28 November 2009

ஜனவரி 26இல் ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுத் தாக்கல் டிச. 17

ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி நடத்துவதற்குத் தேர்தல் ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 11 மணி வரை இராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.

வேட்பு மனுக்கள் மீதான ஆட்சேபங்களை அதே தினம் காலை 9.00 மணி முதல் காலை 11.30 வரை தெரிவிக்கலாம். எந்தவொரு வேட்பாளரினதும் வேட்புமனு மீதான ஆட்சேபத்தை மற்றொரு வேட்பாளரோ அல்லது வேட்புமனுவில் கையொப்பமிடும் நபரோ தெரிவிக்கலாம்.

அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனு வை தாக்கல் செய்வதற்கு முதல் நாள் நண்பகல் 12 மணிக்கு முன்னர் கட்டுப்பணம் செலுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சியொன்றின் வேட்பாளர் கட்டுப் பணமாக 50 ஆயிரம் ரூபாவும் சுயேச்சை வேட்பாளர் கட்டுப்பணமாக 75 ஆயிரம் ரூபாவும் செலுத்த வேண்டும். தேர்தல் திணைக்களத்தின் கணக்காளர் (நிதி) வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வார்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியொன்றின் வேட்பாளராக அல்லாதோர் தான் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்காளர் இடாப்பு 2008 ஆம் வருட வாக்காளர் இடாப்பாகும். வாக்களிக்க தகுதியுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 140 இலட்சத்து 88 ஆயிரத்து 500 ஆகும்.

No comments:

Post a Comment