30 October 2009

முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இணைக்கும் முயற்சி

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, முன்னாள் போராளிகள் 1000 பேரை சமூகத்துடன் மீள ஒன்றிணைக்க சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி (USAID),இரண்டு வருட முன்னோடிச் செயற் திட்டமொன்றுக்கு நிதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில் உள்ளுர் சமுதாயங்களுடன் முன்னாள் போராளிகள் சேர்ந்து பணியாற்றுவதனூடாக, கிழக்கு மாகாணத்தில், மக்களின் பாதுகாப்பையும் திடத்தன்மையையும் அதிகரிப்பதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி மேற்கொள்ளும் இச்செயற் திட்டம் பெயர்ச்சிக்கான சர்வதேச அமையத்தினால் (IOM)நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியின் பணிக் குழுப் பணிப்பாளரான ரெபேக்கா கோன், தெரிவிக்கையில் புதிய வாழ்வை ஆரம்பிக்கும் பொருட்டும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கும் பொருட்டும், முன்னாள் போராளிகள் தொழில்சார் பயிற்சி பெறுவதற்கும் அவர்களுக்கு அவசியமான ஆதரவைப் பெறுவதற்கும் மோதல்களுக்குப் பின்னர் சமுதாயங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கும் இச்செயற் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த உதவியுடன், ஆண்களும் பெண்களும் தமது வாழ்வை மாற்றுவதற்கும் புதிய இலக்குகளை அமைப்பதற்கும் புதிய கனவுகளைக் காண்பதற்கும் ஒரு சந்தர்ப்பத்தைப் பெறுவார்கள்"என்றார்.

இச்செயற்திட்டம் தொழிற் பயிற்சிகளுக்கு வழிகாட்டுவதுடன் உள ரீதியான ஆதரவை வழங்கி தொழிற் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

பொருத்தமான அனுபவத்தையும், திறமைகளையும் கொண்ட பங்குபற்றுநர்கள் சிலர், தமது உள்ளூர் சமுதாயங்களில், சொந்த வர்த்தகத்தை ஆரம்பிப்பதற்கு உதவியாக, சிறு கொடைகளைப் பெறுகின்றார்கள். இச்செயற்திட்டத்திற்கு இதுவரை 400 முன்னாள் போராளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுள் சிலருக்கு பயிற்சியும் வேறு சிலருக்கு வாழ்வாதார உதவியும் இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment