25 November 2009

பெண்கள் மீதான அடக்குமுறை


இன்று உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் காலத்திற்கு காலம் வௌ;வேறு வடிவம் பெற்று வருகின்றனவே ஒழிய குறைந்தபாடில்லை. பெண்கள் மீதான உடல் ரீதியான வன்முறைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

ஐ.நா வின் அறிக்கைகளைப் பார்க்கும்போது குடும்பத்தில் தனக்கு மிக நெருக்கமானவர்களாலேயே பெண்கள் பல்வேறு வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தம் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகளை எதிர்த்து குரல்கொடுக்க துணியாத நிலையிலேயே இவர்கள் மீதான வன்முறைகளும் அடக்குமுறைகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன என்பதே உண்மை.

உலக சனத்தொகையில் இன்று பெண்களின் சதவீதம் 50 ஐ எட்டிவிட்டது. ஆண்களை விட ஒரு சமூகத்தில் பெண்கள் அங்கம் வகிக்கும் பாத்திரங்கள் இன்றியமையாதன என்று கூறலாம். எனினும் குடும்பம் மற்றும் சமூக வன்முறைகளில் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு பாத்திரமாகவும் பெண் விளங்குவது வேதனைக்குரியது.

இன்று குடும்ப வன்முறை என்ற பதம்கூட பெண்களுக்கு அநீதிகளின் அதிகரிப்பால் உருவானதோ என்றுகூட கூறத்தோன்றுகிறது. காரணம் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களின் எண்ணிக்கை அந்தளவானது.இன்று உலகம் எந்தளவிற்கு நாகரீகத்திலும் அறிவியலிலும் ஏற்றம் கண்டுவருகின்றதோ அந்தளவிற்கு குற்றச் சம்பங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

ஆய்வுகளை பார்த்தால் தலை சுற்றும். இன்று உலகில் உள்ள பெண்கள் எண்ணிக்கையில் ஐந்துபெண்களில் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோ அல்லது தனது வாழ்நாளில் ஒரு தடவையேனும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டோ இருப்பார்.

அமெரிக்காவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறாள். பிரான்ஸில் வருடந்தோறும் 25 ஆயிரம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படுகின்றனர். துருக்கியில் திருமணமான பெண்களில் 35 வீதமானோர் தமது கணவராலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அவ்வளவு ஏன் எமது அண்டைய நாடான இந்தியாவில் கூட வருடந்தோறும் 15 ஆயிரம் பேர் சீதனக் கொடுமையால் கொல்லப்படுகின்றனர் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? திருமண பராயம் அடையும் முன்பாகவே பெண்களை இல்வாழ்வில் பலவந்தமாக சேர்க்கும் நடைமுறை இன்று உலகில் பல நாடுகளில் உள்ளது. ஆய்வுகளின் படி பாரம்பரியம், கலாசாரம், சடங்கு என்ற பெயர்களில் இன்று உலகம் முழுவதும் 10-17 வயதுக்கிடைப்பட்ட 82 மில்லியன் சிறுமிகள் கட்டாயத் திருமணம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குடும்ப கௌரவம் சமூகத்தின் விமர்சனம் என்பவை காரணமாக பல பெற்றோர்கள் கூட தமது பிள்ளைகளுக்கு நடக்கும் அக்கிரமங்களை மூடிமறைத்து விடுகின்றனர். இதுவே அவர்களுக்கெதிராக மேலும் மேலும் குற்றங்கள் பெருக வழிவகுக்கிறது.

வீட்டு வன்முறைகளுக்கு அப்பாற்பட்டு யுத்தங்கள் கூட இன்று பெண்களை பாடாய் படுத்துகின்றன.யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அகதிகளில் 80 வீதமானோரில் பெண்களும் சிறுவர்களுமே அடங்குகின்றனர். இதுவரை உலகில் இடம்பெற்ற 34 யுத்தங்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே.

யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்திச்செல்லப்படுவது 85 வீதமாக உள்ளது.

பெண் என்பவள் பிறந்ததிலிருந்து பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்து வளரக்கூடிய ஒரு சூழல் உண்மையில் ஆசிய கண்ட நாடுகளுக்கு குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளிடையே நிலவுகிறது. இறுக்கமான கலாசார பண்பாடுகளைக் கொண்டமைந்த நாடுகள் எள்றபடியாலேயே இந்நிலை என்று நாம் எம்மை சமாதானப்படுத்திக்கொள்ள முடியாது.

உலகமே போற்றும் தாய் என்ற அற்புதமான பாத்திரப்படைப்பை கொண்ட பெண்ணின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் இனி ஒரு விதி செய்வோம் என காலங்காலமாக கத்திக்கொண்டு இருப்பதில் மட்டும் பிரயோசனம் இல்லை என்பதே நிதர்சனம்.

ருத்ரன்

நன்றி- வீரகேசரி

No comments:

Post a Comment