02 November 2015

இந்திய துணைத்தூதுவர் - மீனவ சங்க பிரதிநிதிகள் சந்திப்பு


இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதனால் மன்னார் மாவட்ட மற்றும் வட பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜாவுக்கும் மன்னார் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில்  மன்னாரில் ஞாயிறு 01-11-2015 அன்று இடம்பெற்றது.
 
மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் அதன் தலைவர் என்.எம்.ஆலம் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து மீன்பிடி கிராமங்களின் மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறையின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் என்.மெராண்டா கியோர் கலந்துகொண்டார்.
 
இந்திய இலுவைப்படகுகள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது வட பகுதி மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைத் தொகுதிகள் இந்திய இலுவைப்படகுகளில் சிக்கி சேதத்துக்கு  உள்ளாகின்றமை குறித்தும் இதனால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டன.
 
குறிப்பாக மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளும் இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜாவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதோடு மீனவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் அவருக்கு கையளிக்கப்பட்டது.
 
இந்த வியடம் குறித்து கருத்துத் தெரிவித்த இந்திய துணைத்தூதுவர் என்.நடராஜன் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நான் நன்கு அறிவேன். இவர்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ளவே நான் இங்கு வந்தேன்.
 
மீனவர்களின் பிரச்சினைகள் எனக்குத் தெரிந்திருந்தாலும் பொதுவாக அவர்களை சந்தித்து கலந்துரையாடுவதால் மேலும் பல பிரச்சினைகளைத் தெரிந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது.
மன்னாருக்கு வந்து கடற்தொழிலாளர்களையும் பிரதி நிதிகளையும் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. இச்சந்திப்பின் ஊடாக நமது மக்களுக்கு இன்னும் உதவிகள் செய்ய வேண்டும். மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார்.

No comments:

Post a Comment