09 January 2016

அரசியலமைப்பு சபை உருவாக்கும் யோசனை சபையில் சமர்ப்பிப்பு

மாற்றங்களை ஏற்படுத்தும்போது குழப்ப வேண்டாம்


அரசியலமைப்பில் கடந்த காலங்களில் திருத்தங்கள் மற்றும் மாற்றங்களைக் கொண்டுவந்தபோது, நாட்டில் ஏற்பட்ட நிலைமையை நான் நன்கறிவேன். கலாசார, தொ ழில்நுட்ப மற்றும் இதர மாற்றங்களுக்கு ஏற்ப அரசியலமைப்பை மாற்றுவதில் எவ்விதமான தவறும் இல்லை என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது குழப்பங்களை ஏற்படுத்தவேண்டாம் என்றும் இனவாதக்குழுகளிடம் கேட்டுக்கொண்டார். பாராளுமன்றத்தில், உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தை முழு அரசியலமைப்பு சபையாக மாற்றும் யோசனைகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான நிமல் சிறிபாலடி சில்வா, லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், மலிக் சமரவிக்ரம, டி.எம்.சுவாமிநாதன், விஜயதாஸ ராஜபக்ச மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகிய அமைச்சர்கள் குழுமத்தின் யோசனையாக முன்னவைக்கப்பட்டன.

அதன்பின்னர், அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நமது நாட்டின் அரசியலமைப்பு, வெளிநாட்டவரின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்படுவதாக இனவாதக்குழுக்கள் பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. அவ்வாறான, எந்தவொரு தேவைப்பாடும் எமக்கில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அரசியலமைப்பை மாற்றுகின்றபோது, பெடரல் என்றால் தெற்கைச்சேர்ந்த இனவாதக்குழுகளுக்கு கசக்கின்றது, வடக்கைச்சேர்ந்த இனவாதக்குழுக்களுக்கு ஐக்கியம் என்ற சொல் கசக்கின்றது. இவற்றை நிவர்த்தி செய்யவேண்டும் என்றும் அவர் கூறினார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினால் தான், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதாக பலரும் கூறுகின்றனர். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இருக்கவேண்டுமாயின், எதிர்காலத்தில் மற்றுமொரு யுத்தம் எதிர்பார்க்கப்படுகின்றதா என்றும் ஜனாதிபதி வினவினார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருக்காலம். எனினும், பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி, 19ஆவது திருத்தம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது.

மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பயன்படுத்தி, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாட்டையும், யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களையும் கண்டறிந்து அவை, எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.


இலங்கைக்குப் புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்காக முழுப் பாராளுமன்றத்தையும் அரசியலமைப்புச் சபையாக மாற்றும் யோசனையைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  சபையில் சமர்ப்பித்தார்.

2016ஆம் ஆண்டின் முதலாவதும் விசேடமானதுமாக பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுக் காலை கூடியபோது பிரதமர் இந்த யோசனையைச் சமர்ப்பித்தார்.இலங்கையில் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிரந்தர அமைதியை ஏற்படுத்து முகமாக நாட்டுக்குப் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் யோசனையைச் சமர்ப்பித்ததன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் உரை நிகழ்த்தினார். இதன்போது அரசின் முக்கிய அமைச்சர்கள் சபையில் பிரசன்னமாகியிருந்தனர். இதன்போது உரை நிகழ்த்திய ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் இந்த நல்ல முயற்சிக்கு எவரும் குந்தகத்தை ஏற்படுத்தாமல் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டமை தொடர்பாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சபையில் விவாதித்து நிறைவேற்றப்பட்டதும், 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுசேர்ந்து புதிய அரசியலமைப்பு நகல் வரைவொன்றைத் தயாரிப்பர். அதன் பின்னர் அது அரச வர்த்தமானியில் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து மாகாண சபைகளுக்கும் நகல் வரைவு பெற்றுக்கொடுக்கப்படும். பின்னர் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும். அதனைத் தொடர்ந்து மக்கள் அபிப்பிராய வாக்ெகடுப்புக்கு விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய அரசியலமைப்பு எந்தவித ஒளிவு மறைவுமின்றி ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் பகிரங்கப்படுத்தப்பட்டு வெளிப்படையாகவே மேற்கொள்ளப்படும் என்று அரசியலமைப்பு மறுசீரமைப்புக் குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment