28 October 2009

ஒன்பது ஐநா அதிகாரிகள் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தான் தலை நகரம் காபூலில் மைய பகுதியிலுள்ள ஐ.நா. சபை விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்த தற்கொலை தலிபான் தீவிரவாதிகள் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டதில் ஐ.நா. அதிகாரிகள், ஊழியர்கள் 09 பேர் பலியானார்கள். 09 பேர் காயம் அடைந்தனர். இச் சம்பவம் இன்று காலை 7.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இந்த மாளிகையில் சுமார் நூறு பேரளவில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பலத்த பாதுகாப்பு இருந்த போதும் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவிட்டு உள்ளே சென்றுள்ளனர். தாக்குதல் நடந்த இடத்துக்கு கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டன. அவர்கள் அந்த இடத்தைச் சுற்றி வளைத்து நின்று தாக்கினர். இருதரப்புக்குமிடையே கடும் மோதல் இடம்பெற்றது.

நீண்ட நேர மோதலுக்குப் பிறகு 3 தீவிரவாதிகளையும் படையினர் சுட்டு வீழ்த்தினர். அதன் பிறகு விருந்தினர் மாளிகை பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
தனியாருக்குச் சொந்தமான ஒரு ஹோட்டலையே ஐநா அதிகாரிகள் விருந்தினர் மாளிகையாக மாற்றியிருந்தனர். இங்கு ஐ.நா. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்கி இருந்தனர். இவர்களுடன் பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் அதிகாரிகளும் தங்கி இருந்தனர்.

இத் தாக்குதல் சம்பவத்துக்கு தலிபான் இயக்கம் உரிமை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment