இராணுவம் என்பது எந்தச் சமூகத்திலிருந்து தோற்றுவிக்கப்படுகின்றதோ அந்தச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய நுணுக்க உருமாதிரி என்று கூறலாம். இலங்கைச் சமுதாயம் குறைந்தபட்சம் 2006 ஆம் ஆண்டிலிருந்து ஓயாத வன்முறைக் குற்றச் செயல்களை அனுபவித்துக் கொண்டு வந்திருக்கிறது. கொலை மற்றும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றதென்றால் அதன் அர்த்தம் ஒவ்வொரு இலங்கையரும் ஒரு கொலையாளி அல்லது காமுகன் என்பதல்ல.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலும் கூட சிறுவர்களைப் பாலியல் கொடுமைக்கு உட்படுத்துகின்ற சம்பவங்கள் உட்பட சாதாரண பிரஜைகளுக்கு எதிராக சீருடை அணிந்தவர்கள் இழைக்கின்ற குற்றச் செயல்கள் பெருவாரியாக இடம்பெற்று வந்திருக்கின்றன. இதன் அர்த்தம் இராணுவத்தில் உள்ளவர்கள் எல்லோருமே கிறிமினல்கள் என்பதல்ல; இவர்களில் சிலர்தான் கிறிமினல்கள். போர்க்காலத்தில் அவர்களின் சாதனைகளையோ அல்லது அவர்களின் குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் இன அடையாளத்தையோ பொருட்படுத்தாமல் இவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
சீருடை, அதை அணிந்திருப்பவரே சட்டத்துக்கு மேலானவர் என்று ஆக்கிவிடக்கூடாது. சட்டத்தின் ஆட்சி எங்கெல்லாம் பலவீனமானதாக இருக்கிறதோ அங்கெல்லாம் சீருடை அணிந்தவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் போன்று நடத்தப்படுகின்ற போக்கைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், அதுவே கொள்கையாக அல்லது மீறமுடியாத கோட்பாடாக மாறிவிடக்கூடாது. வெற்றிகரமான போர் நடவடிக்கைகளில் பங்கேற்ற எவர் மீதும் எந்தக் குற்றச் செயலுக்காகவும் வழக்குத்தொடரப்படக்கூடாது என்று கூறும் போது ராஜபக் ஷ முகாம் இத்தகைய ஒரு விலக்கீட்டுரிமையையே கோருகின்றது. இலங்கை சர்வதேச ரீதியாக எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் போரின் விளைவானவையல்ல. ராஜபக் ஷாக்களின் அரசியல் பிரசார கோணங்கித்தனங்களின் விளைவாகவே போருக்கு மனிதாபிமான நடவடிக்கை என்று நாமகரணம் சூட்டிய ராஜபக் ஷாக்கள் அந்த நடவடிக்கைகளின் போது குடிமக்கள் எவரும் பலியாகவில்லை என்ற தங்களின் கூற்றை நடைமுறை யதார்த்தமாக ஏற்கவேண்டுமென்று உத்தரவிட்டார்கள். தமிழ்க் குடிமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடிய சாத்தியம் குறித்து தெரிவிக்கப்பட்ட எந்தக் கருத்தும் துரோகத்தனம் என்றே வர்ணிக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் பாதிப்புகள் குறித்து செய்தி வெளியிட முடியாதவாறு ஊடகங்கள் தடுக்கப்பட்டன. அத்தடையை மீறிச் செயற்பட்டிருக்கக்கூடிய ஊடகவியலாளர்கள் சிங்களப்புலிகள் என்று நாமகரணம் சூட்டப்பட்டனர். எவ்வளவுதான் கச்சிதமான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் கூட, மனிதத் தவறுகளின் காரணமான பக்கவிளைவுகளில் விடுபட்டதாக எந்தப்போருமே இல்லை. போர் தொடர்பான இந்த உண்மையை ராஜபக் ஷாக்களின் கொள்கை நிராகரித்தது. அப்பட்டமான பொய்யுரைப்பு மூலமாகவும் இருட்டடிப்பு மூலமாகவும் இந்த விசித்திரமான நிராகரிப்பு பேணப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரில் மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டு வீச்சுத்தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்கா என்ன செய்ததோ அதை ராஜபக் ஷாக்களும் செய்திருப்பார்களேயானால், இலங்கையின் நிலை எவ்வாறாக மேம்பட்டதாக இன்று இருந்திருக்கும். குற்றச்சாட்டுக்களில் குறைந்தபட்சம் சிலவற்றையாவது விசாரணை செய்து அவசியமானபோது மனிதத் தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கேட்டு இழப்பீட்டையும் வழங்கியிருக்க வேண்டும்.
இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், குண்டுஸ் நகர் தாக்குதலைப் போலன்றி, இலங்கையில் உயிரிழந்த இவ்வாறு பாதிப்புக்குள்ளான குடிமக்கள் அனைவரும் எமது சொந்த பிரஜைகளேயாவர். போரின் போது இடம் பெற்றிருக்கக்கூடிய சகல குற்றச் செயல்களையும் நீதியின் முன்நிறுத்த முடியாது. ஆனால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மனங்களை வென்றெடுக்க வேண்டுமாக இருந்தால், மனக்காயங்களை குணப்படுத்த வேண்டுமாக இருந்தால் சிலகுற்றச் செயல்களை நீதியின் முன்நிறுத்தியேயாகவேண்டும்.
ராஜபக் ஷாக்களின் கொள்கை காரணமாக போர் காலங்களின் போது இழைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஒன்று கூட நீதியின் முன்நிறுத்தப்படவில்லை. நீதி மறுப்பு முற்றுமுழுதானதாக இருந்தது. இந்த நீதிமறுப்பு போர் வலயத்துக்கு வெளியே இழைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கும், ஏன் நான்காவது ஈழப்போர் தொடர்வதற்கு முன்னதாகக் கூட விஸ்தரிக்கப்பட்டது. 2006 திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் இதற்கு சிறந்த உதாரணமாகும். சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களை குண்டுகளை வைத்திருந்த புலிகள் என்று காட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி இவ்வாறான சட்டமருத்துவ அதிகாரியின் துணிச்சலான தொழில்சார் திறமையின் காரணமாக தோல்வி கண்டதால் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். ஆனால் அரசாங்கம் நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையிட்ட அதேவேளை, சாட்சியங்களையும் கொலையுண்ட மாணவர்களின் குடும்பத்தவர்களையும் இராணுவம் அச்சுறுத்தியது. ராஜபக் ஷாக்கள் ஆட்சியில் இருந்தவரை தமிழர்கள் எந்தவொரு நீதியையும் எதிர்பார்க்க முடியவில்லை என்பதை இந்த விவகாரம் சந்தேகங்களுக்கு இடமின்றி நிரூபித்தது.
அரசாங்கங்கள் அவற்றின் சொந்த மக்களுடன் நீதியாக நடந்து கொள்ளாதபோது அந்தமக்கள் நீதிக்காக வெளி அமைப்புக்களையும் சக்திகளையும் நோக்கித் திரும்புகிறார்கள். அதிர்ச்சி தரத்தக்க இத்தகைய செயல்கள் இலங்கையின் நீதித்துறையை இழிவுபடுத்தியதுடன் இலங்கைத் தமிழர்களின் கண்களின் முன்னால் அந்த நீதித்துறைகளின் நம்பகத்தன்மையும் நிர்மூலம் செய்யப்பட்டது. ராஜபக் ஷாக்கள் தாங்களாகவே உருவாக்கிய பிரச்சினையில் இருந்து அரசியல் அனுகூலத்தைப் பெறுவதற்கு இப்போது முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
போர் நாயகர்களும் நீதியும்
அதிகாரத்துக்கு வருவதற்கு ராஜபக் ஷாக்களுக்கு ஒரேயொரு பாதையே இருக்கிறது. சிங்கள - பௌத்த இனவெறியைத் தூண்டிவிடுவதே அந்தப் பாதையாகும். அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் நியமனத்தைப் பெறமுயற்சித்துக் கொண்டிருக்கின்ற டொனால்ட் டிரம்பும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான கொள்கைகளை பிரான்ஸில் முன்னெடுக்கின்ற லீபென்ஜும் செய்வதைப் போன்று சிங்கள பௌத்தர்கள் மத்தியில் அச்சவுணர்வை ஏற்படுத்தி ஏதோ பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களாக அவர்களை உணரவைப்பதே ராஜபக் ஷாக்களின் முக்கியமான தந்திரோபாயமாக இருந்தது. தொடர்ந்தும் அவ்வாறே இருக்கிறது. அதன் காரணத்தினால்தான் போரில் பாதிக்கப்பட்ட சில தமிழ் குடிமக்களுக்கு நீதி வழங்குவதற்கான முயற்சியும் எந்தவிதமான குற்றச்சாட்டும் சுமத்தப்படாமலிருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான தடுப்புக்காவல் கைதிகளை விடுதலை செய்வதாக அரசாங்கம் அளித்த உறுதிமொழியும் ஒருமித்துப் பார்க்கப்படுகின்றது.
ஒரு குறிப்பிட்ட காலமௌனத்துக்குப் பிறகு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். போர் நாயகர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கின்ற அதேவேளை அரசாங்கம் விடுதலைப் புலிகளை விடுதலை செய்கின்றது என்று அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதான நிதி சேகரிப்பாளரும் ஆயுதக் கொள்வனவாளருமான கே.பி. என்று அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதன் விவகாரத்தை கோத்தபாய ராஜ
பக் ஷ மறந்துவிட்டார் போலும்.
பல தமிழ் ஆண்களும் பெண்களும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் வருடக்கணக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, கே.பி. சிறப்புரிமையுடன் கூடிய பிரஜையாக மாறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இவருக்கு எதிராக எந்தவொரு சான்றையும் கண்டுபிடிக்க சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இயலாமல் இருப்பதாக கூறப்படுகின்ற காரணத்தால் அவர் சுதந்திரமாக வாழ்கிறார்.
‘போர் நாயகர்களை‘ பாதுகாப்பதற்கும் விடுதலைப் புலிகளைத் தண்டிப்பதற்கும் ராஜபக் ஷாக்கள் கடைப்பிடிக்கின்ற வழிமுறைகள் பெரிதும் பாரபட்சமானவையாகும். யார் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் யாருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டும் என்பதையும் தீர்மானிப்பதில் பிரதானமான அளவு கோல் ராஜபக் ஷாக்களின் நிலைப்பாடுகளிலே இருந்து வந்திருக்கின்றது. ராஜபக் ஷாக்களின் செல்லப் பிராணிகளாக மாறிய அந்த விடுதலைப்புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்பட்ட அதேவேளை ராஜபக் ஷாக்களை எதிர்த்த ‘போர் நாயகர்கள்’ கொடுமைக்குள்ளாக்கப்பட்டார்கள். இந்தக் கதிக்குள்ளாவதற்கு ஒரு ‘போர் நாயகன்’ ராஜபக் ஷாக்களின் அரசியல் எதிரணியாக இருக்க வேண்டியதில்லை. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனுடன் சண்டையிட்ட சிரேஷ்ட இராணுவ புலனாய்வு அதிகாரியொருவர் வேட்டையாடப்பட்டார். தன்னைத்தானே குற்றவாளியென்று கூறவைக்கப்பட்டு அவமானத்துக்குள்ளாக்கப்பட்டார்.
அரசுக்கும் சமுதாயத்துக்கும் இடையே அடிப்படையில் அமைப்பியல் சார்ந்த ஐக்கியமும் பொதுவான பண்பு விழுமியங்களும் (Organic Unity and Shared Values) இல்லாதமையே மூன்றாம் உலக அரசின் வலுவற்ற தன்மைக்கான தனியான மிகப்பிரகாசமான காரணமாகும் என்று அரசியல் மற்றும் வெளியுறவு விவகார நிபுணரான பேராசிரியர் கிறிஸ்தோக் கிளப்ஹாம் (Third World Politics; and Introduction) என்று நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் மீதான (தேசப்பற்று என்ற போர்வையில்) விசுவாசத்தை உயர்வாகப் போற்றிப் புகழ்தலும் சிங்கள சமூகத்துக்கும் (தங்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்) இலங்கை அரசுக்கும் இடையே அமைப்பியல் சார்ந்த ஐக்கியத்தை தோற்றுவித்து பேணுவதற்காக ராஜபக் ஷாக்களினால் பயன்படுத்தப்பட்ட ‘பொதுப் பண்புகளாகும்’, ராஜபக் ஷாக்களை இவர்களின் சிங்கள - பௌத்த தளத்துடன் இணைக்கின்ற பிரதான கிளையாக இராணுவமே விளங்கியது.
அவர்களின் இந்தத் தந்திரோபாயம் தோல்விகண்டதை கடந்த இரு தேர்தல்களிலும் மக்கள் வாக்களித்த பாங்கு வெளிக்காட்டியது. அதை மீட்டுயிர் பெறச்செய்வதற்கு ராஜபக் ஷ தற்போது மேற்கொண்டிருக்கின்ற முயற்சிகள் வெற்றி பெறுமா இல்லையா என்பது பிரதானமாக பொருளாதாரத்திலேயே தங்கியிருக்கின்றது.
மைத்திரி -– ரணில் அரசாங்கத்தினால் சாதாரண இலங்கையர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்த முடியுமாக இருந்தால், பீதியையும் வெறுப்பையும் தூண்டிவிடுவதற்கு ராஜபக் ஷ மேற்கொள்கின்ற சூழ்ச்சித்தனமான நடவடிக்கைகள் தோல்வியடையும். பெரும்பாலான சாதாரண படைவீரர்கள் போர்க் குற்றங்களைச் செய்யவில்லையென்பதால், அத்தகைய குற்றங்களைச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு முயற்சியினாலும் அவர்கள் பாதிக்கப்படப்போவதில்லை. ஆனால், பொருளாதாரம் சரியாக செயற்படவில்லையானால் சாதாரண மக்கள் மீது புதிய அரசாங்கம் சுமைகளை ஏற்றுமானால் ‘துரோகம்’ என்று ராஜபக் ஷ எழுப்புகின்ற கூக்குரல், சாதாரண சிங்கள மக்களின் உணர்வுகளுடன் ஒத்ததாக எதிரொலிக்கக் கூடிய சூழ்நிலை தோன்றலாம். இந்த சாதாரண குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்தான் சாதாரண படைவீரர்கள்.
ஒரு பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகி, சாதாரண மக்கள் தங்களது எதிர்காலம் குறித்து அச்சமடைகின்ற போதுதான் வழமையாக தீவிரவாதிகள் பயனடைகின்றார்கள். ஜேர்மனியில் நாஜிகளைப் பொறுத்தவரை எது உண்மையாக இருந்ததோ அதுவே ராஜபக் ஷாக்களையும் பொதுபலசேனா போன்ற அவர்களின் நேசசக்திகளையும் பொறுத்தவரை இலங்கையிலும் உண்மையானதாக இருக்கமுடியும்.
நம்பகத்தன்மை இடைவெளி
2013 ஆண்டு ஒருநாள் விடிகாலையில் முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்திக்கப் போனார். ராஜபக் ஷ அப்போது உடற்பயிற்சி செய்து கொண்டு தலைகீழாக நின்றார். பத்திரிகையாளர் பேச்சுக் கொடுத்தபோது அதற்கு ராஜபக் ஷ ‘நாங்கள் பல நல்ல காரியங்களைச் செய்திருக்கிறோம். எதிர்க்கட்சியினர் அவற்றில் எதையுமே பார்க்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். அதனால் தலைகீழாக நின்று இலங்கையை எவ்வாறு பார்க்க முடியுமென்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று பதிலளித்தாராம்.
ராஜபக் ஷவின் பார்வை தலைகீழானதாக இருந்த காரணத்தால் 2014ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆபத்துக்கான அறிகுறிகளை அவரால் பார்க்க முடியாமல் போய் விட்டது போலும், மைத்திரி - – ரணில் அரசாங்கமும் அத்தகைய தலைகீழான பார்வையினால் பாதிக்கப்படுகின்ற நிலை வந்திருக்கிறதோ? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே சுற்றாடல் அமைச்சராக இருக்கின்றார். அந்த அதிகாரம் தொடர்பில் அவர் கூறுகின்ற பல கருத்துக்களில் தவறு கண்டுபிடிக்க முடியாது. அவர் கூறுகின்றவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா இல்லையா என்பதுதான் பிரச்சினை. மேல் மாகாணத்தில் பொது மக்களில் பெரும்பான்மையானவர்களின் குடிநீருக்கான ஆதாரமாக இருக்கும் களனி ஆறு மாசுபடுத்தப்படுகின்ற பிரச்சினை இதற்கு நல்ல உதாரணமாகும். ஆற்று நீரை அசுத்தப்படுத்துகின்றவர்கள் பலருக்கு எதிராக அண்மைய வாரங்களாக அதிகாரிகள் சட்டநடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். சிறியளவில் மாசுபடுத்தலை செய்கின்றவர்களுக்கும் எதிராக பெரும்பாலும் குடியிருப்பாளர்களுக்கும் எதிராக மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானதாகும்.கொக்காகோலா நிறுவம் போன்று பெரியளவில் மாசுபடுத்தலை செய்கின்றவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக தொடர்ந்தும் இருந்துவருகிறார்கள். இந்தக் நிறுவனம் இவ்வருடம் இரு தடவைகள் அதன் கழிவுகளை களனி ஆற்று நீரில் கலக்க விட்டிருக்கிறது.
சீனாவின் வளர்ச்சிப் பாணி அந்நாட்டிலேயே பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது என்பது இப்போது வெளிப்படையானது. வளிமண்டலம் மாசடைவதன் விளைவாக தொழிற்சாலைகளை மூடுகின்ற கதைக்கு பெய்ஜிங் நிலவரம் மோசமாகியிருக்கிறது.
வெறுக்கத்தக்க துர்நாற்றம் நகரெங்கும் பரவி மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக சுவாசப்பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றது. இதை பெய்ஜிங் ரைம்ஸ் பத்திரிகை மிகவும் பொருத்தமான முறையில் ‘Airpocalypse’ என்று வர்ணித்திருக்கிறது.
கொழும்பு துறைமுக நகரம் போன்ற சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் நோக்கவேண்டியது அவசியமாகும். ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சியாக இருந்த போது கொழும்புத் துறைமுக நகரத்திட்டத்தை அது எதிர்த்ததற்கு முன் வைத்தவாதங்களில் ஒன்று சுற்றாடல் பாதிப்பாகும். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அத்திட்டம் இரத்துச் செய்யப்படுமென்று ரணில்விக்கிரம சிங்க உறுதியளித்திருந்தார். இத்திட்டத்தை கண்டித்தவர்கள் இப்போது மௌனம் சாதிக்கிறார்கள். இவ்வருடம் அத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. முன்னர் அதை எதிர்த்தவர்கள் ஏன் இப்போது மௌனம் சாதிக்கிறார்கள்? அவர்கள் தவறானவர்கள் என்றும் ராஜபக் ஷாக்கள் சரியானவர்கள் என்றும் இதை அர்த்தப்படுத்தலாமா? அல்லது இவர்கள் தேர்தல் பிரசாரங்களுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு விலைபோய் விட்டார்களா? அமெரிக்காவின் நெருக்குதல் காரணமாகத்தான் கொக்கா கோலா நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? மைத்திரிபாலவை மஹிந்த சிந்தனை சுவீகரித்து விட்டதா?
சிறிய மீன்களைப் பிடிக்கின்ற அதேவேளை பெரிய சுறாமீன்கள் தப்பிச் செல்ல விடப்படுகின்ற நடைமுறை சுற்றாடலில் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. அது ஊழல் மோசடி தொடக்கம் பல்வேறு விவகாரங்களுக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. புதிய அரசாங்கத்துக்கும் அதற்கு வாக்களித்த சமுதாயப்பிரிவினருக்கும் இடையேயான பொதுவான பண்பு விழுமியமாக நல்லாட்சிக்கான அடிப்படைக் கோட்பாடே அமைந்திருந்தது. ராஜபக் ஷ ஆட்சிக்கும் புதிய மைத்திரி – ரணில் அரசாங்கத்துக்கும் இடையேயான பிரிகோடாக நல்லாட்சியே காட்சிப்படுத்தப்படுவதால், அதன் அடிப்படைக் கோட்பாடுகள் ஊழல், குடும்ப அரசியல் அதிகாரம், ஒடுக்குமுறை ஜனநாயகவிரோத, மக்கள் விரோத மற்றும் இன, மதவெறி கொள்கைகளை தூக்கியெறிவதாகவே இருக்க வேண்டும். ராஜபக் ஷவின் ஆட்சி முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஆட்சிமுறையே முன்னெடுக்கப்பட வேண்டும்.
எந்தவொரு அரசாங்கத்தினதும் உயிர்க்குருதி நம்பிக்கைத்தன்மையோடும் நம்பகத் தன்மையில்லாமல் எந்தவொரு கட்சியும் அதிகாரத்தில் தொடர்ந்து இருக்கவோ அல்லது அதிகாரத்துக்கு வரவோ முடியாது. தங்களது அதிகாரத்துடனான நம்பகத்தன்மையை இழந்ததன் காரணத்தினாலேயே ராஜபக் ஷாக் கள் அதிகாரத்தை இழந்தார்கள். சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் பெருமளவு இடைவெளி இருக்குமானால் என்னதான் திருகுதாளத்தைச் செய்தாலும் எவ்வளவுதான் ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்தி ருந்தாலும் நம்பகத்தன்மை அரித்துச் செல்லப்படுவதை தடுக்கவே முடியாது. நம்பகத்தன்மையில்லையென்றால் முன்னென் றுமில்லாத அளவுக்கு அதிகாரத்தைத் துஷ்பிர
யோகம் செய்தாலும் கூட வரையறை யின்றி பணத்தைச் செலவிட்டாலும் கூட தேர்தல்களில் வெற்றிபெறமுடியாது.
நல்லாட்சியின் நெறிமுறையை புதிய அரசாங்கம் மீறுகின்ற ஒவ்வொரு தடவை யும், ராஜபக் ஷாக்கள் கடைப்பிடித்த அணுகு முறைகளை புதிய அரசாங்கம் பின்பற்றுகின்ற ஒவ்வொரு தடவையும் அதன் நம்பகத்தன்மை அரித்துச் செல்லப்படுகிறது. மத்திய வங்கி யின் பிணை முறி விவகாரத்தில் இதுவே நடந்தது. குடும்ப அரசியல் செல்வாக்கு மீண்
டும் தலைகாட்டுக்கின்ற போதும் இது நேருகிறது. கறைபடிந்த பேர்வழிகள் ராஜபக்
ஷாக்களைக் கைவிட்டு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவையோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையோ அரவணைத்து அரசாங்கத்தில் பதவிகளைப் பெறும் போதும் இது நேருகிறது.
நீதியமைச்சராகவும் புத்தசாசன அமைச் சராகவும் இருப்பவர் விசித்திரமான முறையில் தவறாக நடந்துவிட்டு தொடர்ந்தும் பதவியில் நீடிக்கும் போதும் இது நேருகிறது. வில்பத்து சரணாலயம், சிங்கராஜா மலைக் காடுகளும் நாசமாக்கப்படுவதை கண்டும் காணாமல் இருக்கும் போது இது நேருகிறது.
ராஜபக் ஷாக்களின் அழுக்கை துப்புரவு செய்வதென்பது சுலபமான பணியல்ல. ஆனால் அந்த அழுக்கிற்கு மேலும் அழுக்கைச் சேர்ப்பது பணியை கடினமாக்கவே செய்யும்.
திஸ்ஸரணி குணசேகர
நன்றி- வீரகேசரி
|
No comments:
Post a Comment