந்திருக்க முடியும்.
தரப்படுத்தல் இல்லாவிடில் இந்தப் போரே நடந்திராது.
நான் பரீட்சையில் தோற்றிவிட்டு இருந்த காலத்தில்; 1974 ஜுன் மாதம் எமது கல்லூரி மாணவனாகிய சிவகுமாரனின் மரணம் சம்பவித்தது. நானும் நண்பர்கள் பலருடன் மரண வீட்டுக்குச் சென்றோம்.. நல்ல வேளையாக அக்காலத்தில் நான் வீட்டின் தலைப் பிள்ளையாக வீட்டுப்பொறுப்புகளுடன் இருந்ததுடன் காதலிக்கவும் தொடங்கியதால் வேறு வழியில்லாமல் கிடைத்த மிருகவைத்தியத்துறைக்கு சென்றுவிட்டேன். எனினும் இந்த தரப்படுத்தல் விடயத்தில் அன்றைய இலங்கை அரசாங்கத்தின் மீதான எனது கடுப்பு குறையவில்லை.

நாட்கள் செல்லச்செல்ல பல்கலைகழகத்தின் சூழல் என்னை மாற்றியது. முக்கியமாக சிங்கள நண்பர்கள் கிடைத்தார்கள். அதற்கும் அப்பால் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து சிறை சென்ற பலர் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வந்தவர்கள். அவர்கள் பலரோடு நட்புடன் இருந்தேன். இப்படியான நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்னை யாழ்ப்பாணத்தின் நிலைப்பாட்டிலிருந்து பிரித்து வைத்தபோதும் 1977 ஏப்ரலில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் செல்வநாயகம் இறந்தபோது பேராதனைத் தமிழ்மாணவர்கள் சார்பாக பெரிய மலர்வளையத்தை கண்டியில் இருந்து வாங்கிக்கொண்டு, ரயிலில் பொல்காவலை வழியாக வந்து அவருடைய மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டேன்.

1983 கலவரம் மீண்டும் ஆத்திரத்தை கொழுந்து விட்டெரியச் செய்தது.
இந்திய அரசாங்கம் போராளி இயக்க இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்கிறது என்ற தகவல் வந்தபோது குறைந்த பட்சமான ஒரு இறைமை எமக்குக் கிடைப்பது உறுதி என்ற உணர்வு வந்தது. தொடர்ச்சியான இனக்கலவரங்கள் ஏற்படாது தன்மானமாக வாழ்வதற்கு இந்த ஆயுதப்போராட்டம் வழிசமைக்கும் என்பதை சில வருடங்களாவது நான் நம்பவில்லை என பொய் சொல்ல எனது மனச்சாட்சி இடம் கொடுக்காது. ஆனால்அந்த நினைப்பை மிக விரைவில் காற்றுடன் போக வைத்த சம்பவத்தையே இங்கு எழுதவிரும்புகிறேன்.

சென்னையில் இருந்த இலங்கைத் தமிழருக்கு வழக்கமாக வரும் இரு நோய்கள் தைபோயிட்ஹெப்பரைரிஸ். இந்த இரண்டும் சுத்தப்படுத்தாத தண்ணீரால் பரவுவது. உணவுக்கடைகளில் ஒரே வாளியில் உள்ள தண்ணீரில் பாத்திரத்தைக் கழுவுவதும் உடல் உபாதைகளை நீங்கிவிட்டு கைகளை கழுவாததும் இதன் காரணங்கள்.

அங்கு நான் சந்தித்த விகல்ப கண்டாயத்தைச் சேர்ந்த ஜோ செனவிரத்னவுக்கு அவர் சென்னையில் இருந்தபோது தைபோயிட் நோய் வந்து விட்டது. சிங்களவரான அவரை சென்னை வைத்தியசாலையில் வைத்து குணப்படுத்த விரும்பாமல் ஒரு தனி மாடி வீட்டில் வைத்திருந்தார்கள் .பி. ஆர். எல். எஃப் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அதன்பின்பு அவரை பார்த்துக் கொள்ளும்படி . பத்மநாபா என்னிடம் சொன்னார். அவரது வேண்டுகோளின் பிரகாரம் இரண்டு தரம் எனது மனைவியையும் அழைத்துக்கொண்டு ஜோ செனவிரத்ன இருந்த மாடிவிட்டுக்குச்சென்று உரையாடினேன். கம்யூனிசம் மற்றும் உலகவிவகாரம் என பல விடயங்களைப் பேசுவோம்

ஒரு நாள் எனது டிவி எஸ் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு ஒருநாள் அவரிடம் செல்லும் வழியில் எனக்குஅறிமுகமான ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்அண்ணே அநுராதபுரத்தில் பெருமளவு சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்களாம்என்றார்.
யார் செய்தது?’
  
வேறு யாரு புலிகள்தான்என்றுசொல்லிவிட்டு அவன்அகன்றார். அவன் அந்த விடயத்தை பெரிதாக எடுக்கவில்லை என்பது அவனது வார்த்தையில் தெரிந்தது.

இந்த விடயத்தை ஒரு சிங்களத் தோழரிடம் எப்படிச் சொல்வது என எனக்கு மனம் கனத்தது. இரண்டு நிமிடங்களில் தாவிக்கடக்கும் அந்த மாடிப்படிகள் ஏதோ மலை ஏறுவது போல் இருந்தது. உள்ளே சென்றதும்என்ன கொம்ரேட்?’ என்றார் ஆங்கிலத்தில். நான் விடயத்தை கூறியதும் அந்த சிங்கள நண்பன் தலையில் கைவைத்துஒக்கம இவறாய்” (எல்லாம் முடிந்துவிட்டது) எனக்கூறினார்.
நான் உடனடியாக இருநூறு சிங்களவர்கள் கொல்லப்பட்டுவிட்டதற்காக கூறுகிறீரா? என வினவினேன்.
இல்லை இதன்பின் இறக்கப்போகும் தமிழர்களை எண்ணித்தான் கவலைப்படுகிறேன்என பதிலளித்தார்.
 தயவுசெய்து எனக்கு விளக்கமளிக்கும்படிகேட்டேன்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழ்ப்போராளிகள், விடுதலைப்போராளிகள் அல்ல. இவர்கள் பயங்கரவாதிகள் என சிங்களமக்களுக்கும், உலக நாடுகளுக்கும் ஜே.ஆர்.ஜயவர்தனா கூறுவார். இதன்மூலம் முழுசிங்கள மக்களினதும் உலக நாடுகளினதும் ஆதரவை அவர் பெறவிரும்புவார்.தமிழ் மக்களுக்கு அரசாங்கம் தீங்கு இழைப்பதாகச்சொல்லி ஆயுதம் ஏந்திக்கொண்டு போராடும்போது சிங்களப் பொதுமக்களை கொல்வதன் மூலம் இலங்கை இராணுவத்துக்கு சமமான நிலைக்கு தாழ்ந்துவிடுகிறார்கள். இது விடுதலைப்போராளிகள் செய்யும் மனிதாபிமான செயல் அல்ல. பழிவாங்கும் செயலாகும். இதனால் விடுதலைப் போராட்டத்திற்கு இழுக்கு வந்துவிடுகிறது.

இரண்டாவது அரசாங்கப்படைகளுடன் போரிட்டாலும் பல சிங்களமக்கள் தம்மை போரில் ஈடுபடுத்துவதில்லை. அதைவிட எம்மைப் போன்ற சிறிய அளவு சிங்களவர்கள் உங்கள் போராட்டத்தில் உள்ள நியாயத்தைப் பார்த்து உதவிசெய்கிறார்கள். சாதாரண சிங்களமக்கள் கொலை செய்யப்படும்போது இந்த நிலைமாறி இரு இனங்களுக்கு இடையிலான இனப்போராட்டமாக மாறுகிறது. இப்படியான இனப்போராட்டத்தில் நீங்கள் வெல்ல வாய்ப்புகளே இல்லை. முழுத் தமிழர்களும் சேர்ந்து ஆயுதம் ஏந்தினாலும் உங்களால் சிங்களவர்களை வெல்லமுடியாது.

மூன்றாவதாக சர்வதேச மட்டத்தில் பயங்கரவாதம் எப்பொழுதும் அங்கீகாரம் பெறப்போவதில்லை. நீங்கள் குறுகிய காலத்தில் விளம்பரமும் புகழும் பெற்றாலும் காலப்போக்கில் இதனால் ஒரு பயனும் ஏற்படாது. ( So this is morally, strategically and tactically wrong) என கூறிமுடித்தார்.
அந்த சிங்களத்தோழர்களுடன் பழகிய காலங்கள் இனிமையானது. சித்தன டீ சில்வா பார்ப்பதற்கு விஜயகுமாரதுங்கா மாதிரி இருப்பார். சிறுவயதிலிருந்து காக்காய் வலிப்பினால் பாதிக்கப்பட்டவர். பியால் தான் பாக்கிஸ்தானில் இருந்த காலத்தை நினைவு கூருவார்.

சிறில் குடும்பஸ்தர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது அரசியல் தேர்வால் ஊரே அவரை வெறுத்தது. நான் அவுஸ்திரேலியாவிற்கு வந்த பின்பு தனது குடும்ப நிலையை எழுதி உதவி கேட்டபோது நான் அக்காலத்தில் படித்துக்கொண்டிருந்ததால் எனது நண்பன் திவ்வியநாதனிடம் அக்கடிதத்தைக் காட்டி அவரிடம் பணம் பெற்று சிறிலுக்கு அனுப்பினேன்.

அநுராதபுரத்தில் கொலை செய்யப்பட்ட சிங்கள மக்கள் எனக்கு விடுதலைப்புலிகளின் சுயத்தை அன்றே வெளிப்படுத்தினார்கள். இவர்கள் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டதைப் பார்த்ததும் ஆயுதப்போராட்டத்தில் இருந்த எனது ஆர்வம் முற்றாக மறைந்தது. அதன்பின்னர் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள் நமது போராட்டம் கரைசேராது என்பதையும் தெளிவாக்கியது.

அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஜுலை வந்தவுடன் சுமார் 50 பேர் கொண்ட கூட்டத்தில் இதைச்சொல்லிவிட்டு, எனது பொக்கட்டில் இருந்த கைக்குட்டையை எடுத்துக்காட்டிதுன்புறும் மக்களுக்கு நீங்கள் கண்ணீரைத் துடைக்க இது மாதிரி பயன்படுவது நல்லதுஎன்ற போதுஅந்தக் கூட்டத்தில் இருந்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பலர் உறுமினார்கள்இன்னமும் பலர் ஆங்காங்கு உறுமிக்கொண்டு இருக்கிறார்கள்.

- நடேசன்-

நன்றி- தேனீ


No comments:

Post a Comment