22 April 2010

ஐ.தே.கூட்டணியிலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணி விலகல்

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கூட்டணியிலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணி விலகிக் கொண்டதாக அதன் தலைவர் மனோ கணேசன் தமது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை என்பதால் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

இதனால் ஜனநாயக மக்கள் முன்னணியைத் தமது கூட்டமைப்பிலிருந்து நீக்கியதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தமது கட்சி சுயமாக முடிவெடுத்து விலகியதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் அலுவலகம் தெரிவிக்கிறது.

கொழும்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் இருவரை கடந்த பொதுத் தேர்தலில் நிறுத்துவது தொடர்பில் ஏற்கனவே ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மனோ கணேசனுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவியது.
அது தொடர்பான கூட்டமொன்றில் கட்சியுடன் முரண்பட்ட மனோ கணேசன், இடைநடுவே எழுந்து வந்து தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், தோல்வியுற்றதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி தனது தேசியப்பட்டியலில் இடம் ஒதுக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் விரைவில் தனது முடிவினை அறிவிப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்

No comments:

Post a Comment