08 December 2015

தமிழ் மக்களின் காணிகள் அபகரிப்பு

முல்லைத்தீவு, மாவட்டத்தின் மணலாறு (வெலிஓயா) பகுதியிலுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள், மகாவலி எல் வலயத்தின் மூலம் அபகரிக்கப்பட்டு, சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட மீள்குடியேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'1983ஆம் ஆண்டுக்கு முன்னர், மணலாறு, எரிந்தகாடு, ஆண்டான் குளம் உள்ளிட்ட 20 குளங்களின் கீழான பிரதேசத்தில் சுமார் 6,000 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழர்கள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து இடம்பெற்ற யுத்தம் காரணமாக அங்கிருந்து தமிழர்கள் இடம்பெயர்ந்ததையடுத்து, தமிழர்களின் காணிகளுக்கு மகாவலி வலயத்தின் கீழ் உறுதிப்பத்திரங்கள் பெறப்பட்டு, சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். இதனால் அங்கு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட பல விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்' என்றார்.

இந்த மீளாய்வுக் கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், 6 பிரதேச செயலகங்களின் செயலர்கள், திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment