30 December 2009

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

இலங்கைத் தமிழர்களின் அரசியல் யாழ்ப்பாணத்தை மையமாக வைத்தே இயங்குகின்றது. இதில் கிழக்குமாகாண மக்கள் மற்றும் முஸ்லீம் மக்களின் அரசியல் அபிலாசைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு இருக்கிறன. இலங்கையின் இடதுசாரிகள் வர்க்க விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தபோதும் இளைஞர்களின் ஆயுத வன்முறை முன்னெடுப்புக்கள் வர்க்க விடுதலையை பின்தள்ளியதுடன் இடதுசாரிகளின் முற்போக்கான சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் மழுங்கடிக்கச் செய்ததது. இடதுசாரிகளை மட்டுமல்ல முற்போக்கான சிந்தனையாளர்களையும் வளர்ச்சியடைந்த புலிப்பாசிசம் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக தமிழ் அரசியல் தலைமையொன்றினை முற்றுமுழுதாக இல்லாதொழித்தது. இந்நிலையில் சர்வதேசத்தின் எதிர்பார்ப்பையும் தமது அபிலாசைகளையும் நிவர்த்திக்கும் வகையில் புலிகளினால் ஒருங்கிணைக்கப்பட்டதே தற்போதைய கூத்தமைப்பு. ‘சொல்வதைச் செய்வதும், செய்வதை அங்கு போய் ஒப்புவிப்பதுமே’ கூத்தமைப்பின் அரசியல் நடவடிக்கையாக இருந்தது.

“தமிழர்களின் இன்றைய நிலைக்கும் இத்தனை அழிவுக்கும் புலிகள் 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எடுத்த முடிவே காரணம்” என்று கூத்தமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் திருவாய் அருளியிருக்கிறார். அஃதானப்பட்டது அன்று பிரதான போட்டியாளராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியிருப்பார். ‘வட்டி, வரி, கிஸ்தி, கொலை, சித்திரவதை’ என்று புலிகள் நிழல் அரசை(?) நடத்த ‘தப்பென்று நினைக்காதே எப்போதும் விளையாடு. அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே. ஏப்பாவி என்றாலும் இன்பத்தைத் தள்ளாதே…..’ என்று கூத்தமைப்பு 22ம் திழைத்திருக்க ‘நானே ராஜா என் கூனே மந்திரி’ என்று ஐ.தே.கட்சி காட்டாட்சி செய்திருப்பதைத்தான் இழந்த சந்தர்ப்பமாக சம்பந்தன் கருதுகிறார்.

முள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளியுடன் அனாமதேய கொலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு பெரிய நிம்மதி என்பதை ஒவ்வொரு நிமிடமும் பயந்துபயந்து வாழ்ந்தவர்களைக் கேட்டால் புரியும். புலிகளின் கட்டாய பிள்ளைபிடிப்புக்கள் முற்றுப்பெற்றிருக்கிறது. அதனால் பெற்றோர் உறவினர்களின் இழப்புக்களும் வேதனைகளும் தடுக்கப்பட்டுள்ளது. தமது நிர்வாகம் என்று சொல்லிக்கொண்ட புலிகள், அரசாங்கம் வழங்கும் நிவாரணப் பொருட்களை அரசாங்க நிர்வாகிகளைக் கொண்டே தமது களஞ்சியத்தில் பதுக்கிக்கொண்டு தாம் நினைத்த விலைக்கு மக்களுக்கு விநியோகித்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக புலிகளைத் தவிர்ந்த புலிகள் அரசியலையே வேறொருவர் முன்னெடுக்க புலிகள் அனுமதிக்கவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வேறொரு ஊடகம்கூட அனுமதிக்கப்படவில்லை. வெளியிலிருந்து இயங்குகின்ற பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் புலிகளுக்கு கால் கழுவவே முண்டியடித்தன.
இன்றைய நிலையிலும் அதுவே தொடருகின்றது. சம்பந்தன் இழந்த சந்தர்ப்பத்தையிட்டு வாடி வதங்கிப்போகிறார். பெரும்பாலான தமிழ் ஊடகங்களோ ஐ.தே.கட்சியின் நிகழ்ச்சி நிரலிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கும் விருப்பமே கூத்தமைப்பின் அடிமன ஆசை. அதுபோலவே புலிகளின் பாசிசத்துக்கு பழக்கப்பட்டுப்போன பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் பொன்சேகாவையே ஜனாதிபதியாக்க விரும்புகின்றன. இவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை பொன்சேகாவை ஆதரிப்பதற்கான நியாயத்தையல்ல ஒரு காரணத்தைத் தன்னும் சொல்லமுடியவில்லை என்பதே.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சமீது பொறாமை கொள்வதற்கான சில காரணங்கள் இருக்கின்றன. பிரபாகரனுடன் முதலிரவு கொண்டாடி தொடங்கிய அரசியல் பித்தலாட்டத்தில் கைவைத்ததுதான் பிரதான காரணம் மற்றுப்படி அரசியல் உரிமைகள் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதோ அல்லது பெருமளவிலான பொதுமக்கள் இறுதியுத்தத்தில் கொல்லப்பட்டதோ காரணமல்ல.
இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து முற்போக்கான அரசியல் மற்றும் அபிவிருத்திகளை முன்னெடுக்கும் சுதந்திரக் கட்சியை புறந்தள்ளி முதலாளித்துவத்தை நோக்கி நகருகின்ற ஐக்கிய தேசியக் கட்சியையே தமிழர் தரப்பு என்று சொல்லப்படுகிற அரசியல் சக்திகள் ஆதரித்துவந்திருக்கின்றன.

இன்றைய நிலையிலும் தமிழ் கூத்தமைப்பு முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை ஆதரிக்கும் கேவலமான நிலையினை எட்டியுள்ளது. இதன் பிரதான சுத்திரதாரி யார் என்பதை யாவரும் அறிவர். சம்பந்தனை கிடுங்குப் பிடிக்குள் வைத்திருக்கும் சாத்தாத் அந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் தான். பத்மநாபா என்கிற அந்த அற்புதமான மனிதரின் பாசறையில் வளர்ந்ததுதான் இந்த கறுப்பாடு. இது இன்று மட்டுமல்ல அன்று தொடக்கம் இன்றுவரை தொடாந்து தனது சாமர்த்தியத்தால் தனது வயிற்றை மட்டும் வளர்த்து வருகிறது. இந்த கறுத்தாட்டுடன் சில கறுத்தாடுகள் சேர்ந்துகொண்டாலும் தலைமை ஆடு பிரேமச்சந்திரன்தான். இவர் முன்னர் சோசலிசத்தை ப+சிக்கொண்டாலும் தற்போது புலிகளுக்கு நிகரான தமிழினவாதத்தை கக்கிக்கொண்டிருக்கிறார். இவ்வாறே புலிகளின் தமிழினவாதத்தை கூத்தமைப்பும் பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் கக்கிக்கொண்டிருக்கின்றன. இந்த பித்தலாட்டமெல்லாம் தமிழ்மக்களுக்குத்தான் வெளிச்சம்.

எவ்வாறு புலிகள் தமிழர்களை ஆட்டுமந்தைகளாக நடத்திக்கொண்டு சென்று முள்ளிவாய்காலில் அம்போவென்று விட்டார்களோ அதேபோலத்தான் இன்று கூத்தமைப்பு மக்களை வழிநடத்த முனைகிறது. அதற்கு பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் ஒத்துதூகின்றன. ‘ஊடக தர்மம்’ என்பதை இவர்களைக் கேட்டுத்தான்?

தமிழ் தேசியத்தில் ஓரளவு ஈடுபாடுகொண்டாலும் கிழக்கு மாகாண அரசியல் தமிழினவாதத்தை கொண்டாடவில்லை. இன்றைய நிலையில் கிழக்கு மாகாண அரசியல் வடக்கு மாகாண அரசியலைவிட முற்போக்கானதாக செயற்படுகிறது. அவர்களுடைய அரசியல், பொருளாதார, காலாசார செயற்பாடுகள் முன்னோக்கி நகர்வது பெருமைக்குரிய விடயம். குறிப்பாக கிழக்கு மாகாண தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களிடையே ஐக்கியமான செயற்பாடுகள். ஒருசில குறைபாடுகள் இருப்பினும் புலிகளின் காலப்பகுதியிலும் பார்க்க பன்மடங்கு முன்னேற்றகரமானது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க கிழக்குமாகாண பிரதான அரசியல் தலைவர்களான அமைச்சர் முரளிதரனும் முதலமைச்சர் சந்திரகாந்தனும் முன்வந்திருப்பதுடன் இருவரும் இணைந்து செயற்படப்போவதாகவும் தெரிவித்திருப்பதாவது அவர்களுடைய மக்கள் நலன்மீதான அக்கறையை சுட்டிக்காட்டுவதற்கான ஒரு எடுத்துக்காட்டு. இவர்களுக்குள் சிறுசிறு சச்சரவுகள் இருந்தாலும் பொது அரசியல் என்று வருகின்றபோது இருவரும் கரம்கோர்ப்பது கிழக்கு வாழ் மக்களின் ஒளிமயமான எதிர்காலத்தையே சுட்டி நிற்கிறது. இனிவரும் காலங்களில் இருவரும் இணைந்தே செயற்படுவார்கள் என்பது கிழக்குவாழ் மக்களின் எதிர்பார்ப்பு.

இது வடக்குமாகாண மாற்று அரசியல் தலைமைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு. இப்பொழுதும் முட்டையில் மயிரைப் பிடுங்குவதும், நீறுப+த்த நெருப்பாக பகைமையை வைத்துக்கொள்வதும் மாற்று அரசியல் களத்துக்கு உதாவது. பேசும்போதும், பேட்டியின் போதும் கதவுகளை அகலத்திறந்தால் மட்டும்போதாது! நேசக்கரங்களை நீட்டினாலும் போதாது! அல்லது நாம் இப்போதும் கதைத்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்று சொல்வதினாலும் ஆகப்போவதொன்றுமில்லை.

பொருளாதார, ஆள் மற்றும் அதிகார பலங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அப்படியே ஓரங்கட்டி ஒருபிடி மண்ணை அள்ளிப்போடுவதல்ல நல்ல அரசியல் தலைமைக்கு அழகு. அதுவும் அரசியலில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

தனது இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்றுதான் பிரபாகரன் கொன்றுகொன்று போட்டான். கடைசியில் கேள்விகளே அவனது இருப்பாகியது.

எளிமையும் நேர்மையும்கொண்ட எத்தனையோ அதிசிறந்த அரசியல் தலைவர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் எவரும் தனக்கு போட்டியாக இன்னொருவர் வந்துவிடுவார் என்று செயற்பட்டதில்லை. அவ்வாறு செயற்படத்தொடங்கினாலே அவர்களுடைய எளிமையும் நேர்மையும் கேள்விக்குறியாகிவிடும்.

எனவே வடக்குமாகாண மாற்று அரசியல் தலைவர்கள் விட்டுக்கொடுப்புக்களுடன் பெற்றுக்கொண்டு இணைந்து செயற்படுவதன் மூலம் ‘புலி-கூத்தமைப்பு’ அரசியலிலிருந்து வடக்கு வாழ்மக்களைக் காப்பாற்றி முன்னேற்றகரமான பாதையில் வழிநத்தவேண்டும் என்பதே இன்றைய சூழலில் அநேகரின் வேண்டுகோள். எதிர்பார்ப்பு.

சதா. ஜீ.

நன்றி- தேனீ இணையம்

No comments:

Post a Comment