அரசியலமைப்பு மாற்றம் குறித்த மக்களின் கருத்தறியும் குழு கடந்த முதலாம் திகதியன்று தனது பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்துள்ளது. சிறுபான்மையினர் சார்பான பரிந்துரைகள் இவற்றில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. இந்நிலையில் இப்பரிந்துரைகளை யதார்த்தப்படுத்துவதற்கு சிறுபான்மை அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு உரிய அழுத்தத்தினைக் கொடுக்க வேண்டும் என்று புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். மேலும் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பில் மேலும் விரிவாக ஆராயப்பட்டு, உரியவாறு புதிய அரசியலமைப்பில் உள்ளீர்ப்பு செய்யப்பட வேண்டுமெனவும் இவர்கள் வலியுறுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டில் மிகவும் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக விளங்குகின்றது. ஜனநாயகத்துக்கு அரசியலமைப்பு வலுச்சேர்க்கின்றது. ஐக்கியம் மிக்க நாட்டினை கட்டியெழுப்ப அரசியலமைப்பு உந்துசக்தியாக அமைகின்றது. எனினும் இலங்கையை பொறுத்தவரையில் சமகால அரசியலமைப்பு தொடர்பில் அதிருப்தியான வெளிப்பாடுகளையே அதிகமாகக் காணக்கூடியதாக உள்ளது. நாட்டின் ஐக்கியத்துக்கு வித்திட வேண்டிய அரசியலமைப்பு பிரிவினைக்கே தூபமிடுகின்றது. சிறுபான்மை மக்களை அரவணைத்துச் செல்வதாக இந்த அரசியலமைப்பு அமையவில்லை. நாட்டின் ஜனநாயகத்தையும் அமைதியையும் சமகால அரசியலமைப்பு கேள்விக்குறியாக்கி இருக்கின்றது என்றெல்லாம் பல்வேறு வகையிலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில் உண்மையும் இருக்கத்தான் செய்கின்றது. இலங்கையர்களாகிய நாம் அரசியல் யாப்பில் நம்பிக்கை இழந்துவிட்டோம். இழந்த இந்த நம்பிக்கையை உண்மையான சட்டநெறியின் மூலம் மீண்டும் ஏற்படுத்தும் வரை வடக்கு, கிழக்கு பிரச்சினையை நாம் உண்மையாக தீர்க்கமுடியாது என்று திருமதி கிஷாலி பின்ரோ ெஜயவர்த்தன ஒருமுறை தெரிவித்திருந்தார். கிஷாலி பின்ரோ வீரத்திற்கான சர்வதேச பெண்கள் விருதினை வென்றவராக விளங்குகின்றார்.
சமகால அரசியல் யாப்பின் மூலமாக நாட்டு மக்கள் பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்து விட்டனர். ‘நாம்’ என்ற சிந்தனையை விடுத்து ‘நான்’ என்ற சிந்தனைக்கே இது அதிகமாக இடமளித்ததாக விமர்சனங்களும் இருந்துவருகின்றன. எனவே சமகால அரசியலமைப்பின் அதிருப்தி நிலைகளைக் கருத்திற்கொண்டு புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. இதனடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான தேசிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வந்திருக்கின்றார். தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கரு சாத்தியமாகியுள்ள நிலையில் இதனூடாக பல்வேறு வெற்றி இலக்குகளையும் எட்டுவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டிருக்கின்றது. இதில் ஒன்றாகவே புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் முயற்சியும் இடம்பெற்றுள்ளது.
புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் நோக்குடன் பொதுமக்கள் கருத்தறியும் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. இக்குழு நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து கொண்டுள்ளது. தனி நபர்களின் கருத்துக்கள், அமைப்புக்கள் மற்றும் குழுக்களின் கருத்துகள் என பலவும் இதில் உள்ளடங்குகின்றன. சிறுபான்மை மக்கள் குறித்து எத்தகைய விடயங்கள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படுதல் வேண்டும் என்று சிறுபான்மையினர் சார்ந்த அமைப்புக்களும் குழுக்களும் தனிநபர்களும் தத்தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி இருந்தனர். இதற்கேற்ப மலையகத்தை பொறுத்தவரையில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களும் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட தனிநபர்களும் மலையகத்துடன் தொடர்புடைய பல்வேறு விதமான கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர். தனியான அதிகார அலகு மலையகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும். காணியுரிமை மற்றும் வீட்டு உரிமை பெற்ற சமூகமாக இம்மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான வழிவகைகள் புதிய அரசியல் யாப்பின் ஊடாக ஏற்படுத்தப்படுதல் வேண்டும். மலையக சமூகம் பின்தங்கிய சமூகம் என்று கருதி விசேட உதவிகளையும் சலுகைகளையும் மலையக மக்களுக்காக அரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும். இளைஞர் அபிவிருத்தி கருதிய திட்டங்களுக்கு முக்கியத்துவமளிக்கப்படுதல் வேண்டும் என்றெல்லாம் பல்வேறு கோரிக்கைகள் பொதுமக்கள் கருத்தறியும் குழுவிடம் முன்வைக்கப்பட்டிருந்தன.
வடக்கு மக்களும் மலையகத்தவர்களின் உரிமைகள் உரியவாறு அரசியல் யாப்பின் ஊடாக நிலைநிறுத்தப்படுதல் வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தமையும் தெரிந்த விடயமாகும்.
இதுபோன்றே முஸ்லிம் சமூகத்தினரும் வடக்கு மக்களும் தத்தமது உரிமைகளுக்கு புதிய அரசியலமைப்பு உத்தரவாதமளிக்க வேண்டும் என்ற வகையில் பல்வேறு முன்வைப்புக்களை பொதுமக்கள் கருத்தறியும் குழுவிடம் முன்வைத்திருந்தனர். இந்நிலையில் புதிய அரசியலமைப்பு சிறுபான்மையினருக்கு சாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்ற எண்ணம் சிறுபான்மை மக்களிடையே வலுப்பெற்று வருகின்றது. சிறுபான்மையினரின் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் வீணடிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைந்துவிடுதல் கூடாது.
இதற்கிடையில் கடந்த முதலாம் திகதி அரசியலமைப்பு மாற்றம் குறித்த மக்கள் கருத்தறியும் குழு அரசாங்கத்திடம் பல்வேறு பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. இலங்கையில் நீண்டகாலமாக இனப்பிரச்சினை என்பது புரையோடிப்போய் இருக்கின்றது. இங்கிருப்பது இனப்பிரச்சினை அல்ல. பயங்கரவாதப் பிரச்சினையே என்று இனவாதிகள் மார்தட்டிக் கொண்டாலும் உண்மையில் இனப்பிரச்சினையே இங்குள்ளது என்பதனை புத்திஜீவிகளும் சர்வதேசமும் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் கருத்தறியும் குழு பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றது. இதற்கேற்ப இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட 75 பேரைக் கொண்ட செனட் சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இச்செனட் சபையானது பாராளுமன்றத்தின் எதேச்சாதிகார செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதாக அமைதல் வேண்டும்.
மேலும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உப–ஜனாதிபதியாக பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்படுதல் வேண்டும் என்று குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் மலையகத்தின் அமைப்பொன்று இந்தியத் தமிழர், இலங்கை தமிழர், முஸ்லிம்கள் என்று மூன்று சிறுபான்மை இனங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் மூன்று உப ஜனாதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று கருத்தறியும் குழுவிடம் பரிந்துரை செய்திருந்ததும் தெரிந்த விடயமாகும். மேலும் கருத்தறியும் குழு இன்னும் பல பரிந்துரைகளையும் அரசாங்கத்திற்கு முன்வைத்திருக்கின்றது. மாகாணங்களுக்கு சிறியளவிலான பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும். ஒவ்வொரு மாகாணத்திற்கும் சட்டமா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பொலிஸ் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட வேண்டும். காணி அதிகாரங்களை பகிர்வதில் தேசிய காணி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். மொழி, இனம், மதம் அல்லது இனத்துவ அடிப்படையில் எந்த அதிகார அலகும் உருவாக்கப்படக் கூடாது என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.
மலையக மக்கள் தொடர்பிலான பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன. அதிகாரப் பகிர்வு என்று வரும்போது மத்திய மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தனியான அரசியல் அலகு ஏற்படுத்தப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளையும் சார்ந்ததாக இது இருக்க வேண்டும். தோட்டக் குடியிருப்புக்கள் அனைத்தையும் கிராமமாக பிரகடனப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment