தேர்தல்களில் வெற்றியீட்டியதாக கருதப்பட முடியாது. வவுனியா நகர சபைத் தேர்தலில் பாரிய தோல்வி –- டக்ளஸ் தேவானந்தா
இந்தத் தேர்தல்களில் தமது கட்சி வெற்றியீட்டியதாக கருதப்பட முடியாது என சமூக சேவைகள் அமைச்சரும்,ஈ.பி.பி.டியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாநகரசபைக்கான தேர்தலில் தமது கட்சியைச் சேர்ந்த 9 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை ஓர் வெற்றியாக கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாநகரசபைக்காக ஈ.பி.டி.பி. 20 வேட்பாளர்களை களமிறக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்தல்களில் 17 ஆசனங்களை வென்றிருக்க முடியும் எனவும், சில காரணிகளினால் தம்மால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே,இந்தத் தேர்தலில் வெற்றி கிட்டியதாக கருதப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தேர்தல் தோல்விக்கான காரணத்தை அவர் குறிப்பிட மறுத்துவிட்டார்.
அதேவேளை யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தல்களில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தாம் மதிப்பளிப்பதாகவும் அவர்கள் மேற்கொண்ட இந்த தீர்மானம் குறித்து எதிர்காலத்தில் அவர்கள் நீண்டகால அடிப்படையில் சிந்திக்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் வோனந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் அரசாங்கம் வெற்றிப் பெற்ற போதிலும் இதனை விட அதிக வெற்றியை பெறக் கூடிய சந்தர்ப்பம் இருந்தது. வவுனியா நகர சபைத் தேர்தலில் அடைந்த தோல்வியை பாரிய தோல்வி என தாம் நம்புவதாகவும் டக்ளஸ் தேவானந்த கூறியுள்ளார். எது எப்படி இருந்த போதிலும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டிய அரசியல் தீர்வை துரிதமாக பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவே இந்த தேர்தல் முடிவுகளை கருத முடியும். அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் நீண்டகாலத்திற்கு பின்னர், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மக்கள் எவ்வித அழுத்தங்களுமின்றி தமது தீர்மானத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கியமைக்கு குறித்து ஜனாதிபதிக்கு நன்றிக் கூற வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்தசங்கரி கருத்து
இது குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கூறுகையில்; இது பெரிய மோசடியான தேர்தலாக நடந்தேறியிருக்கிறது. பல கோடிக்கணக்கான ரூபாவைச் செலவு செய்து குடாநாட்டிற்கு வருகைதந்த அமைச்சர்கள் மக்களை ஏமாற்றினர். இதற்காக இங்கு வந்து சென்ற அமைச்சர்களும் அரசாங்கங்களும் உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும். 18 வீத வாக்களிப்பே நடைபெற்றிருக்கின்றது. இதற்காக வரும் ஒரு உள்ளூராட்சித் தேர்தலுக்காக அரசு பல கோடிக்கணக்கான ரூபாவைச் செலவு செய்திருக்கின்றது. மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே தேர்தல். களியாட்டங்களுக்காக அல்ல. மிக விரைவில் யாழ்.குடாநாட்டு மக்களை இரத்தக் கண்ணீர் விட வைக்கும் முகமாகவே இந்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. நான் பதவிக்காகத் தேர்தல் கேட்கவில்லை. நானும் கேட்காமல் விட்டிருந்தால் நிலைமை மிகவும் மோசமாகப் போயிருக்கும். நான் தோற்றதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இதனால் நாட்டுக்குத் தான் இழப்பு என்றார்.
நன்றி- தேனீ இணையம்
No comments:
Post a Comment