02 November 2009

1977 வன்செயல் : யாழ்ப்பாணத்தில் எந்தவொரு சிங்களவரும் தாக்கப்படவில்லை

பேராசிரியர் சுசரித்த கம்லத்

1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்செயலின் போது யாழ்ப்பாணத்தில் எந்தவொரு சிங்களவரும் தமிழ் மக்களால் தாக்கப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படவில்லை. சூறையாடப் படவில்லை. என்பதை நான் எனது கண்களால் கண்டு தெரிந்து கொண்டவன். பாதுகாப்பு பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பல அதி காரிகள் என்னை வற்புறுத்தியும் நான் யாழ். மண்ணையும் அம்மக்களையும் விட்டு தென்பகுதிக்கு வெளியேறவில்லை. இவ் வாறு வரலாற்று ஆய்வாளரும், பேராசிரியருமான சுசரித்த கம்லத் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் திரிகோணி கலை அமைப்பிற்காக மொழிபெயர்ப்பு செய்த ஏ. ஜே. கனகரத்னா யாழ்ப்பாணத்தின் மனச் சாட்சி என்ற சிங்கள நூலின் வெளியீட்டு விழா பொரளை கலாநிதி என். எம். பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போதே பேராசிரியர் சுசரித்த கம்லத் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிகழ்விற்கு தர்மசிறி பண்டார தலைமை வகித்தார். “புராதன சிங்கள தமிழ் உறவுகள்” என்ற தலைப்பில் தொடர்ந்து பேராசிரியர் சுசரித்த கம்லத் உரையாற்றுகையில்அன்றைய கலவர சூழ்நிலையிலும் நான் பாதிக்கப்படவில்லை.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அன்று பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த இருநூறு சிங்கள மாணவர்கள் பாதுகாப்பு பிரிவினரால் தென் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அன்று கொழும்பிலும், இந்நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்களின் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டன. தீவைக்கப்பட்டன. உயிர்கள் பலி எடுக்கப்பட்டன. இந்தச் செய்திகள் யாழ்ப்பாணத்தில் வேகமாக பரவிய நிலையிலும் எந்தவொரு சிங்கள வரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் யாழ்ப் பாணத்திலிருந்து வெளியேறி வரும் வழியில் சிங்கள மாணவர்கள் வீதியில் செல்வோரை கேலி செய்வதில் ஈடுபட்டனர். தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் நீண்ட உறவு முறை உண்டு. கலை, கலாசாரம், பண்பாடு, மொழி என பல வகைகளிலும் தொடர்பு உண்டு.தமிழ் மொழி மிகப் பெரியதோர் பழைமைவாய்ந்த மொழி. இன்று உலக நாடுகள் அனைத்திலும் பேசப்படும் மொழியாகும். தமிழ் மொழியே சிங்கள மொழியின் ஆணிவேர்.சிங்களவர்களும் இந்திய நாட்டிலிருந்து வந்தவர்களே. பல சிங்கள மன்னர்களின் ஆட்சியில் மந்திரிகளாகவும்,படை வீரர்களாகவும், கடமையாற்றியவர்கள் இந்நாட்டு தமிழர்கள் என்பதை நாம் உணரவேண்டும். பல மன்னர்கள் தமிழ் பெண்களை மணம் முடித்துள்ளனர். வரலாற்றை துல்லியமாக ஆய்வு செய்யும் போது பல உண்மைகள் வெளிவரும். தமிழ் சிங்கள மக்களின் உறவு நீண்ட வரலாற்றையும் அந்நியோன்னியத் தையும் தெரிவிக்கிறது. பல சிங்கள மன்னர்கள் இந்து மதத்தைச் சேர்ந்த தமிழ், மலையாள குருக்கள்மாரின் ஆலோசனைகளை பெற்று ஆட்சி புரிந்தவர்கள்

மீள்குடியேற்றப் பணி ஜனவரிக்குள் பூர்த்தியடையும்

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள சகல மக்களும் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மீள்குடியேற்றப்பட்டு விடுவரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தொடர்ச்சியான மீள்குடியேற்றத்தின் மூலம் 280,000மாக விருந்த இடம்பெயர்ந்த மக்கள் தொகையை 160,000மாக குறைக்க முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, எதிர்வரும் 2010 ஜனவரிக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கையை பூரணப்படுத்த முடியுமெனவும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பல்கேரிய ஜனாதிபதி ஜோர்ஜி பார்வனோவிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு அரசியல் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு ரீதியானதாக அமைந்ததுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரம், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சம்பந்தமாகவும் இதன் போது ஆராயப்பட்டுள்ளன.

வவுனியாவிலிருந்து 2139 பேர் யாழ் வருகை

வவுனியா முகாம்களில் இருந்து 661 குடும்பங்களைச் சேர்ந்த 2139 பேர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவர்களில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் தீவகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இம் மக்கள் யாழ். கச்சேரியை வந்தடைந்து பின்னர் தீவகப் பகுதிகளுக்குச் சென்றனர். அதேநேரம் 529 குடும்பங்களைச் சேர்ந்த 1673 பேர் கரவெட்டி விக்னேஸ்வரா மகா வித்தியாலய வளாகத்திற்கும் பருத்தித்துறை பிரதேச செயலர் அலுவலகத்திற்கும் வந்து சேர்ந்தனர்.

முகாம்களில் இருந்த 1,19,000 பேர் சொந்த இடங்களுக்கு

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளோரில் 1,19,000 பேர் இதுவரை தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். மேலும் 1,61,000 பேரே தற்போது நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள னரெனத் தெரிவித்த அவர், இவர்களை துரிதமாக மீள்குடியமர்த்தும் வகையில் தினமும் 3,000ற்கு மேற்பட்டவர்களை இவ்வாறு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார். இதன்படி இந்த வாரத்தில் தினமும் 3,000ற்கும் 3,500ற்கும் மேற்பட்டவர்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட வுள்ளனரென்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:- குறுகிய காலத்தில் 1,19,000 பேரை அவர்களது சொந்த இடங்களுக்கு மீள அனுப்பிவைக்க முடிந்துள்ளது. அத்துடன் மழைக்காலம் வந்தால் அதனால் பாதிக்கப்படக்கூடிய 65,000 பேரை வேறு இடங்களில் தங்கவைப்பத ற்கான ஏற்பாடுகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்தன. இடர் முகாமைத்துவப் பிரிவும் யுனிசெப் நிறுவனமும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன. ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அனுப்பப்பட்டுவிட்டதால் அதற்கான அவசியம் ஏற்படவில்லை. அத்துடன் நலன்புரி நிலையப் பிரதேசங்களின் வடிகால் அமைப்புகள் திருத்தியமைக்கப் பட்டுள்ளதுடன், கூடாரங்கள், மலசலகூடங்கள் சகலதும் மழையினால் பாதிக்காத வகையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை வவுனியா வடக்கு, வவுனியா பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் மீள்குடியமர்வுக்காக சில கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இளமருதம் குளம், கள்ளிக்குளம், பூவரசம் குளம், கல்மடு, புளியங் குளம், கனகராயம் குளம் உள்ளிட்ட கிராமங்கள் இதற்காக விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வாரத்தில் இங்கு மீள்குடியேற்றங்கள் இடம்பெறவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

01 November 2009

ஆசிய ஜோதி அன்னை இந்திரா
நினைவுதினம்

இந்தியாவின் மிகப் பெரும் சொத்து என்று வர்ணிக்கப்படுபவர் அன்னை இந்திரா ஆவார்.

இந்திராவின் ஆளுமைத்திறன் இந்திய தேசத்தை உலக அரங்கில் தனிப்பெரும் சக்தியாக மிளிரச் செய்தது. எனவேதான் இந்தியாவே இந்திரா, இந்தியாவே இந்தியா என்று கவிஞர்கள் இந்தியாவையும் இந்திராவையும் வேறுபடுத்தாது ஒருமித்து நோக்குகின்றனர்.

இந்திரா 1917ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி ஜவஹர்லால் நேருவுக்கும், கமலா நேருவுக்கும் மகளாக அவதரித்தார். இந்திராவிற்கு ஜவஹர்லால் நேரு வைத்த பெயர் பிரியதர்சினி என்ற போதும் இந்திராவின் தாத்தா மோதிலால் நேரு தன் தாயாரின் நினைவாக இந்திரா என்று பெயரிட்டு மகிழந்தார்.

வயதிலேயே விடுதலை வேட்கையில் கவரப்பெற்ற அன்னை இந்திரா பிரான்ஸ் நாட்டு விடுதலை வீராங்கனையான ‘ஜோன் ஒப் ஆர்க்’ காக தன்னை உருவகித்து செயற்படலானார்.
அண்ணல் காந்தியின் அரவணைப்பில் வளர்ந்த அன்னை இந்திரா உலகம் வியக்கும் வண்ணம் அரசியல் வானில் மின்னி மறைந்த ஒரு தாரைகையாக விமர்சிக்கப்படுகின்றார். இந்திராவின் துணிவையும் புத்திக் கூர்மையையும் கண்டு வியந்த பிரித்தானியாவின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ‘இந்திரா கூரிய நகங்களைக் கொண்ட ஒரு புறா’ என்று மெச்சுகின்றார்.

1946 மார்ச் 26ம் திகதி இந்திரா, பெரோஸ் காந்தியை மணந்தார். இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு பலமுறை சிறை செல்ல நேர்ந்ததைப் போலவே இந்திராவும் பெரோஸ் காந்தியும் சிறைச்செல்ல நேர்ந்தது. இந்திராகாந்தி தீவிரவாதி என்ற கருத்துடன் நோக்கப்பட்டதால் சாதாரண சிறைக்கைதிகளுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் அவருக்கு மறுக்கப்பட்டன. இந்திரா தனது சிறை வாழ்க்கை குறித்து கருத்துத் தெரிவிக்கையில், சிறு வயதில் இருந்தே நான் பலமுறை சிறைக்கு சென்று என் தந்தை உள்ளிட்ட பல உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்திருக்கின்றேன். அதனால் சிறைத்தண்டனை என்பது எனக்கு பயத்தைக் கொடுக்கவில்லை என்றார்.

1944இல் ராஜீவ்காந்தியும், 1946 இல் சஞ்சய்காந்தியும் பெரோஸ்-இந்திரா தம்பதியினரின் மகன்மார்களாக அவதரித்தனர். 1935இல் இந்திய காங்கிரஸ் கமிட்டியில் ஓர் உறுப்பினராக சேர்ந்து கொண்ட இந்திரா 1959இல் காங்கிரஸ் கட்சியின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964இல் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் தகவல் செய்தித்துறை அமைச்சராக பதவி வகித்த இந்திரா, சாஸ்திரியின் மறைவின் பின் 1966இல் இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். இந்தியா சகல துறைகளிலும் மேம்பட்டு விளங்க தன்னை அர்ப்பணித்து நல்லாட்சி புரிந்த இந்திரா 1983இல் 101 நாடுகள் அங்கம் வகிக்கும் அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

உச்சியில் நிலைபெற்ற இந்திரா 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் திகதி தனது மெய்பாதுகாப்புகாவலர் சீக்கியரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார். ஆசிய ஜோதி அணைந்தது. இறப்பிற்கு முதல்நாள் ஒரிசாவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் இந்திரா உரையாற்றுகையில் தேசத்துக்கு சேவை புரியும் போது நான் இறக்க நேரிட்டாலும்கூட அதுபற்றி நான் பெருமையடைவேன். எனது ஒவ்வொரு துளி இரத்தமும், இந்தியாவின் வளர்ச்சிக்கும், ஸ்திரத்துக்கும் அதன் பலத்துக்கும் பங்களிக்கும் உறுதியாக நம்புகின்றேன் என்றார். அன்னை இந்திராவின் தேகம் அழிந்தாலும் அன்னை காட்டிய வழியில் இந்தியா இன்றும் வல்லரசு நோக்கி வீறு நடை போடுகின்றது.
துரைசாமி நடராஜா

அழுவதுதான் அவமானம், அவதிப்படுவது அவமானமல்ல.-யஹியா வாஸித்

நிழல் தேடி அலைந்தனர், மரம் வெட்டும் மனிர்கள், ஏன் புன்னகைக்கின்றாய் பூமித்தாயே. நம்மவனுகள் எல்லாம் காட்டுக்குள்ள போய் கள்ள மரம் வெட்டுவார்கள். வெட்டி, வெட்டி மொத்த காட்டையும் அழித்துவிட்டு, இறுதியில், இந்த மண்ணாங்கட்டி காட்டில் ஒதுங்கி நிற்பதற்கு குட ஒரு நிழல் இல்லையே என வருத்தப்படுவார்கள். வருத்தப்பட்டார்கள், இப்போ வருத்தப்படுகின்றார்கள். ஆம் வருத்தப்படுகின்றார்கள். கொலை செய்யும் மனிதர்கள். கொலை செய்த மனிதர்கள். கொலைக்கு கொலைக்கருவி வாங்கிக் கொடுத்த மனிதர்கள் எல்லாம் வன்னி முகாம் வேதனை பற்றி வருத்தப்படுகின்றார்கள். அடியேய் பொண்டாட்டி எனக்கு 15 நாளில் பிள்ளை பெற்றுத்தருவாயா என என்ட பொண்டாட்டியிடம் கேட்டேன். இந்தாளுக்கென்ன லுசோ. பிள்ளை பெற பத்துமாதம் எடுக்கும் புருஷனாரே என்றாள். அதற்கு ஏதாவது மெஷினுகள் இல்லையாடி எனக்கேட்டேன். அடமுட்டாளே அது நியதி. டார்வின் தத்துவம் அல்லது இறைவனின் ஆக்கல் தத்துவம் என்றாள். போனமாதம் எனது 5 வயதுப் பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச்சென்று, என்பிள்ளை உடனடியாக ஓஎல் எக்ஸாம் எடுக்க வேண்டும் என்றேன். பாடசாலைப் பொறுப்பாளர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, அண்ணே உங்கள் பிள்ளையை திடீரென 10ம் வகுப்பில் கொண்டு போய் இருத்த முடியாது. ஒவ்வொரு வகுப்பாக முதல் வகுப்பில் இருந்து படிக்க வேண்டும் என்றார். நேற்று விவசாயத் திணைக்கள அதிகாரியைச் சந்தித்து, நாளைக்கு என் வயலில் நெல் விதைக்கப் போகின்றேன். நாளை மறுதினம் அறுவடை செய்யலாம்தானே என்றேன். அவர் என்ர அடுத்த வீட்டுக்காறனுக்கு போன் பண்ணி, இந்தாளுக்கு மண்டை களண்டுட்டுது பக்கத்து வீட்டுக்காறர்களெல்லாம் கவனமாக இருங்கோ எனக்கூறியுள்ளார். ஆனால் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்தவர்களை நாளைக்கே குடியேற்று, குடியேற்ற வேண்டும், குடியேற்றாவிட்டால் மீண்டும் தொடங்கும் 5ம் கட்டப் போராட்டம் என எச்சரிக்கை விடுகின்றனர் கொலை செய்யும் மனிதர்கள். உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடம், பேசுவதற்குச் சுதந்திரம் என சகல சௌபாக்கியங்களுடனும் இருந்து கொண்டு வியாபாரத்தை தொடங்கியுள்ளனர் புலன் பெயர் புண்ணியவான்கள். இது புது வியாபாரம். மங்கையர்க்கரசியக்கா சிங்களனின் தோலை உரித்து செருப்பாக அணிவேன் என 1971 ல் தொடங்கி வைத்த வியாபாரம், காசியண்ணா, ஈழவேந்தன் அண்ணா, என கொஞ்சகாலம் தொய்யோ தொய்யென தொங்கி செய்த தொப்பி வியாபாரம், ஈபிஆர்எல்எப், ரெலோ, புளட், ஈரோஸ் என 1977 முதல் 1987 வரை கும்மியடித்து, கூப்பாடு போட்டு, போஸ்ர் ஒட்டி வடம் பிடித்த வியாபாரம், பின்னர் கட் அன்ட் ரைட்டானவர்கள் என சொல்லிக் கொண்டு வந்து ஆளையாள் கொன்று, அண்ணனை தம்பி கொன்று, தம்பியை அண்ணன் கொன்று, இருவரையும் அடுத்த வீட்டுக்காறன் கொன்று, எல்லோரையும் ஒருவர் கொன்று, ஒரு இயக்கம் கொன்று, அவர், அந்த நபர் தான்தோன்றி, அவருக்கு ஆரத்தி எடுத்து, அபிஷேகம் செய்து, குல்லி சூல் ஆடி (இது தமிழ் பேசும் முஸ்லீம்கள் பாவிக்கும் வார்த்தை. இதன் அர்த்தம். நான்தான், இனி நான்தான், இனி எல்லாமே நான்தான் என்ற ஒரு மஸ்து நிலையில் கூறும் சொல்) அடம்பிடித்து, ஆர்ப்பரித்து, கட்டுநாயக்கா, அனுராதபுரம். ஆணையிறவு என சிங்களத்தை கொன்று, எங்களுக்கு புள்ளிவிபரங்கள் சொல்லி, புலம் பெயர் நாடெல்லாம் ரொக்கட் லோஞ்சருக்கு, பைபர்கிளாஸ் போட்டுக்கு, ஏகே 47க்கு என பணம் குவித்து, வியாபாரத்தை பெருக்கோ பெருக்கென பெருக்கி, இப்போ மார்கட்டில் விற்பதற்கு எதுவும் இல்லாமல், 3 லட்சம் வன்னிப் புனிதர்களை ஏலத்துக்கு கொண்டு வந்துள்ள ஏல வியாபாரம்.
மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்ட செயலாலரும்,மதுரை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் மோகனுக்கு எமது அஞ்சலிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இரு முறை பதவி வகித்தவரும் மதுரை மாவட்ட செயலாளராகவும் பணியாற்றிய தோழர் மோகன் அவர்களின் பிரிவு முற்போக்கு, இடதுசாரி அரசியல் அரங்கில் ஒரு பாரிய வெற்றிடத்தை தோற்றுவித்துள்ளது. இந்திய மார்க்சிஸ்ட் கட்சியினூடாக அவர் தொழிலாளர்,விவசாயிகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் விடிவிற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர் மானிட தர்மம் இன்றுவரை இவ் உலகில் நிலைத்து நிற்பது இத்தகைய உன்னத மனிதர்களால்தான். வரலாறு வேறு காலகட்டங்களில் இத்தகைய மனிதர்களை உருவாக்கியுள்ளது.பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இந்திய மார்க்சிஸ்ட் கட்சியுடனான தனது உறவை எப்போதும் பெருமைக்குரியதாகவே கருதுகிறது. தோழர் ராமமூர்த்தி, தோழர் நல்லசிவம், தோழர் சுர்ஜித் போன்ற தோழர்கள் எமக்கு வழிகாட்டிகளாகவும் இருந்திருக்கிறார்கள். இடர்மிகுந்த காலங்களில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி எம்முடன் எமக்கு துணையாக இருந்திருக்கிறது. தோழர் மோகனின் இறப்பின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கிறோம். அன்னாரின் குடும்பத்தினிருக்கும், அவர் சார்ந்த கட்சினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.தோழர் மோகனுக்கு எமது இதய அஞ்சலிகள்.
தி.ஸ்ரீதரன்
பொதுச் செயலாளர்
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி