தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் செயற்திட்டத்தில் 620 ரூபா என்ற தொகையை அடிப்படைச் சம்பளமாக நாம் முன்வைத்துள்ளோம். அதிலிருந்தே பேச்சையும் ஆரம்பிக்குமாறு கோருகிறோம். மாறாக 500 ரூபா என்ற கம்பனிகளின் தீர்மானத்துக்கு நாம் தயாராகவில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
அத்துடன் இடைக்கால கொடுப்பனவு தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் தமக்கு முதலாளிமார் சம்மேளனம் ஆதாரத்துடன் கையளித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
சாமிமலை மீரியாகோட்டை விவசாய கிராமத்திற்கான 200 குடும்பங்கள் பயன்பெறும் 13 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட மின்சாரம் வழங்கும் வைபவத்தில் அதிதியாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் இ.தொ.கா.வின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பி. சக்திவேல், பிலிப்குமார் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வெள்ளையன் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது உரை நிகழ்த்திய முத்து சிவலிங்கம் மேலும் தெரிவித்ததாவது
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் 8 ஆவது முறையாகவும் பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்துள்ளது. இந்த நிலையில் நாம் முன்வைத்துள்ள சம்பள உயர்வுக்கு குறைவான தொகையை கம்பனிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வந்தால் பேச்சு வார்த்தைகளை தொடர முடியாது முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் 17 மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டுள்ள சம்பள பேச்சுவார்த்தையில் இ.தொ.கா. வின் சம்பள உயர்வு கோரிக்கைகளுக்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் காட்டாத காரணத்தால் இந் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை தொழிலாளர்களுக்கு 17 மாதங்களுக்கான மீள் கொடுப்பனவு வழங்கப்பமாட்டாது என்று தெரிவிக்கும் முதலாளிமார் சம்மேளனம் தற்பொழுது வழங்கப்பட்டுள்ள இடைக்கால கொடுப்பனவு மீள் கொடுப்பனவை அடிப்படையாகக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.
இன்னும் ஒரு காங்கிரஸை உருவாக்க முடியாது. இருக்கும் காங்கிரஸை எவராலும் அழிக்கவும் முடியாது. காங்கிரஸின் எதிர்காலம் நன்றாகவே இருக்கின்றது. அத்தோடு சக்தியாகவும் இருக்கின்றது. இதனை இலகுவில் அழித்து விட முடியாது.
நாம் கனவு கண்டால் அது நனவாக வேண்டும். விழுந்து கிடந்தால் மீண்டும் எழும்பவும் வேண்டும். இ.தொ.கா. ஸ்தாபனத்தை கட்டியமைக்க அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் ஜனன தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.
எந்தவொரு கட்சி பேதமும் வேற்றுமையையும் காட்டாது மக்களுக்கென்ற சேவையை முன்னெடுத்து வந்த மாபெரும் தலைவருக்கு மக்கள் அனைவரும் விளக்கேற்றி மரியாதை செலுத்த வேண்டும்.
நியாயமான சம்பள உயர்வை இ.தொ.கா. பெற்றுத் தரும். இன்று ஆறுமுகன் தொண்டமானை பலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால் நாம் இன்று தைரியத்துடன் வாழ்கின்றோம் என்றால் இதற்குக் காரணம் ஆறுமுகன் தான்.
2500 ரூபா ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டமையினால் சம்பள உயர்வுடன் கிடைக்கப் பெறும் மீள் கொடுப்பனவுக்கு சிலர் ஆப்பு வைத்துள்ளனர். இது தொடர்பாக நாம் கேட்ட பொழுது அது வேறு இது வேறு என காரணம் காட்டுகின்றார்கள். ஆனால் அங்கே ஒப்பந்த அடிப்படையில் இந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட்டதாக முதலாளிமார் சம்மேளனம் ஆதாரத்துடன் கையளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment