27 December 2009

பரந்தனில் 300 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

வவுனியா வடக்கு நெடுங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராம சேவகர் பிரிவில் 300 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர்.

பரந்தன் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் மற்றும் மதியாமடு கிராமங்களிலேயே இவர்கள் குடியமர்த்தப்படவுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

கதிர்காமர் நிவாரணக் கிராமம் உட்பட ஏனைய நிவாரணக் கிராமங்களிலிருந்து 300 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 300 குடும்பங்களுக்குரிய நிவாரணப் பொருட்கள், மற்றும் உதவித் தொகை அனைத்தும் வழங்கப்பட்டு பஸ் வண்டிகள் மூலம் இவர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

வவுனியா வடக்கு, நெடுங்கேணி உதவி அரச அதிபர் பிரிவிலுள்ள 20 கிராம சேவகர் பிரிவில் 08 கிராம சேவகர் பிரிவுகளில் ஏற்கனவே மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் தற்போது எட்டு நிவாரணக் கிராமங்களே இயங்குகின்றன. இவற்றில் தற்போது 84,000 பேர் வரையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கதிர்காமர், ஆனந்த குமாரசுவாமி (வலயம் 1), இராமநாதன் (வலயம் 2), அருணாசலம் (வலயம் 3), வலயம் 4, வலயம் 5, வலயம் 6, தர்மபுரம் ஆகிய நிவாரணக் கிராமங்களிலேயே தற்போது மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

180 நாட்களுக்குள் நிவாரணக் கிராமங்களிலுள்ள அனைவரும் மீளக்குடியமர்த்தும் அரசின் திட்டத்திற்கமைய மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

க. பொ. த. சாதாரண தர பரீட்சைகள் நடைபெறுவதாலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் ஐயாயிரம் பேர் அடுத்த வாரம் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

பரந்தன், உமையாள்புரம், குமரபுரம் பகுதிகளில் மக்களை மீளக் குடியமர்த்த துரித நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 19 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 8 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தற் போது மீள்குடியேற்றப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைகளுக்கமைய, வடக்கின் மீள் குடியேற்றம், அபிவிருத்தி, பாதுகாப்பு என்பவற்றிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவின் அறிவுறுத்தல்களுக்கமைய கிளிநொச்சியில் மீள்குடி யேற்றம் மேற்கொள்ளப்படுவதாக அரச அதிபர் குறிப்பிட்டார். இந்த மாவட்டத்தின் பூநகரி, கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி (பளை) ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். தற்போது ஏ-9 பாதையின் மேற்குப் பகுதியில் குடியேற்றம் இடம்பெறுவதாகக் கூறிய அரச அதிபர் திருமதி கேதீஸ்வரன், அடுத்தவாரம் முதல் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் ஐயாயிரம் பேர் மீள் குடியமர்த்தப்பட உள்ளதாகவும், இன்னும், ஓரிரு தினங்களில் மீள்குடியேற்றத்துக்கான திகதி நிர்ணயிக்கப்படுமென்றும் கூறினார். மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களையும் எதிர் வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னதாக முற்றாக மீள்குடியேற்ற எதிர்பார்ப்பதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மக்கள் மீள்குடியேறிய பகுதிகளில் அவர்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்தவென விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீர்ப்பாசனத்தின் வசதி கருதி பிரதேசங்களில் உள்ள குளங்கள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார். இது இவ்வாறிருக்க கிளிநொச்சி பகுதியில் தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியிருப்பதாக பொதுமக்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர். கிளிநொச்சியில் பணியாற்றும் அரச ஊழியர்களின் நலன்கருதி யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்குமிடையில் தினமும் மூன்று பஸ் சேவைகள் இடம் பெற்று வருகின்றன.

நன்றி- அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment