11 February 2016

மலையக பெண்களை கருக்கலைப்புக்கு ஊக்குவிக்கும் சதி

கருக்கலைப்பு செய்து கொள்வதற்கு மலையக தோட்டப்புறப் பெண்களை ஊக்குவித்து அதற்காகச் சட்டவிரோத கருக்கலைப்பு மத்திய நிலையமொன்றின் தொலைபேசி இலக்கங்களையும் வழங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனத்தின் செயற்பாடுகள் அம்பலத்துக்கு வந்துள்ளன. இது தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொட்டகலை சுகாதார மருத்துவ அதிகாரி ஜனத் அபேகுணவர்தன பொலிஸ் மா அதிபருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒரு கருக்கலைப்புக்கு மேற்படி மத்திய நிலையம் 25,000 ரூபா வீதம் பணத்தைப் பெற்று வருவதாக கொட்டகலை சுகாதார மருத்துவ அதிகாரியின் காரியாலயம் தெரிவிக்கின்றது.
மேற்படி அரச சார்பற்ற நிறுவனம் மூலம் பாலியல் மற்றும் மகப்பேறு தொடர்பில் பிரதேச பெண்களுக்கு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன,. இத்தகைய கருத்தரங்குகளின் இறுதியில் மேற்படி கருக்கலைப்பு நிலையம் தொடர்பான விவரங்களை உள்ளடக்கிய ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.
அப்பிரதேசத்தின் குடும்ப சுகாதார அதிகாரியொருவர் மேற்படி கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டுள்ளதுடன் கருக்கலைப்புச் செய்து கொள்ள வேண்டிய அவசியமுள்ள பெண்கள் இருந்தால் மேற்படி கருக்கலைப்பு நிலையத்துக்கு இரகசியமாக அனுப்புமாறு கருத்தரங்கு நடத்திய நபர் ஒருவர் அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அதன் விபரங்களடங்கிய ஸ்டிக்கர் ஒன்று குடும்ப சுகாதார அதிகாரிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் தாய் – சேய் மரணங்கள் அதிகரிப்பதற்கு இத்தகைய சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்களே காரணமாகியுள்ளன. அப்பிரதேசங்களில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு சிலர் கைதுசெய்யப்பட்டு தண்டனை அனுபவித்த பின்பும் அவர்கள் மீள அதே தவறை செய்து வருவதாகவும் மருத்துவ அதிகாரி ஜனத் குணவர்தன தெரிவித்தார்.

No comments:

Post a Comment