சர்வதேச நாடுகளுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கை மீண்டும் இணைத்து சமஷ்டி என்ற போர்வையில் தனி நாட்டை உருவாக்க பாராளுமன்றத்தில் சதித் திட்டம் தீட்டப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சுவிஸ் ஆட்சி முறைமை தொடர்பான உதாரணங்களும் சம்பந்தன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் செயற்பாடுகளும் தாய் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்தை வெளிப்படுத்துகின்றது என மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நல்லாட்சி அரசாங்க எதிர்ப்பு குழு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் இரண்டாவது அதீத பெரும்பான்மையை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நல்லாட்சி அரசாங்க எதிர்ப்பு குழு தலைமையிலான கூட்டு எதிர் கட்சிக்கு எதிர் கட்சி தலைவர் பதவியை வழங்காது 4.1 வீதத்திற்கும் குறைவான எண்ணிக்கையை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர் கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தன் தனி நாட்டு கொள்கையை தவிர நாட்டின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் வாயை திறப்பதே இல்லை எனவும் அந்த குழு தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லை - நெலும் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நல்லாட்சி அரசாங்க எதிர்ப்பு குழுவின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதன் போது அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல கூறுகையில் ,மாற்று அரசாங்கம் ஒன்றின் தலைவரைப் போன்று எதிர் கட்சி தலைவர் இரா.சம்பந்தனும அதில் முதல்வரை போன்று சி.வி.விக்னேஷ்வரனும் இன்று செயற்படுகின்றனர். இவர்களுக்கு நாட்டை பிரித்துக் கொடுக்காது ரணில் - மைத்திரி கூட்டாட்சி ஓயாது என்றவாறே தற்போதைய நிலைமைகள் காணப்படுகின்றது. சம்பந்தன் சிறந்த அரசியல்வாதி ஆனால் அவர் பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்து கொண்டு தெற்கின் பிரச்சினைகள் தொடர்பில் வாயை திறப்பதே இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கியமையே சர்ச்சைக்குரிய விடயமாகும். பாராளுமன்றத்தில் 52 பேரை கொண்ட கூட்டு எதிர் கட்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட மோசமான ஜனநாயக விரோத செயலாகும்.
வட மாகாண சபையில் அண்மையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது. இலங்கையின் பெயர் உட்பட பாரதூரமான பல விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அரசாங்கம் ஒரு நடவடிக்கை கூட எடுக்க வில்லை , மாறாக சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்காக பல்வேறு நெருக்கடிமிக்க ஆபத்தான விடயங்களை முன்னெடுத்து வருகின்றது. அன்று எதிர் கட்சி தலைவராக அமிர்தலிங்கம் இருந்த போது காலியில் முதலாவது கூட்டத்தை நடத்தி , தமக்கான பொறுப்பினை வௌிப்படுத்தினார். எதிர் கட்சி பதவிக்கு பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு உட்பட்ட வகையில் கூடிய ஆசனங்களில் வெற்றிப்பெற்று தான் அமிர்தலிங்கம் அன்று எதிர்கட்சி தலைவரானார். ஆனால் அவ்வாறு எவ்விதமான அடிப்படை நிலையும் இல்லாத நிலையில் தற்போது எதிர் கட்சி தலைவராக சம்பந்தன் இருந்து கொண்டு பொதுவான பிரச்சினைகளில் எவ்விதமான தலையீடுகளும் செய்யவதில்லை என அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment