16 December 2009

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின் ஐ. ம. சு. முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியிடப்படும் என ஐ. ம. சு. முன்னணி செயலாளர் நாயகமும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜெயந்த் மகாவலி நிலையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் அங்கு தெரிவிக்கையில் ஐ. ம. சு. முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உட்கட்டமைப்பு அபிவிருத்தி இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி அடங்களான பல எதிர்காலத் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

33 கூட்டுக் கட்சிகளுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் பிரசாரப் பணிகளை முன்னெடுப்ப தற்கான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் குழுக்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வீடு வீடாகச் சென்று பிரசாரப் பணிகளை முன்னெடுப்பதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.


முறுகண்டி பிள்ளையார் கோவிலில் புளொட் தலைவர் சித்தார்தன்

கிளிநொச்சி முறிகண்டிப் பிள்ளையார் கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் முற்பகல் (13.12.2009) நடைபெற்றது. இந்நிகழ்வில் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ உயரதிகாரிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர். முறிகண்டிப் பிரதேசத்தில் இன்னமும் 15 நாட்களுக்குள் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ள நிலையில் முறிகண்டிப் பிள்ளையார் கோவில் நேற்று முன்தினம் முதல் பொதுமக்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட் பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்டத்தின் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட உருத்திரபுரம், ஜெயந்திநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு (13.12.2009) நேற்றுமுன்தினம் பிற்பகல் விஜயம் செய்திருந்தனர். அங்கு மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் நிலைமைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர். விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாத நிலைமை, உரிய வீட்டுவசதிகள் இல்லாமை, போக்குவரத்துப் பிரச்சினைகள் ஆகியவற்றையும் அங்கு காணக்கூடியதாக இருந்தது.

இப்பிரச்சினைகளை அரச உயர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கைகளை எடுக்க முயற்சிப்பதாக புளொட் தலைவர் அம்மக்களிடம் தெரிவித்தார். அத்துடன் மீள்குடியேறிய மக்களுக்கான வீடமைப்புக்கென 45 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு கிராம அதிகாரிகளின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதையும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அனைத்து வசதிகளும் பூர்த்தி செய்யப்படாத நிலையிலும், தமது சொத்துக்களை இழந்த நிலையிலும் முகாம்களிலிருந்து தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி வந்துள்ளமை தமக்கு சற்று ஆறுதலளிப்பதாக அம்மக்கள் புளொட் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர்.

வெல்லாவெளியில் வெள்ளம் : மீட்புப் பணியில் செஞ்சிலுவைச் சங்கம்

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் வெள்ளத்தினால் சூழப்பட்ட ஊற்றுமடு கிராமத்தைச் சேர்ந்த 75 இற்கு மேற்பட்ட குடும்பங்களை படகுகள் மூலம் அழைத்து வந்த இலங்கை செஞ்சிலுவைச் சங்க மீட்புக் குழுவினர் இவர்களை வெல்லாவெளி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்கள் பாராமரிக்கப்பட்டு வருதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கில் 65,000 குடும்பங்கள் பாதிப்பு


கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்த அடை மழை காரணமாக சுமார் 65,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் தெரிவித்தனர். இம் மழையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 58,000 குடும்பங்களில் 377 குடும்பங்கள் இடம்பெயர்ந்து வழிபாட்டு தலங்களிலும், பொது இடங்களிலும் தங்கியிருப்பதாக மட்டு. மாவட்ட இணைப்பாளர் கே. விமலராசா தெரிவித்துள்ளார்.

திருமலை மாவட்டத்தில் சுமார் 5600 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக திருமலை மாவட்ட இணைப்பாளர் எம். எஸ். எம். ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 500 குடும்பங்களில் சுமார் 200 குடும்பங்கள் இடம்பெயர்ந்திருப்பதாக மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்தார்

தொடர் மழையால் மட்டக்களப்பு வாகனேரி, றூகம், நவகிரி, புனாணை, உன்னிச்சை குளங்களின் அணைகள் உடைப்பெடுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவற்றின் சில வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிட்டார்.

மட்டு. செங்கலடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாகரை, காத்தான்குடி, வாழைச்சேனை, வெல்லாவெளி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தமது சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து உறவினர்கள் வீடுகளிலும் சில குடும்பங்கள் பொதுக் கட்டடங்களிலும் தங்கியுள்ளனர்.பல கிராமங்களின் தொடர்பு வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பல பாதைகளும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதால் வாகனங்கள், பயணிகள் பயணிக்க முடியாதுள்ளது.

மட்டு. மாவட்டத்தில் வெள்ள நிலைமை காரணமாக வேத்துச்சேனைக் கிராமம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், கிராம மக்களை மீட்கும் பணிகள் வள்ளங்கள் மூலம் இடம்பெற்று வரு கின்றன. வெள்ளாவெளி மண்டூர் வீதி, வெள்ளாவெளி பாலையடி வட்டை வீதி, ஆனைகட்டிய வெளி வீதி, முங்கில் ஆறு பாதை மேல் 5 அடிக்கு வெள்ள நீர் செல்கின்றது.


14 December 2009

தமிழ் மக்கள் ஜனாதிபதியை ஆதரிக்க வேண்டும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்க வேண்டும். தமிழ் மக்கள் நிதானமாக முடிவெடுக்கும் உரிமையை பெற்றிருந்தாலும் கிழக்கு மாகாண தமிழர்களைப் பொறுத்த வரை மாகாண சபையைப் பலப்படுத்த வேண்டுமென்றால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் ஏற்பாடு செய்த, 'இளைஞர்களுக்கான விருது வழங்குதல்- 2009 நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே தெரிவித்தார்

அவர் மேலும் அங்கு தெரிவிக்கையில் தமிழ் மக்களைப் பொறுத்த வரை, இந்தத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற குழப்ப நிலையில் இருப்பது போல் தெரிகின்றது. என்றாலும் அவர்கள் நிதானமாக சிந்தித்து எடுக்கும் முடிவில் தான் இம்மாகாணத்தின் எதிர்காலமே தங்கியுள்ளது.

கடந்த கால யுத்தத்னால் கிழக்கு மாகாணம் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுப் பின்தள்ளப்பட்டது. இதனைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இம் மாகாணத்தைச் சேர்ந்த சகல தரப்பினரதும் பொறுப்பாகும்.

தற்போது மாகாண சபை நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு இன்னமும் அதிகாரப் பகிர்வு தேவை. இதற்கான அதிகாரங்களைத் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தான் வழங்க முடியும். இந்நிலையில் கிழக்கு மாகாண மக்கள் அவரையே ஆதரிக்க வேண்டும்" என்றார்


மனித உரிமை நிகழ்வில் ஸ்ரீதரன் உரை

இந்த வீரசிங்கம் மண்டபத்தின் கடந்த கால நிகழ்வுகள் என் மனத்திரையில் நிழலாடுகின்றன.

தமிழராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் ஒன்பது தமிழர்கள் பலியான சம்பவம் இந்த மண்டபத்தின் முன்றலில்தான் நடைபெற்றது.


அமிர்தலிங்கம், சண்முகதாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல்

தலைவர்களின் உரைகளை இம் மண்டபத்தில் செவிமடுத்திருக்கிறேன். தந்தை செல்வாவின் பூதவுடல் இங்குதான் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

சங்காரம் உள்ளிட்ட பல அரங்காற்றுகைகள் இம் மண்டபத்தில் நிகழ்ந்தன

இதற்கு அண்மையில் உள்ள பண்ணைக் கடலில்தான் பயங்கரவாதத் தடைச்சட்டம் வந்ததன் பின் கொல்லப்பட்ட இன்பம், செல்வம் ஆகிய இளைஞர்களின் சடலங்கள் மிதந்தன. அந்த நாட்களில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை எமது மக்களின் வாழ்வு துயரமான ஒரு பாதையில் பயணித்தது.

இன்று எல்லாவற்றையும் கட்டுடைத்து பார்க்க வேண்டும். முன்னாள் யாழ் நகரபிதா அல்பிரட் துரையப்பாவின் படுகொலையிலிருந்து இப்போது நாம் பார்க்க வேண்டும்.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் பண்பாடு எமது சமூகத்தில் மீள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

அரச பயங்கரவாத வன்முறைகளுக்கப்பால் எமது சமூகத்தில் நிகழ்ந்த வன்முறைகளைப் பற்றியும் நாம் பார்க்க வேண்டும். தீண்டாமை கொடுமைக்கு கொடூரமாக பலியான அண்ணாசாமி போன்றவர்களையும் இவ்விடத்தில் நினைவுகூர வேண்டும்.

இங்கு கூடியிருக்கும் தலைவர்கள் வௌ;வேறு கருத்துக்களை கொண்டவர்களாக இருந்தாலும் சமூகம் தொடர்பாக அவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

வடக்கு வலிகாமம் மக்கள் கடந்த 23 வருடங்களாக தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் பல்வேறு இன்னல்கள் சிரமங்கள் மத்தியில் வாழ்கிறார்கள். சொந்த ஊரை இழப்பது எவ்வளவு கொடுமையானது. பிறந்து வளர்ந்த ஊர் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தும். கோயில், குளம், பாடசாலை, காதல், சிறு சிறு குழப்படிகள் என பல விடயங்களின் மனப்பதிவு அது. ஒரு மனிதனின் வாழ்வின் கட்டமைப்பு.

இதே பிரச்சினை முஸ்லீம் மக்களுக்கும் உண்டு. சோனகத்தெருவில் சென்றுதான் சாக வேண்டும் என்ற கனவுடன்தான் வாழ்ந்தார்கள். பலரின் கனவு புத்தளத்துடனேயே நிராசையானது.

நாம் வெ வ் வேறு கருத்துக்களுடன் நாகரிகமாக உறவாடப் பழகிக்கொள்ள வேண்டும்.

வேறுபட்ட அபிப்பிராயங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழ் அரசியலில் பெண்களின் பிரசன்னம் அரிதாகவே இருந்தது.

போராசிரியர் ரஜனி திரணகம, சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் போன்ற மனித உரிமைவாதிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அரசியல் வேறுபாடுகள் கொண்டவர்களை துரோகிகள் கைக்கூலிகள் என்று தீண்டாமை, பாராட்டும் போக்கு எமது சமூகத்தில் ஆதிக்கம் வகித்தது, வகிக்கிறது.

மனித உரிமைகள் இல்லத்தின் செரின் சேவியர் போன்றவர்கள் அந்த விடயத்தில் ஆரோக்கியமான முன்மாதிரி ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

வெ வ் வேறு கருத்துநிலை கொண்ட அரசியல் கட்சியினரை, சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஓரிடத்தில் அமரச்செய்து இவர்கள் ஒன்றாக சென்று அகதி மக்களை பார்க்க அனுமதி பெற வேண்டும் என்ற முனைப்பில் யுத்தம் முடிவடைவதற்கு முந்திய ஏப்பிரல் மாதத்திலேயே ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டவர்.

எமது சமூகத்தில் இளந்தலைமுறைத் தலைவர்கள் உருவாக வேண்டும்.

இங்கு நிகழ்ந்த அரங்காற்றுகை ஒற்றுமையை வலியுறுத்தியதாகவும் மனிதத்தின் வாழ்வு பற்றிய தேடலைக் கொண்டிருந்தது.

இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் குடியேற்றப்படுவதும், சுயமரியாதை கௌரவத்துடன் கூடிய வாழ்வு கிட்டுவதும் இன்றைய ஜீவாதாரமான விடயங்கள் என்றும் குறிப்பிட்டார்.


யாழில் மனித உரிமை தின நிகழ்வு

மனித உரிமை இல்லத்தினால் நடத்தப்பட்ட மனித உரிமைகள் தின நிகழ்வு டிசம்பர் 10ந் திகதி மிகவும் நேர்த்தியாக ஒழுங்கு செய்யபட்டிருந்தது. இந்நிகழ்வினை ஏற்பாடு; செய்த மனித உரிமை இல்லத்தின் தலைவர் செரின் சேவியர், நிர்வாகிகளில் ஒருவரான மேகலா சண்முகம் ஆகியோரையும் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் பங்களித்த அனைவரையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

கடந்த கால்நூற்றாண்டுகளாக நிலவிய யாழ்ப்பாண சூழ்நிலையில் இது ஒரு மங்களகரமான ஆரம்பமாக இருந்தது சுமார் 2000பேர் வரையிலான மனித உரிமை ஆர்வலர்கள் சமூகப் பிரக்ஞை கொண்டவர்கள்,ஆன்மீகவாதிகள் உட்பட பெருமளவிலான தமிழ், முஸ்லீம் பெண்களும் பங்கு பற்றியிருந்தார்கள்.

இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சனைகள் - கடந்த கால்நூற்றாணடுகளாக அகதி முகாம்களில் அல்லலுறும் வடக்கு வலிகாமம் மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவது,19 வருடங்களாக வேதனைகளுடன் புத்தளத்திலும் நாட்டின் இதர பகுதிகளிலும் வாழும் முஸ்லீம் மக்கள் யாழ் திரும்புவது, காணமல் போனவர்கள் சிறைகளில் வாடுபவர்கள், பயங்கரவாத தடைச்சட்டம், அரசியல் தீர்வு, தீண்டாமை, பெண் ஒடுக்குமுறை, ஜனநாயகம், ஒற்றுமை உள்ளிட்ட விடயங்கள் மனித உரிமைக் கண்ணோட்டதில் பேசப்பட்டன.

மனித உரிமை இல்லத்தின் தலைவி செரின் சேவியர், ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தமிழரசு கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன,; பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் இன் செயலாளர் ஸ்ரீதரன் மனித உரிமைவாதியும் மாநகரசபை உறுப்பினருமான சுபியான் மனித உரிமைகள் சட்டதரணியும் யாழ் மாநகசபை உறுப்பினருமான றெமிடியஸ் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் ஜெயரங்கன் வடக்கு வலிகாமம் இடம் பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு கழகத்தை சேர்ந்த ஆ.சி. நடராசா யாழ் போதனா வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சை பிரிவு மருத்துவர் நா. ஜெயக்குமார் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பினால் பாதிப்புற்ற மக்கள் ஒன்றியத்தை சேர்ந்த நடராசா உள்ளிட்ட பலரும் தம் கருத்துகளை வழங்கினர்

மக்களிடமிருந்து அரசியல் தலைவர்களுக்கு அதிகாரப்பகிர்வு, இடம்பெயாந்த மக்களின் எதிர்காலம் பற்றிய கேள்விகளும் முன்வைக்கபட்டன. நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன் அரசியல் கட்சியினர் மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் வீரசிங்க மண்டப முன்றலில் 9 மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. ஒற்றுமையை வலியுறுத்தியும்- சகோதரச் சண்டை, யுத்தம் ஆகியவற்றால் காயடிக்கபட்டது மக்களின் வாழ்வு என்பதையும். இழந்து போன பசுமையான அந்தக் காலத்தின் கனவுகளையும் சுமந்து நின்ற அரங்காற்றுகை ஒன்றும் நிகழ்ந்தது.

இது குறிப்பிடத்தகுந்த ஒரு அரங்க நிகழ்வாகும். மனித உரிமைகள் இல்ல யாழ் மாவட்ட இணைப்பாளர் ரி.ஏ.அருள்நாயகம் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதனையடுத்து அடுத்து யாழ் பஸ் நிலையம் வரை மனித உரிமை விழிப்புணர்வுப் பேரணி ஒன்று நடைபெற்றது. மாலை யாழ் ஆரிய குளத்தில் தீபமேற்றும் நிகழ்வு நடைபெற்றது. மக்களின் மனங்களிலும் முகங்களிலும் மாற்றங்கள் புலப்பட்டன.

சுயபரிசோதனை, ஜக்கியம். உடனடி நீண்டகாலப் பிரச்சனைக்கு தீர்வு என்பன பிரதானமாக வலியுறுத்தபட்டன.