நரகத்து வாழ்வு தமிழ் மக்களுக்கு விதிக்கப்பட்டதல்ல. இனியொரு விதி செய்வோம்.!புதுமாத்தளன் பகுதியில் வெறும் 20 ச.கி.மீ பரப்பளவினுள் முடக்கப்பட்ட மக்கள் புலிகளின் மண் அணை அரண் படையினரால் உடைக்கப்பட்டதன் பின்பு ஆயிரக்கணக்கில் வெளியேற தொடங்கியிருக்கிறார்கள். உடைக்கப்பட்ட பகுதியினூடாக மாத்திரமல்ல கடற்கரை ஊடாகவும் படகுகள் மூலம் பல நூற்றுக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர்..
கடந்த இரண்டு மூன்று நாட்களில் மாத்திரம் லட்சம் பேர்வரை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளார்கள். யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் அவர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் யுத்த சூனியப் பிரதேசத்தில் மரணத்தின் கோர முகத்தைப் அனுபவித்துக் கொண்டு வாழ்கிறார்கள்.
இத்தனை சுமைகளுடன் அவர்கள் உயிர் வாழ்தலுக்காக ஓடிய ஓட்டம் ஆளில்லா வானூர்தியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் உறுதி செய்கின்றன. மனிதர்களில் ஒரு பகுதியினர் இவ்வாறு உயிர் வாழ்தலுக்காக ஓடிக்கொண்டிருக்கும் போது நாம் நாகரீக உலகை சேர்ந்தவர்களென கூறிக்கொண்டு வாழ்வது அவமானகரமானதாகும்.
உயிர்ப் பையை பிடித்துக் கொள்வதற்கான இந்த ஓட்டத்தில் ஆங்காங்கே துப்பாக்கிச் சூட்டுக்கும் செல் வீச்சுக்கும் ஆளாகி உயிரை பாதுகாக்கும் ஆசை நிராசையாகி போனவர்களை நினைத்துப் பாருங்கள். வெட்டவெளியில் மானிட பூச்சிகளாய் வீழ்ந்து போனவர்களை நினைத்துப் பாருங்கள்.
வாழ்வதற்கான ஓட்டத்தில் தோற்றுப் போனவர்கள், அவர்களின் பிரிவால் துயருரும் உற்ற சுற்றத்தை நினைத்துப் பாருங்கள்.
பிறந்தவுடனேயே ஊனமுற்றுப்போன குழந்தையின் கதறலை நினைத்துப் பாருங்கள்.
பீரங்கிகள், விமானக்குண்டுகள், தற்கொலை குண்டுகள் நடுவே காப்பரணுக்குள் வாழ்ந்த, வாழ்கின்ற சந்ததியை நினைத்துப் பாருங்கள்.
ஏன் இவற்றை இங்கு குறிப்பிடுகிறோம். ஏன் இவற்றை இங்கு ஆழமாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்
60 ஆண்டுகளுக்கு மேலாக தாம் இந்த நாட்டில் சமத்துவமாக வாழ்வதற்கான கோரிக்கையை தமிழர்கள் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். இறுதி 30 ஆண்டுகளில் தமது உரிமைகளுக்காக அவர்கள் செலுத்திய விலை இங்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
வாழ்க்கை ஈவிரக்கமற்றதாக மாறியது. இறுதியில் தற்போதைய குரூர நிலையை எய்தியுள்ளது.
தற்போது அதன் கோர முகத்தை நாம் கண்ணால் கண்டுகொண்டிருக்கிறோம். வைத்தியசாலை விறாந்தைகளில் காயமடைந்த குழந்தைகளின் கதறலை கேட்கிறோம். இனம்புரியாத மனித அவல ஓலங்கள் எம் காதுகளை நிறைக்கின்றன.
எமது கையறு நிலை எம்மீதே எமக்கு கோபத்தை வரவழைக்கிறது.
தமிழர்கள் தமது பிரதேசங்களில் தங்களைத் தாங்களே நிர்வகிப்பதற்கான கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்படுவது தற்போதைய மனிதாபிமானப் பணிகளுடன் சமாந்தரமாக முன்னெடுக்கப்படுவது அவசியமானதாகும்.
தி. ஸ்ரீதரன்
No comments:
Post a Comment