இலங்கையில் இலட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் ஈவிரக்கமின்றி சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளால் இனப்படுகொலை செய்யப்பட்டதை சர்வதேச சமூகம் இன்னும் கண்டித்துக் கொண்டிருக்கிறது. இந்த இனப்படுகொலைக்கு நீதி கோரி உலகத் தமிழர்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே அல்ல என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விகடன் குழுமத்தின் தடாகம் மாத இதழின் சுகுணா திவாகர், வெய்யில் ஆகியோருக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கேள்வி: ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைக்குப் பின்னால் இந்திய அரசின் கரங்கள் இருந்தன' என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியத் தேசியத்தை ஆதரிப்பவர் என்ற முறையில் இதுகுறித்த உங்கள் கருத்து என்ன? உங்களது 'உலோகம்' நாவல், இந்திய அமைதிப்படை குறித்த கட்டுரை ஆகியவை தொடர்ச்சியாக ஈழவிடுதலைக் குரல்களுக்கு எதிராக இருக்கின்றனவே?''
பதில்: முதலில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சமூகத்தில் எதிர்ப்பாகப் பார்க்காது. நக்சலைட் போலத்தான். 1960, 70-களில் புரட்சிகரக் கருத்தியல் காலகட்டம் உருவானபோது, உலகம் முழுக்க அரசுக்கு எதிரான பல புரட்சிகள் நடந்தன. காங்கோ, பொலிவியா, இந்தோனேஷியா, மலேசியா என அது ஒரு பெரிய பட்டியல். இந்தியாவில் நக்சலைட் இயக்கங்களைச் சேர்ந்தவர்களை இந்திய அரசு கொன்றொழித்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்றுதானே இந்தியாவில் நக்சலைட் போராட்டத்தை ஒழித்தார்கள். இதேமாதிரியான செயற்பாட்டைத்தான் இலங்கை அரசும் மேற்கொண்டது. எனவே, அரசு தனக்கு எதிரானவர்களைக் கொன்றது என்றுதான் பார்க்கிறேனே தவிர, அதை இனப்படுகொலை என்று பார்க்கக் கூடாது.
படுகொலையானார்கள். ஆனால் இலங்கை அரசு, தமிழர்களை மட்டும் கொல்லவில்லை. இலங்கையைச் சேர்ந்த இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி-.யைச் சேர்ந்த 72,000 பேரையும் அதே அரசுதானே கொன்றழித்தது? கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள்தானே? எங்கே இரக்கம் காட்டியது சிங்கள அரசு? ஜே.வி.பி-.க்கு ஓர் அணுகுமுறை, புலிகளுக்கு ஓர் அணுகுமுறை என்றால்தான், அது சிங்கள இனவாதமாக இருக்க முடியும் ஆக, அங்கே நடந்தது அரச வன்முறை. அரசு தனக்கு எதிரான போரை, போராகத்தான் பார்க்கும். புலிகள் பெரும் போரைத் தொடங்கினார்கள், அவர்கள் போரை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
காந்தி ஏன் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரைத் தொடங்கவில்லை? ஆயுதம் ஏந்தினால் என்ன நடக்குமென்று அவருக்குத் தெரியும். பிரிட்டிஷ் இராணுவத்தின் வாளை அதன் உறையிலிருந்து உருவவிடக் கூடாது என்பதில் காந்தி தெளிவாக இருந்தார். புலிகளின் முதன்மையான தவறு, அவ்வளவு வலிமையற்ற மக்களை ஆயுதத்தோடு அரசுக்கு எதிராகக் கொண்டு நிறுத்தியது. இதை ஏற்றுக்கொண்டுதான் நாம் மேலும் இதுகுறித்துப் பேச முடியும்.
மேலும், ‘இலங்கையில் அறவழிப் போராட்டங்கள் நடந்து, அதற்குப் பிறகும் அடக்குமுறை தொடர்ந்ததால்தான் ஆயுதப் போராட்டம் வந்தது' என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. செல்வநாயகம் போன்றவர்களால் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டம் என்பது குறைந்தகாலம்தான். நீண்டகாலம் அங்கு ஆயுதப் போராட்டம்தான் நடைபெற்றது. அதனால், குமரன் பத்மநாபா போன்ற ஆயுதத் தரகர்கள் பலன் பெற்றார்கள் என்பதுதான் உண்மை. இது பெரும் உரையாடலாகத் தொடரவேண்டிய விடயம் என்றார் ஜெயமோகன்.
நன்றி- வீரகேசரி
No comments:
Post a Comment