இனி ஒரு விதி செய்வோம்
- எம். மகாதேவன்
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
யாழ்ப்பாணத்தில் தேர்தல் வாக்களிப்பு மிகக் குறைந்தளவில் இடம்பெற்றுள்ளது. இங்கு 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களே வாக்களிப்பில் கலந்துகொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. வாக்களித்தோர் தொகை குறைவாக இருக்கலாம். ஆனால் வடபகுதித் தேர்தல் முடிவுகள் தந்திருக்கின்ற செய்தி, தமிழ் அரசியல் அரங்கைப் பொறுத்தவரை ~இனி ஒரு விதி செய்வோம் என்ற கூற்றை இடித்துரைப்பதாகவே இருக்கின்றது.
இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத் தேர்தலுக்காக நடாத்தப்பட்ட பொதுத் தேர்தல் முழு நாட்டைப் பொறுத்தவரையிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.மூன்று தசாப்த காலமாக நாட்டில் புரையோடிப் போயிருந்த ஜனநாயக விரோத அசாதாரண நிலைமைகள் மறைந்துபோன நிலையில் நாட்டுமக்கள் அச்சம்,அவலம் என்பவை நீங்கிய சூழ்நிலையில் இத்தடவை வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தார்கள்.
கடந்த காலங்களில் வடக்கு- கிழக்கில் இடம்பெற்ற தேர்தல்களில் ஆயுதக் குழுக்களின் அழுத்தங்கள் மலிந்திருந்தன. இதனால் இப்பிரதேச வாக்காளர்கள் சுதந்திரமாக தேர்தல்களில் பங்குபற்றுவதோ முடியாத காரியமாக இருந்துவந்தது. மக்கள் இவ்வாறு அழுத்தங்களுக்கும், கெடுபிடிகளுக்கும் உள்ளான சூழ்நிலையில் குளறுபடியான பின்னணியில் வாக்குப்பலம் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றே இருந்தன.
இதன் விளைவாக வடக்கு- கிழக்கு மக்களின் அரசியல் ரீதியான எதிர்பார்ப்புகளுக்கு ~ஆப்பு வைக்கப்பட்ட சூழ்நிலையே கடந்த மூன்று தசாப்த காலமாக நிலவியிருந்தது. ஆனால் இத்தடவை இடம்பெற்றிருந்த பொதுத்தேர்தல் எத்தகைய அழுத்தங்களுக்கும் இடம்தராத சூழலில் நடந்து முடிந்துள்ளது. வடக்கு- கிழக்கைப் பொறுத்தவரை, குறிப்பாக வடக்கைப் பொறுத்தவரை வாக்களித்தோர் எண்ணிக்கை மிகக் குறைவானதாகக் காணப்படலாம். ஆனால் ~மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்பதுபோல வடபகுதி மக்கள் தமது முடிவைத் தெளிவான முறையிலேயே வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த பொதுத்தேர்தலின்போது வடக்கு-கிழக்கில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருபத்தியிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தார்கள். ஆனால் இத்தடவை இந்நிலையில் பெரும் பின்னடைவு காணப்பட்டுள்ளது. வடக்கு- கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பதின்நான்காகக் குறைவடைந்துள்ளதுடன், அரசு சார்புப் பிரதிநிதிகள் உட்பட ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் கிடைத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
யுத்தச் சூழலில் இருந்து விடுபட்ட சூழலில் அமைக்கப்படும் இலங்கையின் ஏழாவது பாராளுமன்றம், நாட்டு மக்கள் அனைவரதும் எதிர்பார்ப்புகள் பலவற்றை உள்வாங்கியதாகவே இருக்கின்றது. இந்நிலையில் வடக்கு- கிழக்கு மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகள், மற்றும் அவர்களது மனிதாபிமானப் பிரச்னைகள் என்பவற்றுக்கு ஏழாவது பாராளுமன்றம் எவ்வகையில் விடைபகரப் போகின்றது என்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது.
யுத்தச் சூழலில் ஜனநாயக விழுமியங்கள் வடக்கு- கிழக்கில் மழுங்கடிக்கப்பட்டிருந்தன. வடக்கு- கிழக்கு மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் சம்பந்தப்பட்ட நியாயமான பிரச்னைகளுக்கு ஜனநாயக ரீதியாக தகுந்த முறையில் தீர்வைக் காணும் போக்கு கேலிக்கூத்தாக அமைந்திருந்தது.
இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் கடந்த அறுபது வருடகாலமாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் சம்பந்தப்பட்ட விடயங்களை தமது மனம்போன போக்கில் தமிழ் அரசியல் தலைவர்கள் கையாண்டிருந்தார்கள். இதற்காகக் கொடுக்கப்பட்ட விலை மிகப் பிரமாண்டமானதாக இருப்பதையே காணமுடிந்தது.
இந்நிலையில் கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகள் யாவை? பின்னடைவுகள் யாவை? பலம் எது? பலவீனம் எது? எதிர்காலத் தேவையாது? போன்றவற்றை நிதானமாகவும், தீர்க்கதரிசனத்தோடும் சிந்திக்கவேண்டியவர்களாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான தமிழ்ப்பிரதிநிதிகள் இருக்கின்றனர்.திரும்பத் திரும்ப தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்னைகள் பற்றி சுட்டிக்காட்டுவதை விட அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை கண்டறிவதே காலத்தின் தேவையாக இருக்கின்றது.
யுத்தச் சூழல் முடிவுற்று ஒருவருட காலம் பூர்த்தியடையவுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்த மறுகணமே வடக்கு- கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு, புனர்நிர்மாணத் திட்டங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவையாக இருக்கின்றன. புனர்நிர்மாண நடவடிக்கைகளைப் பொறுத்தவரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நெறிப்படுத்தலில், மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்திட்டங்கள் இருள்மயமான சூழலில் வாழ்ந்த மக்களுக்குப் பயன்தர ஆரம்பித்துள்ளன. எனவே அரசியல் பிரச்னை, மனிதாபிமானப் பிரச்னை என்பவற்றுக்கான பரிகாரங்களை ஏக காலத்தில் காணவேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் தலைவர்களைச் சார்ந்ததாக இருக்கின்றது.
இதைவிடுத்து ~பழைய பல்லவிகளை தொடர்ந்தும் பாடிக்கொண்டிருப்பதில் எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை. கடந்த காலங்களில் கிடைத்த அனுபவங்கள் வடக்கு- கிழக்கு மக்கள் இந்த நாட்டில் தனித்து வாழவோ, அல்லது பிரிந்து வாழவோ முடியாதென்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நன்கறிந்ததாகவே இருக்கின்றது.இத்தடவை இடம்பெற்ற பொதுத் தேர்தல் பிரச்சாரங்களில்கூட ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்பிற்குள் அரசியல் உரிமைகளைப் பெறுவதே தமது நோக்கமென்றும், வன்முறைகள் பயனற்றவை என்ற ரீதியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பிரிவினை பற்றியும், தனிநாடு பற்றியும் கடந்த காலங்களில் குறிப்பிட்டு தமக்குத் தாமே அழிவைத் தேடியதை கூட்டமைப்பினர் கவனத்தில் கொள்ளவேண்டும். எப்படியிருந்தபோதும் கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற சிலர் அவ்வப்போது காலத்துக்கொவ்வாத பிரிவினை, தனிநாடு என்பவை பற்றிக் குறிப்பிட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஓர் ஆயுததாரியாக இருந்து ~பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற ரீதியில் ஐக்கிய இலங்கை, வடக்கு- கிழக்கு மாகாணசபை, அதிகாரப்பரவலாக்கம் என்ற கோஷங்களோடு அரசியல் பிரவேசம் செய்தவரே இந்த சுரேஷ் பிரேமச்சந்திரன். பிரிவினை கோரி நடாத்திய போராட்டத்தினால் ஏற்பட்ட விளைவுகளை ஒரு முன்னாள் போராளி என்ற முறையில் அவர் நிச்சயம் நன்கறிந்திருப்பார். இன்று அரசியல்கோதாவில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு, கொழும்பில் அவர் பெற்ற பாதுகாப்பு, பக்கபலம் என்பவையே முக்கிய காரணங்களாகும்.
எனவே கூனிக்குறுகி வெளியே தலைகாட்டத்தயங்கிய சுரேஷ் பிரேமச்சந்திரன், அவரையொத்த ஏனைய ~வாய் வீச்சு வீரர்கள் ஆகியோர் தமது கடந்தகால அனுபவங்களையும் அசைபோட்டுப் பார்க்கவேண்டியவர்களாக இருக்கின்றனர். ~பாம்புக்கு வாலையும், மீனுக்குத் தலையையும் காட்டுகின்ற புறம்போக்கான அரசியல் நிலைப்பாடுகளை இந்த ~வாய்ச்சொல் வீரர்கள் கைவிடவேண்டும்.
யுத்தத்தினால் நொந்துபோய் ஒரு நல்ல விடிவுக்காகக் காத்துநிற்கும் மக்களுக்கு என்ன தேவை என்பது பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைவிட, ~கையாலாகாத்தனமானவை பற்றிப் பேசித்திரியலாகாது.
வடக்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஐந்து பிரதிநிதிகளை மக்கள் தெரிவுசெய்துள்ளனர். அதேசமயம் ஆளுங்கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட தரப்பிலிருந்து மூவரையும், பிரதான எதிர்க்கட்சி சார்பிலிருந்து ஒருவரையும் வடபகுதி மக்கள் தெரிவு செய்துள்ளனர்.
இத்தெரிவு, தமிழ் மக்களது அரசியல் நிலைப்பபாடுகளை தெளிவுபடுத்துவதாக இருக்கின்றன. யுத்தச் சூழலுக்கு முற்பட்ட காலப்பகுதியில்கூட இடதுசாரிகள் உட்பட தென்னிலங்கையைச் சேர்ந்த கட்சிகளின் பிரதிநிதிகள் வடக்கு- கிழக்கில் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு- கிழக்கு மக்களைப் பொறுத்தவரை ~யார் குத்தியும் அரிசி ஆகட்டும் என்ற கண்ணோட்டமே அவர்களது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக இருந்து வருகின்றது. எனவே கடந்த பாராளுமன்றத்தில் தமக்கிருந்த பலத்தைவிட இத்தடவை குறைவான பலத்தைப் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தன்னை தமிழ் மக்களின் ~ஏகப்பிரதிநிதி எனப் பித்தலாட்டமாக கூறித்திரியலாகாது.
வடக்கே ஆளுந்தரப்பு சார்பாக போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளமை, ஏனைய கட்சிகள், உறுப்பினர்கள் மீதான தமிழ்மக்களின் அபிமானத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
திருகோணமலையில் தமது தரப்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன், இத்தடவை வடக்கு- கிழக்கு மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
அரசாங்கத்தின் மதிப்பையும், அபிமானத்தையும் எதிர்பார்ப்பதற்கு முன்பதாக தமது மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு சம்பந்தரும் அவரது அணியினரும் உரிய மதிப்பு மரியாதை வழங்கவேண்டியவர்களாக இருக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளது அனுதாபிகளாக இனங்காட்டித் தேர்தலில் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் முற்றாக மக்களால் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
இதுதவிர முன்னாள் தமிழ் தேசிய் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோரும் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய பின்னணியில் இறந்தகாலம், நிகழ்காலம் என்பற்றைக் கருத்திற்கொண்டு எதிர்காலத்திற்கென ~இனி ஒரு விதி செய்வதே தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும், ஏனைய தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதிகளினதும் தலையாய கடமையாக இருக்கவேண்டியுள்ளது.
நன்றி- தேனீ இணையம்
No comments:
Post a Comment