06 March 2010

ஐ.நா நிபுணத்துவக் குழு தேவையற்றது - ஜனாதிபதி

இலங்கையின் யுத்தக் குற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவொன்றை ஐ. நா. செயலாளர் நாயகம் நியமிக்கத் தீர்மானித்துள்ளமை இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது தேவையற்றதும், விரும்பத்தகாததுமான செயலென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாகத் தெரிவித்துள்ளார். ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் நேற்று (வெள்ளி) தொலைபேசி மூலம் ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு பேசியபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட் சேபனையைத் தெரிவித்தாரென ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராய நிபுணர்கள் குழுவை நியமிப்பதுஎந்தவகையிலும் ஏற்புடையதல்ல. இது விரும்பத்தகாத நடவடிக்கையென ஜனாதிபதி, ஐ. நா. செயலருக்கு எடுத்துக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.இராணுவ நடவடிக்கை மூலம் பெருமளவிலான மக்கள் ஏனைய சில நாடுகளில் கொல்லப்படுவதோடு, பாரிய மனித உரிமை மீறல்களும் நடந்த வண்ணமுள்ளன. அத்தகைய நாடுகள் மீது இப்படியான நடவடிக்கைகளை ஐ. நா. எடுக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஐ. நா. அலுவலகம் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment