முல்லைத்தீவு மாவட்டத்தில் 554 கி.மீ. வீதி அபிவிருத்தி
முல்லைத்தீவு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினாலும், வீதி அபிவிருத்தி திணைக்களத்தினாலும் பராமரிக்கப்படும் வீதிகள் அனைத்தும் 16866 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இந்த அபிவிருத்தி நடவடிக்கையில் 180 நாள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 156 மில்லியன் ரூபாவும், மூன்று வருட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 16710 மில்லியன் ரூபாவும் செலவிடப்படவுள்ளன. மொத்தம் 554 கிலோ மீட்டர் வீதி இரண்டு கட்டங்களிலும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. வடக்கின் வசந்தம் செயற் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தலைமையில்; இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பிரதான தீர்மானங்களாவன 2006ம் ஆண்டளவில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வீடுகளில் ஒரு வீதத்திற்கு மாத்திரம் இருந்த மின்சார வசதியை 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 15 வீதமாக அதிகரிப்பதற்கும், மூன்று வருட வேலைத் திட்டத்தின் கீழ் எல்லா வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. 2200 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவிருக்கும் இத்திட்டத்தில் மீள்குடியேற்றம் நடைபெறவுள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment