24 October 2009

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் வரவேற்கத்தக்கது -வாசு

13ஆவது திருத்தச் சட்டத்தினை விரைவில் நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.அதிகார பரவலாக்கல், அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாட்டை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டு தமிழ், முஸ்லிம் மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்றார்.

மேலும் தெரிவிக்கையில் ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனையால் அரசாங்கத்திற்குள் அங்கம் வகிக்கும் சிங்கள பௌத்த இனவாதக் கட்சிகளிடையே விவாதம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால்,ஜனாதிபதி இந்த இனவாத சக்திகளுக்கு அஞ்சாது 13ஆவது திருத்தத்தை முன்னெடுத்து அதிகாரத்தை பரவலாக்குவது தொடர்பிலும் தமிழ் மக்களுக்கு வழங்கப் போகும் அரசியல் தீர்வு தொடர்பாகவும் தெளிவான நிலைப்பாட்டை வெளியிட வேண்டும். புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். இதன் மூலம் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறுவதோடு சர்வதேச ஒத்துழைப்பையும் பெற முடியும்.

ஜனாதிபதி இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்தால் அரசாங்கத்திற்குள் உள்ள சிங்கள பௌத்த இனவாதக் கட்சிகளான ஹெல உறுமய, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி நாட்டில் சிங்கள ஆதிக்கத்தை ஏற்படுத்த முனையும் சக்திகளுடன் இணைந்து கொள்ளும். ஜனநாயக சக்திகளும் சிறுபான்மை இனத்தவரும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவார்கள். எனவே நிச்சயம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் இந்நாட்டின் தலைவராவார். இவ்வாறானதொரு சூழ்நிலை நாட்டில் உருவாகும் போது ஐ.தே.கட்சி அரசியலில் அநாதையாகி விடும்.

மீளக் குடியேற்றம் தமிழ் மக்களை மீளக் குடியேற்றுவதில் ஜனாதிபதி அதிக அக்கறை காட்டி வருகிறார். ஆனால், இதற்கு பாதுகாப்புத் தரப்பினர் முட்டுக்கட்டை போடுகின்றனர்.

ஆனால், இன்று ஜனாதிபதி இம் முட்டுக்கட்டைகளை பொருட்படுத்தாது கிளிநொச்சியிலும் மீள் குடியேற்றத்தை ஆரம்பித்துள்ளார். எனவே நாட்டில் சிங்கள ஆதிக்கத்தை ஏற்படுத்த முயல்பவர்களின் முயற்சிகள் தகர்த்தெறியப்பட்டு தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி நிச்சயம் வெற்றி பெறுவார்.

No comments:

Post a Comment