இலங்கைத்தீவானது பல்லின தேசிய சமூக மக்களைக் கொண்ட நாடு. அந்த வகையில் இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசு என்றே எமது நாடு தேசிய ரீதியாக அடையாளப்படுத்தப்பட்டும் வருகிறது.
ஆனாலும், நடைமுறையில் இங்கு வாழும் சிறுபான்மை தேசிய இனங்களின் அரசியலுரிமைகள் குறித்த பிரச்சினைகள் தீராப்பிரச்சினையாகவே இன்னமும் இழுபட்டு சென்று கொண்டிருக்கிறது. அரசியல் ரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அரசியல் தீர்வொன்றை விரும்பி நிற்கும் எமது தமிழ் பேசும் மக்களின் சார்பாகவும் அபிவிருத்தி மற்றும் சகல வாழ்வியல் உரிமைகளுக்காகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் எமது மக்களின் சார்பாகவும் எனது கருத்துக்களை இந்த அதியுயர் சபையில் நான் முன்வைக்கின்றேன்.
13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஓர் ஆரம்பமாகக் கொண்டு, அதற்கு மேலதிக அதிகாரங்களை அல்லது விசேடமான அதிகாரங்களை அல்லது சமச்சீரற்ற அதிகாரங்களை வழங்குவதன் மூலம் அரசியலுரிமைப் பிரச்சினைக்கான தீர்வினை நோக்கிச் செல்லலாம் என்பதையே நாம் ஆரம்பம் முதல் வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
ஆனாலும், அதை சக தமிழ்க் கட்சித் தலைமைகள் அன்று ஏற்றிருக்கவில்லை. காலம் கடந்தாவது சக தமிழ்க் கட்சிகள் 13ஆவது திருத்தச்சட்டம் குறித்து பேசவும் அதன் நடைமுறைகளில் பங்கெடுக்கவும் வந்திருக்கின்றன.
அந்த வகையில், எமது வழிமுறை நோக்கி அவர்கள் வந்ததை நாம் வரவேற்கின்றோம். இதேவேளை, கையிலே அமுதசுரபி ஒன்றை வைத்துக்கொண்டு பிச்சைப்பாத்திரம் கொண்டு அலைவது போல், 37 அதிகாரங்களை கொண்ட மாகாணசபை அதிகாரத்தையே நடைமுறைப்படுத்த விரும்பாமலும், முடியாமலும் எமக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று பிச்சைப்பாத்திரம் ஏந்தித் திரிகிறார்கள்.
கையில் கிடைத்திருக்கும் மாகாண சபை அதிகாரத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. புதிய அரசியலமைப்பு குறித்து யோசனைகளை முன்வைத்துக்கொண்டு திரிகிறார்கள். நாமும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை வரவேற்கின்றோம்.
அதற்கான எமது யோசனைகளையும் முன்வைத்திருக்கிறோம். அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லெண்ண முயற்சிகளை நாம் ஆதரித்தும் வரவேற்றும் வருகின்றோம்.
ஆனாலும் 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் புதிய அரசியலமைப்பின் பிரகாரம் உருவாகும் தீர்வை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகின்றார்கள் என்பதே எனது கேள்வியாகும்.
முன்னாள் ஐனாதிபதி தடை என்றார்கள். முன்னாள் ஆளுனர் தடை என்றார்கள். முன்னாள் பிரதம செயலாளர் தடையென்றார்கள். ஆனால் ஆட்சி மாறி புதிய ஐனாதிபதியும் பிரதமரும், புதிய புதிய ஆளுனர்களும், புதிய பிரதம செயலாளரும் வந்திருக்கிறார்கள்.
மாகாணசபையை நடத்துவதற்கு தொடர்ந்தும் அடுத்தவர்களே தடையாக இருந்து வருவதாக குற்றுஞ்சாட்டி வருவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வடக்கு மாகாண சபை என்பது சாதனைக்குரிய சபையாக இல்லாமல், சர்ச்சைக்குரிய சபையாகவே காணப்படுகின்ற நிலை தொடர்கிறது.
தமிழர் தரப்பில் இருந்து இன்று அரசியல் பலத்தோடு மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதேவேளை, அதே தமிழ்க் கட்சித் தலைமைகள் மாகாண அரசையும் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி புரிந்து வருகிறார்கள்.
எனினும், தமிழ் பேசும் மக்களின் நிலை நீடித்த துயரங்களாகவே தொடர்கிறது. இன்று அவர்களும் இதையே கூறுகின்றார்கள். வீதி புனரமைப்புக்கள் விட்ட குறையில் நிற்கின்றன. மத்திய அரசின் பொறுப்பில் இருக்கும் பிரதான வீதிகள் பெரும்பாலானவை புனரமைக்கப்பட்டு விட்டன. ஆனாலும், மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் உள்ளூராட்சி சபைகள் செய்து முடிக்க வேண்டிய உள்ளூர் வீதிகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.
மக்களுக்கு சொந்தமான காணி, நிலங்கள் தொடர்ந்தும் மீட்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், இன்னமும் விடுவிக்கப்பட வேண்டிய எமது காணி, நிலங்களை துரிதமாக விடுவிக்க வேண்டும். குறிப்பாக, செழிப்பான வளம் கொண்ட விவசாய நிலங்கள், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் போன்றவையும் இன்னும் விடுவிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது.
அத்துடன், மீள்குடியேறிய மக்களுக்கான வாழ்வாதார வசதிகள் மேலும் வளப்படுத்தப்பட வேண்டும். சிறைகளில் நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும்.பொலிஸாரும் படையினரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கும், சனத்தொகைக்கும் ஏற்றவகையில் நிலைகொண்டிருத்தல் வேண்டும்.
வீடிழந்த மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும். இதன்போது கடைப் பிடிக்கப்படுகின்ற இறுக்கமான நடைமுறைகள் தளர்த்தப்பட வேண்டும்.வேலையற்ற பட்டதாரிகள் வேலை கேட்டு தவமிருக்கிறார்கள். சுகாதாரத்தொண்டர்கள் வேலை கேட்டும் நிரந்தர நியமனம் கோரியும் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்துகிறார்கள்.
விசேட திட்டம் என்ற வகையில், சமுர்த்தி நிவாரணங்கள் மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு அதிகரிக்கப்பட வேண்டும். சமுர்த்திப் பயனாளிகளின் எண்ணிக்கையும் மக்களின் வாழ்நிலைக்கு ஏற்றவாறு அதிகரிக்கப்பட வேண்டும்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, யுத்த அனர்த்தங்களினால் தமது உடலில் குண்டுத்துகள்களையும், ஆயுத சிதறல்களையும் சுமந்து வாழ்கின்றவர்களுக்கு அரசு விசேட வைத்தியர்களைக் கொண்டு உதவிகளை வழங்கும் என்று அறிவித்திருப்பதை வரவேற்கின்றேன். அந்த அறிவிப்பு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும், பாதிக்கப்பட்டவர்கள் நன்மையடைவதையும் உறுதிப்படுத்தடவும் அவசியமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவேண்டும். யுத்தம் காரணமாக அங்கவீனங்களை எதிர்கொண்டுள்ளோர், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், முன்னாள் இயக்கங்களின் போராளிகள் போன்றோரது வாழ்வாதாரங்கள் தொடர்பில் விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். புகையிரதத்தில் பயணம் செய்யும் அங்கவீனமுற்ற படையினருக்கு இன்று முதல் சிறப்பு பயண அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பயன்படுத்தி அவர்கள் சாதாரண பயணச்சீட்டில் 50 வீத சலுகையைப் பெற்றுக்கொண்டு பயணிக்க முடியும் என்றும் புகையிரத திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை வரவேற்கின்றேன். போரினால் தமது அங்கங்களை இழந்த எமது நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும் இதுபோன்ற சலுகைகளும், முன்னுரிமைகளும் வழங்கப்படுவது அவசியமாகும். ஆனால் இதுபோன்ற சலுகைகளும், முன்னுரிமைகளும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்கப் பெறவேண்டும். போரை வெற்றிகொள்ள படையினர் போராடியதைப்போல், போர் வெற்றி கொள்ளப்படுவதற்கு தமிழ் மக்கள் தம்மை அர்ப்பணித்திருக்கின்றார். அதில் பெறுமதிமிக்க உயிர்களையும், தமது அங்கங்களையும், உடைமைகளையும் இழந்திருக்கின்றார்கள் என்பதையும் கவனத்தில் எடுப்பது அவசியமாகும். அதுவே தேசிய நல்லிணக்கத்தை அர்த்தபூர்வமாகக் கட்டியெழுப்பவும் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்கவும் உதவும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
வடக்கின் கல்வி வளர்ச்சி வீழ்ச்சியடைந்து கிடக்கிறது. இது குறித்து அதிகாரத்தில் உள்ளவர்கள் கவனம் செலுத்துவதாக இல்லை. யுத்த காலத்திலும், அதற்கு பிந்திய காலத்திலும் கல்வி ரீதியாக வடக்கு முன்னேற்றம் கண்டு வந்திருந்தது. வடக்கு கிழக்கில் நீடித்த யுத்தம் காரணமாக கல்வியைத் தொடரமுடியாமலும், தொழில்களை தொடரமுடியாமலும் சமூகத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு இருப்போருக்கு, தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கும், சுயதொழில் முன்னேற்றங்களுக்கும் விஷேட திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
நாம் அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள். படையினரின் கட்டுப்பாடு புலிகளின் கட்டுப்பாடு என்று பிரதேச ரீதியில் பேதங்கள் பாராமல் கல்வி வளர்ச்சிக்காக பல முன்னேற்பாடுகளை செய்திருந்தோம். வடக்கின் வரட்சி நிலையை போக்கவும், அதனால் எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்போகும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும் உடன் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். நெடுந்தீவில் எமது முயற்சியால் உவர்நீரை நன்னீராக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டு நெடுந்தீவு மக்களின் நீர்ப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட்டு விட்டது. இதேபோல் ஏனைய பிரதேசங்களிலும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். யாழ். குடாநாட்டில் நிலத்தடி நீர் பெரிதும் மாசடைந்த நிலையில் காணப்படுவதால், இரணைமடு நீர் வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், நான் நேற்றையதினம் இந்த உயரிய சபையில் குறிப்பிட்டதுபோல, ஏனைய நீர்த்திட்டங்கள் தொடர்பிலும் அவதானங்கள் செலுத்தப்பட வேண்டும். மேலும், அதிகரித்த இரசாயன உரப் பாவனை, கிருமி நாசினிப் பாவனைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். வடக்கில் இன்று உருவாகியிருக்கும் தனிப்பட்ட குழு மோதல்களும் வன்முறைகளும் வருத்தம் தரும் செய்திகளாக வருகின்றன. இளைஞர்கள் மத்தியில் காலாசார ரீதியிலான பரப்புரைகள்,விழிப்புணர்வு செயற்பாடுகள் என்பன முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதே போல், தொழில் நிறுவனங்களை நிறுவுவதன் மூலம், தொழிற்கல்வித் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை நாம் உருவாக்க முடியும். இத் மூலம் எமது இளையோரை வன்முறைகளில் இருந்து மீட்டெடுக்க முடியும். பாராளுமன்றத்தில் விவாதங்களை நடத்தினால் மட்டும் போதாது; குரல்களை எழுப்பினால் மட்டும் போதாது. செயற்பாடுகளும் இருக்க வேண்டும். நாம் அதிகாரத்தில் இருந்தபோது போதிய அரசியல் பலம் எமக்கு இருந்திருக்கவில்லை. ஆனாலும், வெறுமனே குரல்களை எழுப்புவதைவிட செயல்களில் காட்டியிருந்தோம். இன்று அரசியல் பலத்தோடு அதிகாரத்தில் இருப்பவர்கள் குரலோடு மட்டும் இருந்து விடாமல் செயலிலும் அதை காட்ட முன்வரவேண்டும். எம்மை பார்த்து என்ன செய்தீர்கள் என்று பிறர் சுட்டு விரலை நீட்டும் போது ஏனைய நான்கு விரல்களும் அவர்களை நோக்கியே நீள்கின்றன.
நாம் ஜனநாயக அரசியலுக்கு வந்திருந்த காலகட்டமானது, தமிழ் மக்களின் இருண்ட காலமாகக் காணப்பட்டது. தமிழர்கள் மீதான இனவாதமென்பது தென் பகுதியில், ஓர் இயக்க வடிவில் பல்வேறு தரப்பினர் மத்தியில் வியாபிக்கச் செய்யப்பட்டிருந்தது. அந்த நிலையில் தமிழ் பேசும் மக்களை பாரிய அழிவுகளிலிருந்து காப்பாற்றும் நோக்கில் நாம் அப்போதைய அரசுகளுடன் இணக்க ரீதியிலான அரசியலை முன்னெடுத்திருந்தோம். இதுவே அன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவையாகவும் இருந்தது. அந்த வகையில், யுத்தத்தை மேற்கொண்டிருந்த அரசுகளுடனும், யுத்தத்தை வெற்றிகொண்ட அரசுடனும் இணக்க அரசில் நடத்தியவாறே, எமக்கிருந்த குறுகிய அரசியல் பலத்தைக் கொண்டு நாம் ஆற்றியுள்ள பணிகள் ஏராளம் என்பதை எமது மக்கள் அறிவார்கள். அன்று எமது இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படாதிருப்பின் தமிழ் மக்களின் அழிவுகள் இன்னும் பாரியதாகவே இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அன்று நாம் கற்பாறைகளை பிளந்துகூட தண்ணீர் ஊற்றையே தருவித்தவர்கள். இன்று பசுந்தரையில் இருந்துகொண்டு துளி நீரைக்கூடப் பெறமுடியாமல் இருக்கிறார்கள். தேர்தல் காலங்களில் வாக்குறுதி வழங்கும் போது தாங்கள் வானைக்கிழித்து வைகுண்டம் போவோம் என்றார்கள். அரசியல் அதிகாரங்களைப் பெற்ற பின்னர் கூரை ஏறி ஒரு கோழி கூடப் பிடிக் முடியாமல் இருக்கிறார்கள் என்பதே யாதார்த்தமாகின்றது.
நன்றி- வீரகேசரி
No comments:
Post a Comment