13 August 2014

வழமையைவிட வடமாகாணத்தில் பாரிய வரட்சி - இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர்திட்டம்?

இரணைமடுக் குளத்தை புனரமைப்புச் செய்து. நீர்க் கொள்ளளவை அதிகரித்து வடமாகாணத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவது காலத்தின் அவசியமாகும். வடக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்றிருப்பவர்கள் மேற்படி திட்டத்தை செயற்படுத்தவிரும்பாமலும், செயற்படுத்தத் தெரியாமலும் குடிநீர் விநியோகத்திட்டத்தை இழுத்தடிப்புச் செய்கின்றனர் என யாழ்ப்பாணம் கச்சேரியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற யாழ்.குடாநாட்டின் வரட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீரவு காண்பது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
 
அவர் அங்கு மேலும் கூறுகையில் இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண சபை அரசியல் காரணங்களைக் கூறி இழுத்தடிப்புச் செய்து கொண்டிருக்கின்றது.
 
எனவே மேற்படித் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி என்றவகையில் விசேட திட்டமொன்றை வகுத்து வடக்கு மக்களின் குடிநீர்ப்பிரச்சினைக்கு நிலையான தீர்வைக் காணவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ்  ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நேரடியாக கோரிக்கை விடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
 
தொடர்ந்து அவர் உரையாற்றும் போது மாகாண சபையை பொறுப்பேற்றிருக்கும் கூட்டமைப்பினர் இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத் திட்டத்தில் அக்கறை செலுத்தாமல் இந்த நிலை தொடருமாக இருந்தால் இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகத்திட்டத்துக்கான நிதி திரும்பிவிடக்கூடிய ஆபத்தும் ஏற்படக்கூடுமெனக் கூறினார்.
 
வழமைவிடவும்  வடமாகாணம் பாரிய வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்.குடாநாடு மட்டுமல்லாது, கிளிநொச்சியிலும் பளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி போன்ற பகுதிகளும் வரட்சி குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுத்துள்ளது இவ்விடயத்தில் வடக்கு மாகாண சபையினர் எவ்விதமான பங்களிப்பைச் செய்துள்ளனர் என்றும் வட மாகாண செயலாளரிடம் அமைச்சர் கேள்வியெழுப்பினார்.
 
எவ்வாறெனினும் மக்கள் தற்போது எதிர் கொண்டுள்ள வரட்சி நெருக்கடிக்கு தீர்வுகாண்கின்ற நடவடிக்கையில் பிரதேச செயலாளர்களும், பிரதேச சபைச் செயலாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment