14 May 2018

தமிழ்த்தேசியம் பேசும் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஈழத்தமிழ்த்தேசிய இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த மல்லிகை ஜீவாவை உரியமுறையில் கௌரவிக்க தமிழ்ச்சமூகம் முன்வரல் வேண்டும்

மல்லிகை ஜீவா என பின்னாளில்  அறியப்பட்டிருந்த டொமினிக்ஜீவா,  1966 இல் முதலாவது மல்லிகை இதழை வெளியிட்டார்.
 "ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவார்" 
என்னும் பாரதியின்  கவிதை வரிகளையே தாரக மந்திரமாக ஏற்று நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வெளியான மல்லிகை மாத இதழ்,  தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த ஜோசப் சலூன் என்ற சிகையலங்கார நிலையத்திலிருந்து வெளியாகி பின்னர், மானிப்பாய் வீதிக்கும் கே.கே.எஸ். வீதிக்கும் இடையில் ( ராஜா தியேட்டருக்கு பின்புறமாகச்சென்ற)  சிறிய ஒழுங்கையிலிருந்த சிறு கட்டிடத்தில் அமைந்த  மல்லிகைக்கான பிரத்தியேக அலுவலகத்திலிருந்து வெளியானது.
மல்லிகை முதலாவது இதழ் 1966 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியானபோது  அதன் விலை 30 சதம்தான் என்பதை அறியும்போது ஆச்சரியம்தான்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த மல்லிகையும் எமது மக்களைப்போன்று வடக்கில் உருவான அசாதாரண சூழ்நிலைகளையடுத்து கொழும்பில் ஶ்ரீ கதிரேசன் வீதிக்கு இடம்பெயர்ந்து,  இறுதியில் அங்கிருந்தே சில வருடங்களுக்கு முன்னர்  தனது ஆயுளையும் நிறைவுசெய்துகொண்டது.
ஒரு  சிகையலங்காரத்தொழிலாளியாக வாழ்ந்து, பொதுவுடைமைக்கருத்துக்களினால்  ஈர்க்கப்பட்டு, அரசியல்வாதியாகிவிடாமல், இலக்கியவாதியாக தன்னை வளர்த்துக்கொண்டவர்  ஜீவா.சிறுகதை எழுதிக்கொண்டிருந்தவர் எவ்வாறு ஒரு இலக்கிய இதழை துணிந்து நடத்த முன்வந்தார் என்ற கதையை   தனது சுயசரிதையிலும் விபரித்திருக்கிறார்.  இந்தச்சரிதை  ஆங்கிலத்திலும் வெளியாகியிருக்கிறது.
முழுநேர  எழுத்தாளராக ஈழத்து இலக்கிய உலகில் அறிமுகமான ஜீவா, இதழாசிரியராகவே தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர். போர் நெருக்கடி மிக்க, மின்சாரம் தடைப்பட்டிருந்த காலப்பகுதியிலும் அச்சுத்தாளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிய சூழலிலும் யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகை வெளியானது. அப்பியாசக்கொப்பித்தாளிலும் மல்லிகை அச்சாகியதை மறந்துவிடமுடியாது.
இலங்கை கலாசார அமைச்சின் சாகித்திய மண்டலம் உருவானவேளையில்  தமிழில் சிறுகதை இலக்கியத்திற்கான விருதை முதல் முதலில் பெற்றவரும் டொமினிக் ஜீவா என்பதும் முக்கியமான தகவல்.   அவர் குறிப்பிட்ட விருதைப்பெற்றுக்கொண்டு யாழ். ரயில் நிலையத்தில் வந்திறங்கியபொழுது,  அக்காலப்பகுதியில்   யாழ். மேயராக  இருந்த துரைராஜாவின்  தலைமையில் யாழ்நகர மக்களின்  சார்பில் மகத்தான வரவேற்பும்  அளிக்கப்பட்டது. 
அவ்வாறு யாழ். மக்களின் அபிமானத்திற்கு ஆளாகியிருந்த டொமினிக் ஜீவா,  போர் நெருக்கடியாலும்  விமர்சிக்கப்படவேண்டிய  சில  அரசியல்  அழுத்தங்களினாலும் கொழும்புக்கு இடம்பெயர்ந்து மல்லிகையை வெளியிட்டார். 
மல்லிகை பற்றி     இலங்கை பாராளுமன்றத்திலும் விதந்து பேசப்பட்டிருக்கும்  தகவலை   பாராளுமன்ற       குறிப்பேட்டில் ( ஹன்சார்ட்) பார்க்க முடிகிறது.
இலங்கை அரசமட்டத்தில் சாகித்திய விருது மற்றும் தேசத்தின் கண், சாகித்திய ரத்னா முதலான  விருதுகளையும் பெற்றிருக்கும் மல்லிகை ஜீவா, கனடா இலக்கியத்தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றவர்.   முழுநேர எழுத்தாளராக, இதழாசிரியராக வாழ்ந்து, தற்பொழுது  கொழும்பின் புறநகரில் ஓய்விலிருந்தவாறு,  தமது எஞ்சிய காலத்தில், முந்திய காலம் பற்றி நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறார்.  மல்லிகை ஜீவா அவர்களை பாரதியின் புதிய ஆத்திசூடியின் வெளிச்சத்திலும் அடையாளம் காணமுடியும்.
ஏறு போல் நட  - ஓய்தலொழி - குன்றென நிமிர்ந்து நில் - சிதையா நெஞ்சுகொள் - சுமையினுக்கு இளைத்திடேல் - தூற்றுதல் ஒழி - தோல்வியிற் கலங்கேல் - ரௌத்திரம் பழகு - வெடிப்புறப்பேசு - முதலான  பாரதியின் குணாதிசயங்கள்  ஜீவாவிடமும் நீடித்திருந்தது  என்பது பரகசியம்.
இலக்கிய இதழை யாழ். மண்ணில் மலரவைக்கவேண்டும் என்ற எண்ணக்கரு அவரது மனதில் விதைக்கப்பட்டவேளையில் என்ன பெயர் சூட்டலாம்...? என்று தனது இலக்கிய நண்பர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.
இதயம் - கமலம் - மலர் - செந்தாரகை - கலைஞன் முதலான பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு,  இறுதியில் ஜீவாவே மல்லிகை என்ற பெயரை தேர்வுசெய்துள்ளார். மல்லிகை வெண்மையானது. வாசம் நிரம்பியது. ஏழை முதல் செல்வந்தன் வரையில் நல்ல நிகழ்வுகளுக்கும் துயர நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப்படுவது, அதனால் எளிமையானது முதலான அபிப்பிராயங்களே அவர் மனதில் எழுந்திருக்கின்றன.
மல்லிகை வெளிவரத்தொடங்குவதற்கு முன்பே ஜீவாவும் வெண்ணிற ஆடைகளையே அணியத்தொடங்கிவிட்டார். அவரை வெள்ளை நேஷனல் வெள்ளை வேட்டியுடன்தான் எங்கும் காணலாம். அவர்  சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள், கூட்டங்களில் மாத்திரம் தோளிலே சிறிய சிவப்பு துண்டை அணிந்திருப்பார்.
இலங்கையிலும் தமிழகத்திலும் பல சிற்றிதழ்கள் சிலரது ஆர்வத்தின் நிமித்தம் கூட்டு முயற்சியாகத்தான் வெளிவந்துள்ளன. இடையில் அவை குழுமோதல்களினால் அற்பாயுளிலும் மறைந்தன. அத்தகைய இதழ்களுக்கென  நீண்ட பெயர்ப்பட்டியல் உண்டு.
பொதுவுடைமையில் நம்பிக்கை வைத்திருந்த மல்லிகை ஜீவா, தமது மல்லிகை விடயத்தில், கூட்டுச்சேர்தல் -  கூட்டுறவு அடிப்படை - குழுவாக செயற்படல் முதலான வழிமுறைகளை பின்பற்றவில்லை.சுமார்  47  வருடகாலமாக  வெளிவந்த  மல்லிகை  கடந்த  சில வருடங்களாக வெளியாகவில்லை.  அதற்கு பலரும் பல காரணங்களைச்சொல்கின்றனர். 
முன்னர்   யாழ். ரயில்  நிலையத்திற்கு  அருகில்  தமது  மனைவி மக்களுடன்    வாழ்ந்த  ஜீவா   தற்பொழுது  கொழும்பில்  மட்டக்குளிய - காக்கை  தீவில்  மகன்  திலீபன்  குடும்பத்துடன்  வசிக்கிறார்.  முன்னர் அவரைச்சுற்றி   மல்லிகை   இதழ்களும்  மல்லிகை   வெளியீடுகளும் நூல்   மதிப்புரைக்கு  வந்த    எழுத்தாளர்களின்  நூல்களும்தான் இருக்கும்.   ஆனால்,  இப்பொழுது  அவரைச்சுற்றி பேரக்குழந்தைகள்தான்  இருக்கிறார்கள்.
சாதாரண குடும்பத்தில்   பிறந்து  தனக்குத்தெரிந்த  தொழிலையே   செய்து வாழ்ந்தவரை -  தோழர்  கார்த்திகேசன்  மாஸ்டர்  இடதுசாரி அரசியலுக்குள்   அழைத்து  வந்தார்.   ராஜகோபாலன்  என்ற  இலக்கிய   ஆர்வலர்  இலக்கியத்தின்பால்   திருப்பினார்.
 கணித வாத்தியாரின்   கணக்கை   திருத்தியதனால் "உனக்கெதற்குப்படிப்பு....போய்   சிரையேன்டா..." -  என்று அவமானப்படுத்தியதும்   பள்ளிப்படிப்புக்கு  முழுக்குப்போட்டார். மல்லிகை   நடத்தியபொழுது  இடதுசாரிச் சிந்தனையாளர்களினதும்  முற்போக்கு  இலக்கியவாதிகளினதும்  சகவாசத்தினால்  தன்னையும் சர்வதேசியவாதியாக்கிக்கொள்ள  முயன்று  பிற  மொழி இலக்கியங்களுக்கும்   மல்லிகையில்  களம்  வழங்கினார்.
பல  வருடங்கள்  மல்லிகை   வெளியானது.  எத்தனையோ அரசியல், சமூக, பொருளாதர நெருக்கடிகளுக்கு மத்தியில்  தொடர்ந்தும்   இலங்கையெங்கும்  அலைந்து  திரிந்து  மல்லிகையை விநியோகித்து   ஈழத்து  தமிழ்த்தேசிய  இலக்கியத்தை  வளர்த்தார். வளம்படுத்தினார்.
"பிறர்    ஈன  நிலைகண்டு  துள்ளுவர்..." என்ற பாரதியின் மந்திரத்தை மல்லிகையில்   உச்சாடனம்  செய்த  ஜீவா   இன்று  எப்படி இருக்கிறார்....?  
இலக்கிய  உலகில்  கனவுகளை   விதைத்தவர்,  இன்று  ஒரு  புதிய கனவுலகில்   வாழ்கிறார்.   47  ஆண்டுகளை   நெருங்கிய  மல்லிகை   50  ஆண்டுகளை நிறைவு  செய்துவிடவேண்டும்  என்றுதான்  மல்லிகையை   நேசித்த  பலரும் எழுதினார்கள்.    பேசினார்கள்.   தமது  முகநூல்களில்  பதிவுசெய்தார்கள். 

.நூற்றுக்கணக்கான   தமிழ்,  முஸ்லிம்,  சிங்கள  படைப்பாளிகள் - கல்விமான்கள் , அறிஞர்களின்  வாழ்வையும்  பணிகளையும் சித்திரிக்கும்   கட்டுரைகளையும்  அவர்தம்  படங்களையும்  பதிவுசெய்த   மல்லிகை   இன்று  நூலகம்  இணையத்தில்  மாத்திரமே பதிவாகியிருக்கிறது.   பலரதும்  வீடுகளில்  பல்கலைக்கழகங்களில் நூலகங்களில்   முன்னைய  பிரதிகள் ,   ஆண்டு மலர்கள்  இருக்கின்றன.ஜீவா   இலங்கையர்களை   மட்டும்  மல்லிகையில்  கனம் பண்ணவில்லை.   இந்திய  சோவியத்  உட்பட  பல  சர்வதேச படைப்பாளிகளுக்கும்    உரிய  மரியாதையை   வழங்கினார்.
ஒரு   சமயம் The Island   பத்திரிகை   வெளியிடும்  நிறுவனம் வெளியிட்ட   திவயின  சிங்கள  ஏடு  ஜீவாவை   பேட்டி கண்டு  எழுத விரும்பி   நாள்   குறித்தது.   அவருக்கு  சிங்களம்  தெரியாது.   என்னை உடன்  அழைத்துச்சென்றார்.   அந்த  நேர்காணல்  சந்திப்பை  கொழும்பு கலாபவனத்தில்  (Art Gallery ) ஒழுங்கு செய்து  தந்தவர்  கலாசார திணைக்களத்தில்  செயலாளராக  பணியாற்றிய  தமிழ்  அபிமானி கே.ஜி.அமரதாஸ.
அவ்வேளையில்  குட்டிமணி   தங்கத்துரை  முதலானோர்   சிறையில்  இருந்தனர். அமிர்தலிங்கம்   எதிர்க்கட்சித்தலைவராக  பிரபலமாகியிருந்தார். சிங்கள   வாசகர்களுக்கு  தமிழ்  இலக்கியம்  போதியளவு  அறிமுகம் இல்லாதிருந்த   காலம்.   ஆனால், மார்ட்டின்  விக்கிரமசிங்கா,   டி.பி. இளங்கரத்னா,   குணதாச  அமரசேகர,  கருணாசேன  ஜயலத்,  ஜீ. பி.சேனாநாயக்கா,   குணசேன  வித்தான,   ஆரியரத்தின  வித்தான, கே.ஜயத்திலக்க,   மடவள  எஸ்.  ரத்நாயக்கா  போன்ற இலக்கியவாதிகள்   தமிழ்  வாசகர்களுக்கு  அறிமுகமாகியிருந்தனர்.
ஜீவா,  அந்த  நேர்காணலில்  மேலே   குறிப்பிட்ட  சிங்கள எழுத்தாளர்களின்   பெயர்களைச்சொல்லி,  இவர்களையெல்லாம் எமது   தமிழ்   இலக்கிய  வாசகர்கள்  தெரிந்து  வைத்திருக்கிறார்கள். ஆனால் , சிங்கள  வாசகர்களுக்கு  தெரிந்த  பெயர்கள் அமிர்தலிங்கமும்   குட்டிமணியும்தான்.   எனச்சொன்னதும்,  அந்த சிங்கள  நிருபர்  அசந்துவிட்டார்.  பின்னர்  தன்னை சுதாகரித்துக்கொண்டு,    இந்தக்கருத்தையே   இந்த  நேர்காணலுக்கு தலைப்பாக  எழுதுவேன்   என்றார்.
அந்த  நிருபர்  சொன்னவாறே  அந்தத்தலைப்பு   ஜீவாவின் தர்மாவேசக்குரலாக   அந்தச்சிங்கள  ஏட்டில்  ஒலித்தது.
2001  இல்    நாடாளுமன்றத்தில்    அஸ்வர்  எம்.பி.,  மல்லிகை   பற்றி உரையாற்றியபொழுது    ஜீவாவையும்  அவரது  தேசிய  உடையையும் விதந்து   போற்றியிருந்தார்.   இந்தத்தகவல் அரசின் நாடாளுமன்றப் பதிவேட்டில் (Hansard  - - 04-02-2001)   இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் முதல் தடவையாக 2011 ஜனவரியில் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கான கனவை விதைத்தவரும் அவர்தான்!
பிரதேச   மொழி வழக்குகள்   ஆய்வுகளில்  பேசுபொருளாவதற்கு தூண்டுகோலாக   இருந்தவர்.   ஐரோப்பிய  நாடுகளில்  நடக்கும் இலக்கியச்சந்திப்பிற்காக   அழைக்கப்பட்டு  பரிஸிலும்  லண்டனிலும் பாரட்டப்பட்டவர்.   சோவியத்தின்  அழைப்பில்  சென்று  திரும்பியவர். தமிழக   முற்போக்கு  எழுத்தாளர்  சங்கம்,  கலை,  இலக்கிய பெருமன்றம் ,   எட்டயபுரம்  பாரதி  மன்றம்,  கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், (C.L.S)  முதலானவற்றின்  அழைப்பில்  சென்றவர்.
மணிவிழா,  பவள  விழா  முதலானவற்றை   கடந்து  வந்திருக்கும் மல்லிகை ஜீவாவுக்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் 91 வயது பிறக்கிறது.  கொழும்பின் புறநகரத்தில்  மட்டக்குளியில் , காக்கைதீவில்  தனது மகன் திலீபன் குடும்பத்தினருடன் இளைப்பாறுகிறார்.
ஈழத்தமிழ்த்தேசிய இலக்கியத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு, ஓய்வு ஒழிச்சலின்றி இலங்கையின் வீதியெங்கும் அலைந்து திரிந்து தமிழ் இலக்கிய இயக்கம் நடத்தியிருக்கும் மல்லிகை ஜீவா தற்போது உடல் நலக்குறைவோடு வீட்டில் ஓய்வுஎடுக்கின்றார்.
தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருக்கும் எங்கள் தமிழ்த்தலைவர்கள் அவரைச்சென்று பார்க்கமாட்டார்களா?  என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே  இந்தப்பதிவு!
அண்மையில் கொழும்பில் மறைந்திருக்கும்,  இலங்கை சிங்களப்படங்களை சர்வதேசமும் விழியுயர்த்திப் பார்க்கவைத்த திரைப்பட மேதை லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மறைவதற்கு முன்னரே தேசிய மட்டத்திலும் அரசமட்டத்திலும் சிங்களத் தலைவர்கள், பிரதமர், ஜனாதிபதிகளினால் உரிய முறையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
லெஸ்டர் இலங்கை சிங்கள மக்களின் ஆத்மாவையும் அவர்களின் பண்பாடு கலாசார விழுமியங்களையும் தான் படித்த சிங்கள படைப்பிலக்கியங்களிலிருந்து தமது திரைப்படங்கள் ஊடாக வெளிக்கொணர்ந்தவர். அந்தவகையில் அவர் வாழும்போதும் கௌரவிக்கப்பட்டு, மறைந்த பின்னரும் அவருக்குரிய அரச மரியாதையும் வழங்கப்பட்டு, துக்க தினமும் அனுட்டிக்கப்பட்டது.
இந்தப்பின்னணிகளுடன் ஈழத்தமிழ்தேசிய இலக்கியத்திற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்திருக்கும் டொமினிக் ஜீவா என்ற மல்லிகை ஜீவா அவர்களுக்கு இலங்கையில் தமிழ்த்தேசியம் பேசும் தலைவர்கள் என்ன செய்தார்கள்? என்பதே இங்கு முன்வைக்கப்படும் கேள்வியாகும்.
சமூகத்திற்காகவும் அச்சமூகத்தின் கலை, இலக்கிய, பண்பாட்டுக்கோலங்களின் ஆத்மாவை வெளிக்கொணர்வதற்காகவும் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பாடுபட்டுள்ள ஒருவருக்கு, எமது தமிழ் அரசியல் அரங்கில் கோலோச்சும் தமிழ்த்தலைவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?
இந்த இடித்துரைப்பு,  அவர்களை சினங்கொள்ளவைப்பதற்காக அல்ல, சிந்திக்கவைப்பதற்காகவே!
தமிழ் சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மறைந்தபின்னர், ஊடகங்களில் ஏட்டிக்குப்போட்டியாக அனுதாப அஞ்சலி உரை வெளியிட்டு,  தமது இருப்பை காண்பிப்பதற்கு முன்னர், அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்கள் கண்முன்னாலேயே உரிய கௌரவத்தை வழங்குவதற்கு எமது தமிழ்த்தேசியத்தலைவர்கள் முன்வரல் வேண்டும்.
எங்கள் மல்லிகை ஜீவாவை கொண்டாடுவோம்.
நன்றி- தேனீ இணையம்

No comments:

Post a Comment