உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான எல்லை மீள் நிர்ணய பணிகள் நிறைவடையவுள்ளன. இது குறித்தான குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதம் கையளிக்கப்பட உள்ளது. இதன்படி ஜூன் மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு அமைச்சின் மீது குற்றம் சுமத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பிலான முறைப்பாட்டு விசாரணைகள் குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதமளவில் கையளிக்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. எனவே, அறிக்கை கிடைக்கப்பெற்றவு டன் தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். இந்நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டமை தொடர்பில் அமைச்சு மீதான குற்றச்சாட்டை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2012 ஆம் 22ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முறைமை திருத்த சட்டமூலத்தில் பல தரப்பினர் எதிர்ப்பினை வெளியிட்டனர். இதன்பிரகாரம் எல்லை நிர்ணய பணிகள் மீளவும் ஆரம்பித்து, இதற்கான விசேட குழுவொன்றும் நிறுவப்பட்டது.
இதன்படி ஜூன் மாதம் நடத்தப்படும் உள்ளூராட்சி மன்ற தேர்தல 70 சதவீதம் தொகுதி முறைமையும், 30 சதவீதம் விகிதாசார முறைமையையும் கொண்ட கலப்பு தேர்தல் முறைமையாக அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2017இல்?
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இவ்வரு டம் இறுதிவரையில் பிற்போடவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதமளவில் நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போதுள்ள நிலையில், இவ் வருடம் இறுதிவரையில் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பில்லை என தெரிய வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமை யிலான அரசாங்க ஆட்சியின் போது வரையறுக்கப்பட்ட எல்லை நிர்ணயத்தில் பல குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. எனவே, எல்லை நிர்ணயம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்து அதனை தீர்ப்பதற்கு இன்னும் கால அவகாசம் தேவையாகவுள்ளது. ஆகையினாலே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இவ்வருடம் நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மாநகர சபைகள் உட்பட 23 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் மாதம் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பதவிக் காலம் முடிவடைந்துள்ள 312 உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துவது தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தயாராகிவருகின்றன. அத்துடன், பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்ற பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே குறிப்பிட்டபோதிலும் தேர்தலை நடத்தாது பிற்போடப்பட்டு வருவது தொடர்பில் பல்வேறு தரப்புகள் விமர்சனங்களை முன்வைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment