12 December 2009

தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க வேண்டுமென இலங்கை அரசிடம் வலியுறுத்தல் - ரொபேட் ஓ பிளேக்


இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அங்குள்ள தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டுமென இலங்கை அரசை வற்புறுத்தியுள்ளதாக தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி ராஜாங்க செயலாளர் ரொபேட் ஒ பிளேக் இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கைக்கு சென்று வந்தேன். இலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள், மீண்டும் தங்களது சொந்த இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டு வரும் விதம் எங்களுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கிறது. அங்கு இன்னும் 1 லட்சத்து 15 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மற்ற அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கே திரும்பி விட்டார்கள். முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களும், சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கவில்லை. இலங்கை ஜனாதிபதி முன்பு சொன்னபடியே, வரும் ஜனவரி மாதத்துக்குள் அவர்கள் அனைவரும் சொந்த இடங்களுக்குச் சென்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

மன்னார் பகுதியில் மீள்குடியேற்றப் பகுதிகளுக்குச் சென்றது பற்றி குறிப்பிட்ட ரொபேட் ஓ பிளேக் மன்னார் பகுதியிலுல் உள்ள கிராமங்களுக்கு சென்றேன். அகதிகள் முகாம்களில் இருந்து அப்பகுதிக்குத் திரும்பிய மக்களிடம் நான் பேசினேன். அங்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மக்கள் தங்களது வீடுகளை கட்டுவதற்கான பொருட்களை இலங்கை அரசு தந்துள்ளது. உணவுப் பொருட்களையும் சிறப்பான முறையில் விநியோகித்து வருகிறது. அங்கு விவசாயப் பணிகள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள், சாலைகள், மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் கிடந்த பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறாக பலவித சேவைகளை அங்குள்ள மக்களுக்கு இலங்கை அரசு வழங்கி வருகிறது. இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும். இந்த நடவடிக்கைககள் உறுதியாக தொடரும் என்று நம்புகிறேன்.

விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் பற்றி குறிப்பிடுகையில் இலங்கையில் உள்ள சில முகாம்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கருதப்படக்கூடிய 11 ஆயிரம் தமிழ் மக்கள் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் விசாரணை இன்றி அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், புலிகளுடன் தொடர்பு இருப்பவர்களை மட்டும் தண்டித்து மற்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டால் அதை நாங்கள் வரவேற்போம் என்றார்.


அடுத்த வருடம் ஒபாமா இந்தியா வருகை பற்றி தெரிவிக்கையில் இந்தியா அமெரிக்கா இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை வலுப்படுத்தவும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகைக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் வந்திருக்கிறேன். அதிபர் ஒபாமாவின் இந்திய வருகை பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உலகின் எதிர்கால பாதுகாப்பையும், நன்மையையும் உறுதி செய்வதில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத கூட்டாளி என்று அதிபர் ஒபாமா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment