25 November 2009

சிற்றூழியர்கள், காவலாளிகள் மற்றும் சுகாதார சிற்றூழியர்கள் நியமனங்கள் அரச நியமன விதிமுறைகளுக்கு புறம்பானது - இரா. துரைரத்தினம்

கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, காணி மற்றும் போக்குவரத்து அமைச்சு மீதான குழு நிலை விவாதம் இன்று நடைபெற்ற போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையை விட்டு வெளி நடப்பு செய்துள்ளனர். மாகாண கல்வி அமைச்சினால் முறைகேடான முறையில் சிற்றூழியர் நியமனம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஐ.தே.க., ஸ்ரீ.மு.கா, பத்மநாபா ஈ.பி.ஆர்.எல் எப்,ஜே.வி.பி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களே வெளி நடப்புச் செய்தனர்.

கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் நேற்று முதல் நடைபெற்று வருகின்றது. சபை முதல்வர் கே.எம்.எம். பாயிஸ் தலைமையில் இன்று சபை கூடிய போது கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்கா தமது அமைச்சுக்கள் மீதான வரவு செலவுத்திட்டத்தை குழுநிலை விவாதத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார்.
அமைச்சர் உரையாற்றிய பின்பு எதிர்க்கட்சி சார்பில் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம், “நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சினால் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள சிற்றூழியர்கள், காவலாளிகள் மற்றும் சுகாதார சிற்றூழியர்கள நியமனங்கள் அரச நியமன விதிமுறைகளுக்கு புறம்பானது” என ஆட்சேபனை தெரிவித்தார்.

நேற்று இது தொடர்பாக சபையில் கேள்வி எழுப்பப்பட்ட போது அப்படி நியமனம் வழங்கப்படவில்லை என அமைச்சர் கூறி விட்டு இப்படி நியமனம் வழங்கியிருப்பதாகவும் சுட்டிக் காட்டினார். இந்நியமனம் விதிமுறைகளுக்கு மாறாக வழங்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து தாம் வெளிநடப்புச் செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் இரா.துரைரத்தினம் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

நன்றி- சூத்திரம்

No comments:

Post a Comment