07 March 2016

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கூட்டமைப்பு கோரிக்கை!

அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருப்பதால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல்போனோர் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்திவைப்பு பிரேரணை விவாதிக்கப்பட்ட பின்னர் மேற்படி விடயம் தொடர்பாக துரிதப்படுத்தப்பட்டு முடிவு எடுகக்கபட உள்ளதால் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலின்போது சிறைச்சாலையில் கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் கைதிகளின் விவகாரம் முக்கிய பிரச்சினையாக நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.

85 தமிழ் அரசியல் கைதிகளைப் புனர்வாழ்வுக்கு அனுப்பும் செயற்பாட்டில் ஏற்பட்டிருக்கும் இழுபறி நிலைமைகள் குறித்தும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன், புனர்வாழ்வு விடயத்தில் கைதிகளின் இணக்கப்பாட்டைப் பெறுவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

இக்குழு கூட்டத்தில் கைதிகள, காணாமல் போனோர் விவகாரம் தவிர கூட்டமைப்பை பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை அரசியலமைப்பு மறுசீரமைப்புக்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணையின் முகவுரையில் இருந்த 'இனப்பிரச்சினைத் தீர்வு' என்ற விடயம் நீக்கப்பட்டமை குறித்து பங்காளிக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment